Sunday, August 13, 2017

382. தோழி கூற்று

382. தோழி கூற்று

பாடியவர்: குறுங்கீரனார்.
திணை: முல்லை.
கூற்று : பருவவரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, ”பருவமன்று. வம்புஎன்று வற்புறீஇயது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பிவந்துவிடுவதாகக் கூறிச் சென்றான். கார்காலம் வந்தது. அதன் அறிகுறியாக மழை பெய்கிறது. முல்லைக்கொடிகளில் மலர்கள் மிகுந்து காணப்படுகின்றன. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. தலைவன் வராததால் வருத்தமடைந்த தலைவியை நோக்கித் தோழி, “ இது கார்காலம் அன்று. இப்பொழுது பெய்யும் மழை காலமல்லாத காலத்தில் பெய்யும் மழை. இது கார்காலமானால், தலைவர் வாராமல் இருப்பாரோ?” என்று கூறித் தலைவியை ஆற்றுவிக்கிறாள்.

தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை
முகைதலைத் திறந்த நாற்றம் புதல்மிசை
பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல
வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று
காரிது பருவம் ஆயின்
வாரா ரோநம் காத லோரே. 

கொண்டு கூட்டு: தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை முகை தலை திறந்த நாற்றம் புதல்மிசை பூமலி தளவமொடு, தேம் கமழ்பு கஞலமழை வம்புப் பெய்யும். இது வம்பன்றுகார்ப் பருவமாயின்  நம் காதலோர் வாராரோ?

அருஞ்சொற்பொருள்: தலை திறந்த = அவிழ்ந்த; புதல் = புதர்; மலிந்த = நிறைந்த; தளவம் = செம்முல்லை; கஞலுதல் = நெருங்குதல்; வம்பு = புதுமை; வம்பு பெய்யும் = காலமல்லாத காலத்துப் பெய்யும் மழை.

உரை: குளிர்ந்த மழைத்துளியை எதிர்கொண்ட பசுமையான  கொடியாகிய முல்லையின், அரும்புகள் மலர்ந்த மணம், புதரில், பூக்கள் நிறைந்த  செம்முல்லையோடு, தேன்மணக்கும் வண்ணம் நெருங்கித் தோன்றும்படி, மேகம் காலமல்லாத காலத்துப் பெய்யும் மழையைப் பெய்கிறது. இது உண்மையான கார்காலமானால், நம்தலைவர் வாராதிருப்பாரோ?
சிறப்புக் குறிப்பு:  “தலைவர் தாம் கூறிய சொல் தவறாதவர். அவர் வராமல் இருப்பது, இது கார்காலம் அன்று என்பதற்கு அடையாளம். மற்றும்,  முல்லையும் தளவமும் மலர்தலும், மழை பெய்வதும் கார்காலத்திற்குரிய அடையாளம் அல்லஎன்பது தோழியின் கருத்துகார்காலம் வந்துவிட்டது என்பதைத் தோழி அறிந்திருந்தாலும், தலைவியை ஆற்றுவிப்பதற்காக, அது கார்காலம் அன்று என்று கூறினாள். தோழியின் கூற்று,  
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த   
நன்மை பயக்கு மெனின்.                                                                 (குறள் - 292)

என்ற குறளுக்கு எடுத்துகாட்டு என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment