Sunday, October 16, 2016

262. தோழி கூற்று

262. தோழி கூற்று

பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 16 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று : உடன்போக்கு நேர்ந்த தோழி, கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது. (நேர்ந்த = உடன்பட்ட)
கூற்று விளக்கம்: ஊர்மக்கள் தலைவன் தலைவியின் களவொழுக்கத்தைப் பற்றிப் பழிச்சொற்கள் பேசுகிறார்கள். தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்விப்பதற்கு அவள் பெற்றோர்கள் உடன்படவில்லை. தலைவியின் தாய் தலைவியைக் காவலில் வைத்தாள்.  தலைவனும் தலைவியும் தங்களின் சூழ்நிலையை நினைத்து மிகவும் வருந்துகிறார்கள். அவர்களின் நிலையைக் கண்ட தோழி, தலைவனுடன் பேசி அவர்களின் உடன்போக்குக்கு ஏற்பாடு செய்தாள். தான் உடன்போக்குக்கு ஏற்பாடு செய்ததைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

ஊஉ ரலரெழச் சேரி கல்லென
ஆனா தலைக்கும் அறனி லன்னை
தானே இருக்க தன்மனை யானே
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க
உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு
விண்தொட நிவந்த விலங்குமலைக் கவாஅற்
கரும்புநடு பாத்தி யன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே. 

கொண்டு கூட்டு: ஊஉர் அலரெழ, சேரி கல்லெனஆனாது அலைக்கும் அறன்இல் அன்னை தன்மனையானே தானே இருக்க, சேய்நாட்டு விண்தொட நிவந்த விலங்குமலைக் கவான்  கரும்புநடு பாத்தி அன்ன பெருங்களிற்று அடிவழி நிலைஇய நீர் நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க அவரொடு உணல் யான் ஆய்ந்திசின்

அருஞ்சொற்பொருள்: கல் = ஆரவாரத்தைக் குறிக்கும் ஒலிக்குறிப்பு; ஆனாது = இடைவிடாது; அலைக்கும் = துன்புறுத்தும்; எயிறு = பல்; தயங்க = விளங்க; ஆய்ந்திசின் = சிந்தித்து  முடிவு செய்துள்ளேன்; ஆல்அசைச்சொல்; சேய்மை =நெடுந்தூரம் ; நிவந்த = உயர்ந்த; விலங்குதல் = குறுக்கிடுதல்; கவான் = பக்கமலை; நிலைஇய = தங்கிய.

உரை: ஊரில் பழிச்சொல் உண்டாக, தெருவில் உள்ளவர்கள் கல்லென்று ஆரவாரிப்ப,  இடைவிடாமல் நம்மை வருத்துகின்ற,  அறநெஞ்சம் இல்லாத தாய் தன் வீட்டில்,  உன்னைப் பிரிந்து தான் தனியாக இருக்கட்டும்.  நெடுந்தூரத்தில் உள்ள நாட்டின்கண், வானத்தைத் தொடும்படி உயர்ந்த,  குறுக்காக வளர்ந்த மலையின் அடிவாரத்தில் உள்ள, கரும்பை நடுவதற்குத் தோண்டிய  குழியைப் போன்ற,  பெரிய ஆண்யானையினது அடிச்சுவட்டில் தங்கிய நீரை, உன் தலைவரோடு,  நெல்லிக்காயைத் தின்ற, முள்ளைப் போலக் கூரிய பற்கள் விளங்கும்படி நீ உண்ணுவதை நான் நினைத்தேன்.

சிறப்புக் குறிப்பு: நெல்லிக்காய் சற்று புளிப்பாக இருக்கும். அதைத்தின்ற பிறகு நீரைக் குடித்தால், அந்த நீர் இனிப்பாக இருக்கும். அதுபோல், உடன்போக்கில் துன்பம் இருந்தாலும், தலைவனோடு கூடி வாழும் வாழ்க்கை இனிதாக இருக்கும் என்று தோழி கூறுகிறாள்.

261. தலைவி கூற்று

261. தலைவி கூற்று

பாடியவர்: கழார்க் கீரனெயிற்றியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 35 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக் குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காக இரவில், தலைவியின் வீட்டுக்கு அருகில் வந்து நிற்கிறான். அவன் வந்திருப்பது தலைவிக்கும் தோழிக்கும் தெரியும். ”தலைவரது வரவை எதிர்பார்த்து நான் வருந்தி இரவெல்லாம் தூங்காமல் இருந்தேன்." என்று தலைவனின் காதுகளில் கேட்குமாறு, தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள். அவள் வருத்தத்தை அறிந்தால், தலைவன் விரைவில் திருமணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வான் என்று தலைவி நினைக்கிறாள்.

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
நள்ளென் யாமத் தையெனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! காவலர் கணக்கு ஆய் வகையின் வருந்தி என்  நெஞ்சு புண்ணுற்ற விழுமத் தானே பழமழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய சிதட்டுக் காய் எண்ணின் சில்பெயல் கடைநாள் சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான்
நள்ளென் யாமத்து ஐ எனக் கரையும் அஞ்சுவரு பொழுதினானும் என்கண் துஞ்சா.  

அருஞ்சொற்பொருள்: பதன் = பதம்; உருகுதல் = மெலிதல்; சிதடு = உள்ளீடின்மை; சிதட்டுக்காய் = உள்ளீஈடு இல்லாத காய்; எண் = எள்ளு; முனைஇய = வெறுத்த; காரான் = எருமை; நள் = செறிந்த; யாமம் = நள்ளிரவு; கரைதல் = ஒலித்தல்; துஞ்சுதல் = தூங்குதல்; காவலர் = நாழிகைக் கணக்கர்; கணக்கு = நாழிகைக் கணக்கு; விழுமம் = துன்பம்.
உரை: தோழி!, வாழி! நாழிகைக் கணக்கர் இரவில் காலக் கணக்கை ஆராய்வதைப் போல், ஆராய்ந்து வருந்தி,  நெஞ்சம் புண்பட்ட  துயரத்தால் நான் உறக்கம் இழந்தேன். முன்பு, மிகுதியாக மழை பெய்ததால் பதம் கெட்டு அழிந்து மெலிந்த,  உள்ளீடு இல்லாத காய்களை உடைய எள்ளுச்செடிகளைப் போல், மன உளைச்சலுடன் தன் நிம்மதியை இழந்து,குறைவாக மழை தூறும் கார்காலத்தின் இறுதி நாட்களில்,  சேற்றில் நிற்பதை வெறுத்து,  சிவந்த கண்களை உடைய எருமை,  இருள் செறிந்த நடு இரவில்,  என்று கத்துகின்ற,  அச்சம் உண்டாகும் காலத்திலும், என்னுடைய கண்கள், தூங்காமல் விழித்திருந்தன.
சிறப்புக் குறிப்பு: நாழிகைக் கணக்கர் இரவில் தூங்காமல் நாழிகையைக் கணக்கிட்டு அதை மணியோசையால் ஊரில் உள்ளவர்களுக்கு அறிவிப்பர். ”நாழிகைக் கணக்கர் உறங்கிவிட்டால், நாழிகை அறிவிப்பது தவறிவிடும். அதுபோல், நான் உறங்கிவிட்டால், தலைவன் வரும் நேரத்தை அறியாமல் அவனைச் சந்திக்க முடியாமல் போய்விடும்.” என்று தலைவி கூறுகிறாள். அச்சம் தரும் இரவு நேரத்தில், தான் துயரத்தோடு உறங்காமல் இருப்பதை அறிந்தால் தலைவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்ற நோக்கத்தோடு, தலைவன் காதுகளில் கேட்குமாறு தன் நிலையைத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பழமழை பொழிந்து எள் பதன் அழிந்து சிதட்டுகாய் எண்ணின்என்றது கார்காலத்தில் மிகுந்த அளவில் மழை பெய்ததால் எள்ளுச்செடிகளில் உள்ள காய்கள் பதம் அழிந்து, அழுகி உள்ளீடு ஒன்றும் இல்லாமற் போனது என்பதைக் குறிக்கிறது. கார்காலத்தில் அதிக மழை பெய்ததால் எருமை இருக்கும் இடத்தில், கார்காலத்தின் இறுதி நாட்களில்கூட சேறு மிகுதியாக இருக்கிறது. சேற்றை விரும்புவது எருமையின் இயல்பு. அத்தகைய எருமைகூட, கார்காலத்தில் அதிகமாகப் பெய்த மழையால் சேற்றில் இருப்பதை வெறுக்கிறது. அதிகமாக மழை பெய்த கார்காலம் முழுவதும் தலைவனுக்காகக் காத்திருந்து, எள்ளுச் செடி தன் உள்ளீட்டை இழந்தது போல், எருமை தன் மன நிம்மதியை இழந்தது போல், தலைவியும் தன் மன வலிமையை இழந்து வருந்தி உறங்காமல் இருக்கிறாள் என்றும் பொருள்கொள்ளலாம்.


260. தோழி கூற்று

260. தோழி கூற்று

பாடியவர்: கல்லாடனார். இவர் கல்லாடம் என்ற ஊரினராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.  கல்லாடத்துக் கலந்து இனிது அருளிஎன்ற மாணிக்கவாசகர் வாக்கால் கல்லாடம் என்பது ஒருசிவத்தலம் என்று அறியப்படுகிறது.  ஆனால், ”கல்லாடம் இப்பொழுது எப்படி அழைக்கப்படுகிறது? அது எங்கே உள்ளது?” முதலிய வினாக்களுக்கு விடை தெரியவில்லை.  இவர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், அம்பர் கிழான் அருவந்தை, பொறையாற்றுக் கிழான் ஆகியோரைப் பாடியுள்ளார்.  புறநானூற்றில் இவர் ஐந்து செய்யுட்கள் (23, 35, 371, 385, 391) இயற்றியது மட்டுமல்லாமல், அகநானூற்றில் ஏழு செய்யுட்களையும் (9, 83, 113, 171, 198, 209, 333) குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களையும் (260, 269) இயற்றியுள்ளார்.  இவர் பாடல்களில் பல வரலாற்றுச் செய்திகள் காணப்படுகின்றன.
திணை: பாலை.
கூற்று: அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிப் பிரிந்து சென்றான். கார்காலம் வந்துவிட்டது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. அதனால், தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறாள். “தோழி! நீ வருந்தாதே. தலைவன் வருவான் என்பதற்கு அறிகுறியாக நல்ல சகுனங்கள் காணப்படுகின்றன. அதனால், அவன் விரைவில் வந்துவிடுவான்.” என்று கூறித் தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

குருகும் இருவிசும் பிவரும் புதலும்
வரிவண் டூத வாய்நெகிழ்ந் தனவே
சுரிவளைப் பொலிந்த தோளுஞ் செற்றும்
வருவர்கொல் வாழி தோழி பொருவார்
மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை
வண்தேர்த் தொண்டையர் வழையம லடுக்கத்துக்
கன்றி லோரா விலங்கிய
புன்றா ளோமைய சுரனிறந் தோரே. 

கொண்டு கூட்டு:
தோழி! வாழி! குருகும் இருவிசும்பு இவரும்; புதலும் வரிவண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவேசுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்
பொருவார் மண்ணெடுத்து உண்ணும் அண்ணல் யானை வண்தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்துகன்றுஇல் ஓர் ஆ விலங்கிய புன்தாள் ஓமைய சுரனிறந் தோர் வருவர்கொல்?

அருஞ்சொற்பொருள்: குருகு = நாரை; இரு = பெரிய; விசும்பு = ஆகாயம்; இவர்தல் = பறத்தல்; புதல் = புதர்; வரி = கோடு; வாய் நெகிழ்ந்தன = மலர்ந்தன; சுரி = முறுக்குள்ள; பொலிந்த = அழகுடன் விளங்கும்; செற்றும் = செறியும் (இறுகும்); பொருவார் = போரிடுபவர்; மண்ணெடுத்து உண்ணுதல் = பகவரை வென்று அவர் நாட்டுப் பயன்களைத் தாம் நுகர்தல்; அண்ணல் = தலைமை பொருந்திய; வண் = வளமான; தொண்டையர் = தொண்டை நாட்டை ஆண்டவர் மன்னர்கள்; வழை = சுரபுன்னை மரம்; அமலுதல் = நெருங்குதல்; சுரன் = சுரம் = பாலை நிலம்.

உரை: தோழி! நீ வாழ்க! நாரைகள் பெரிய வானத்தில் உயரப் பறக்கின்றன;  புதர்களிலுள்ள அரும்புகள்,  வரிகளையுடைய வண்டுகள் ஊதுவதனால் மலர்ந்தன; சுழித்த சங்காற் செய்த வளையல்களால் விளங்கிய தோள்களில் அவ்வளையல்கள் செறிந்தன (இறுகின). இவ்வாறு நல்ல நிமித்தங்கள் தோன்றுகின்றன. பகைவரது  நாட்டை வென்று பயன் அடைகின்ற தொண்டைமான்கள், தலைமை பொருந்திய யானைகளையுடைய யனைப்படையையும், வளமான தேரப்படையையும் உடையவர்கள்அவர்களுக்குரிய, சுரபுன்னை மரங்கள் நெருங்கிய மலைப்பக்கத்தில், கன்றில்லாத ஒரு பசுவை, நிழலினால் தம்மிடம் வரச் செய்து தடுத்த,  சிறிய அடிப்பக்கத்தையுடைய ஓமை மரங்களை உடைய பாலை நிலங்களைக் கடந்து சென்ற தலைவர் வருவார்.

சிறப்புக் குறிப்பு: புதல் என்பது புதரில் உள்ள மலர்களுக்கு  ஆகுபெயராக வந்தது. தொண்டையர் என்பது தொண்டை நாட்டை ஆண்ட மன்னர்களைக் குறிக்கிறது. தொண்டை நாடு தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். தொண்டையர் அடுக்கம் என்பது வேங்கட மலையைக் குறிப்பதாக உ. வே.சா அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.

கன்று இல்லாத பசுவை ஓமை மரம் தன்னிடம் வரவழைத்து நிழலைத் தந்ததைக் கண்ட தலைவன், தன் மனைவிக்குத் தான் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து விரைவில் திரும்பிவருவான் என்பதைக் குறிக்கிறது. இது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்


259. தோழி கூற்று

259. தோழி கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி, அறத்தொடு நின்று,அவனே பரிகரிப்பன் என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது. ( காப்பு = காவல்; பரிகரிப்பன் = துன்பத்தைத் தீர்ப்பன்; நயப்பாளாக = ஏற்பாளாக)
கூற்று விளக்கம்: தலைவியின் களவொழுக்கம் அவள் பெற்றோருக்குத் தெரிய வந்தது. அதனால், அவர்கள் தலைவியை வீட்டில் காவலில் வைத்தார்கள். தலைவியின் நிலைமையை அறிந்த தோழி, அவளுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினாள். ஆகவே, அவள் தலைவியின் காதலைப் பற்றிய செய்தியை வெளிப்படுத்தினாள். அவ்வாறு செய்தால், தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கான ஏற்படுகளை விரைவில் செய்வான் என்று எதிர்பார்த்து அவள் அச்செயலைச் செய்தாள். தன் செயலைப் பற்றித் தலைவியிடம் தோழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மழைசேர்ந் தெழுதரு மாரிக் குன்றத்
தருவி யார்ந்த தண்ணறுங் காந்தள்
முகையவிழ்ந் தானா நாறு நறுநுதல்
பல்லிதழ் மழைக்கண் மாஅ யோயே
ஒல்வை யாயினுங் கொல்வை யாயினும்
நீயளந் தறிவைநின் புரைமை வாய்போற்
பொய்ம்மொழி கூறலஃ தெவனோ
நெஞ்ச நன்றே நின்வயி னானே. 

கொண்டு கூட்டு: மழைசேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள் முகை அவிழ்ந்து ஆனா நாறு நறுநுதல் பல்லிதழ் மழைக்கண் மாஅயோயேஒல்வையாயினும் கொல்வையாயினும் நீ அளந்து அறிவை நின் புரைமை. வாய்போற் பொய்ம்மொழி கூறல், அஃது எவனோ நின்வயினான் நெஞ்சம் நன்று.

அருஞ்சொற்பொருள்: மழை = மேகம்; மாரி = மழை; ஆர்தல் = பொருந்துதல்; தண் = குளிர்ச்சி; ஆனா= இடைவிடாமல்; நறும் = மணமுள்ள; முகை = அரும்பு; நுதல் = நெற்றி; பல்லிதழ் = பல இதழ்களைக் கொண்ட (இங்கு தாமரையைக் குறிக்கிறது); மழைக்கண் = குளிர்ச்சியுடைய கண்; மாயோய் = மாந்தளிர் போன்ற நிறமுடையவள்; ஒல்லுதல் = பொறுத்தல்; புரைமை = மேன்மை; வாய் = உண்மை; வயின் = இடம்.

உரை: மேகங்கள் சேர்ந்து எழுந்த, மழையை உடைய மலையில், அருவிக்கு அருகில் குளிர்ந்த நறுமணமுள்ள காந்தளின் அரும்புகள் விரிந்து இடைவிடாமல் மணக்கும். அம்மலரின்  மணம் கமழும் நெற்றியையும், பல இதழ்களை  உடைய தாமரைப் மலரைப்  போன்ற குளிர்ச்சியை உடைய கண்களையும் உடைய  மாந்தளிர் போன்ற நிறம் பொருந்தியவளே! நீ என் பிழையைப் பொறுப்பாயாயினும், அல்லது சினந்து என்னைக் கொல்வாயாயினும், உனது மேன்மையை,  நீயே அளவிட்டு அறியும் ஆற்றலை உடையவள். மெய்யைப் போலப் பொய்யைக் கூறுவதால் என்ன பயன்?  தலைவனின் நெஞ்சம் உனக்கு நல்லதையே நினைக்கிறது.

சிறப்புக் குறிப்பு: புரைமை என்பதற்கு உயர்ச்சி என்ற பொருள் மட்டுமல்லாமல் குற்றம், களவு என்ற பொருள்களும் உள்ளன. உதாரணமாக, “பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். (குறள் – 292)” என்ற குறளில் புரை என்ற சொல் குற்றம் என்ற பொருளில் வந்துள்ளது. அதுபோல், “நீஅளந்து அறிவைநின் புரைமைஎன்பதற்குநீ உன் களவொழுக்கத்தின் குற்றத்தை நன்கு அறிவாய்என்று பொருள்கொள்ளலாம். இவ்வாறு பொருள்கொண்டால், தோழியின் கூற்றுக்கு வேறுவிதமான அளிக்கலாம். “நான் உன்னுடைய காதலைப் பற்றி நம் தாய்க்கு அறிவித்தேன். நான் செய்தது பிழை என்று நீ நினைத்தால், நீ என் பிழையைப் பொறுத்துக்கொண்டாலும் சரி; அல்லது சினந்து என்னைக் கொன்றாலும் சரி. உனது களவொழுக்கமாகிய குற்றத்தை,  நீயே அறியும் ஆற்றலை உடையவள். மெய்யைப் போலப் பொய்யைக் கூறுவதால் (களவொழுக்கத்தை மறைப்பதால்) என்ன பயன்?  தலைவனின் நெஞ்சம் உனக்கு நல்லதையே நினைக்கிறது. ஆகவே, விரைவில் அவன் உன்னை மணந்துகொள்வான்.” என்று பொருள்கொள்ளலாம்.


இப்பாடலுக்கு மற்றொரு வகையிலும் விளக்கம் அளிக்கலாம். ”ஒல்வை ஆயினுங் கொல்வை ஆயினும் நீ அளந்து அறிவைநின் புரைமை; வாய்போற் பொய்ம்மொழி கூறல் அஃது எவனோ? நெஞ்ச நன்றே நின்வயி னானேஎன்பதற்கு, “திருமணம் நடைபெறும் வரை நீ உன் காமநோயைப் பொறுத்துக்கொண்டாலும் சரி; அல்லது உன் நாணத்தை அழித்து நீ உன் தலைவனோடு உடன்போனாலும் சரி. உன் உயர்ந்த பண்புகளை நீ நன்கு அறிவாய். மெய்யைப் போலப் பொய்யைக் கூறுவதால் என்ன பயன் என்று கருதி நான் உன் காதலைப் பற்றி நம் தாயிடம் அறிவித்தேன். உன் தலைவன் உன் நலனையே எண்ணுகிறவன் என்று எனக்குத் தெரியும்.” என்று தோழி கூறுவதாகவும் பொருள்கொள்ளலாம்.

Sunday, October 2, 2016

258. தோழி கூற்று

258.  தோழி கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று - 1:  தோழி, தலைமகற்கு வாயில் மறுத்தது.
கூற்று - 2: வாயில்  நேர்ந்ததூஉமாம்.
கூற்று விளக்கம் - 1:  தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையோடு வாழ்ந்துவந்தான். இப்பொழுது, அவன் தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். தலைவி மிகுந்த கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், தலைவியின் தோழியை அணுகி, அவளைத் தன் சார்பாகத் தலைவியிடம் தூது போகுமாறு வேண்டுகிறான். “உன்னுடைய செயலால் தலைவி மிகுந்த வருந்தம் அடைந்தாள். வருத்தம் அடைந்தது மட்டுமல்லாமல், அவள் தன் அழகையும் இழந்தாள். உன் செயலால் ஊர்மக்கள் அவளைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார்கள். அவள் உன்னைக் காண விரும்பவில்லை.” என்று கூறித் தோழி தலைவனுக்காகத் தூது போக மறுக்கிறாள்.
கூற்று விளக்கம் - 2:  தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையோடு வாழ்ந்தான். இப்பொழுது, அவன் தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். தலைவி மிகுந்த கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், தலைவியின் தோழியை அணுகி, அவளைத் தன் சார்பாகத் தலைவியிடம் தூது போகுமாறு வேண்டுகிறான். தலைவனின் செயலால் தலைவி வருத்தம் அடைந்ததையும் அவள் அழகை இழந்ததையும் தோழி நன்கு அறிந்தவள். ஆகவே, அவள் தலைவனுக்காகத் தூது போக விரும்பவில்லைஇருந்தாலும், தலைவன் தலைவியோடு சேர்ந்து வாழ்ந்தால், ஊர்மக்கள் அலர் பேசுவதைத் தடுக்கலாம் என்று எண்ணுகிறாள். ஆகவே, அவள் தலைவன் சார்பாகத் தூது போகச் சம்மதிக்கிறாள். இப்பாடலின் கருத்தை ஆழ்ந்து ஆரய்ந்து பார்த்தால், இந்தக் கூற்றைவிட, முதற் கூற்று பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

வாரலெஞ் சேரி தாரனின் றாரே
அலரா கின்றாற் பெரும காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்துகோட் டியானைச் சேந்தன் தந்தை
அரியலம் புகவி னந்தோட்டு வேட்டை
நிரைய ஒள்வாள் இளைஞர் பெருமகன்
அழிசி ஆர்க்கா டன்ன விவள்
பழிதீர் மாணலந் தொலைதல் கண்டே. 

கொண்டு கூட்டு:
பெரும!  காவிரிப் பலராடு பெருந்துறை, மருதொடு பிணித்த,ஏந்துகோட்டு யானைச் சேந்தன் தந்தை அரியல் அம்புகவின் அம் தோட்டு வேட்டை நிரைய ஒள்வாள் இளைஞர் பெருமகன் அழிசி ஆர்க்காடு அன்ன இவள் பழிதீர் மாண் நலம் தொலைதல் கண்டு அலர் ஆகின்றுஎம் சேரி வாரல்! நின் தார் தாரல்!

அருஞ்சொற்பொருள்: வாரல் = வர வேண்டாம்; சேரி = தெரு; அலர் = பழிச்சொல்; தார் = மாலை. தாரல் = தர வேண்டாம்; மருது = மருத மரம்; பிணித்த = கட்டிய; ஏந்து = உயர்ந்த; கோடு = கொம்பு; சேந்தன்அழிசி என்ற மன்னனின் மகன்; அரியல் = கள்; புகவு = உணவு; தோடு = விலங்குத் தொகுதி; நிரையம் = நரகம்; ஓள் = ஓளிபொருந்திய; ஆர்க்காடுஓரூர்; மாண் = மாட்சிமைப்பட்ட; தொலைதல் = கெடுதல்.

உரை: பெரும! காவிரி ஆற்றின் பலரும் நீராடுகின்ற பெரிய நீர்த்துறையில் வளர்ந்த மருத மரத்தில் கட்டிய, மேல் நோக்கி உயர்ந்த கொம்பை உடைய யானைகளை உடைய சேந்தனுடைய தந்தையும், கள்ளாகிய உணவையும்,  அழகிய விலங்குத் தொகுதியை வேட்டையாடும் தொழிலையும், பகைவருக்கு நரக வாழ்வைப் போன்ற துன்பத்தைத் தரும் ஒள்ளிய வாளையும் உடைய,  இளைய வீரர்களுடைய தலைவனுமாகிய, அழிசியின் ஆர்க்காடு என்னும் நகரத்தைப் போன்ற,  இவளது குற்றமற்ற அழகு அழிதலைக் கண்டு, பழிச்சொல் உண்டாகின்றது.  எமது சேரிக்கு நீ வர வேண்டாம்!  நீ உனது மாலையைத் தர வேண்டாம்!

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், அழிசி என்பவன் சோழநாட்டில், காவிரைக்கரையில் இருந்த ஆர்க்காடு என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த ஒரு குறுநில மன்னன். இவன் சேந்தன் என்பவனின் தந்தையும் ஆவான்.


இப்பாடலில் முதற்பொருளாக காவிரியாற்றைச் சார்ந்த மருத நிலமும், கருப்பொருளாக மருத மரமும், உரிப்பொருளாக ஊடலும் குறிப்பிடப்பட்டுள்ளதால், இப்பாடல்  மருதத் திணையைச் சார்ந்தது என்பது தெளிவு. ஆனால், இப்பாடலில் குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருளாகிய யானை குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, ஒரு திணைக்குரிய கருப்பொருள் மற்றொரு திணையில் வந்தால், அதைத் தொல்காப்பியம் திணை மயக்கம் என்று கூறுகிறது. இப்பாடலில் உள்ள திணை மயக்கம் இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமத்தைப் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. குறிஞ்சி நிலத்துக்குரிய யானை மருத நிலத்தில் உள்ள மருத மரத்தில் கட்டப்பட்டுள்ளதைப் போல், தலைவன் தனக்குரிய மனைவியோடு வாழாமல் பரத்தையால் கவரப்பட்டான். இது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்இக்கருத்து, தமிழறிஞர்கள் எழுதிய உரைநூல்கள் எவற்றிலும் காணப்படவில்லை. ஆனால், இது ஆங்கிலேயத் தமிழறிஞர் ராபர்ட் பட்லர் (Robert Butller) என்பவரால், அவருடைய குறுந்தொகையின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் இலக்கணத்திலும், சங்க இலக்கிய அகத்திணை நூல்களிலும் அவருடைய புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு

257. தலைவி கூற்று

257. தலைவி கூற்று

பாடியவர்: உறையூர்ச் சிறுகந்தனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: இப்பாடலில் திருமணத்தைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. இப்பாடலைத் தலைவி தனக்கும் தலைவனுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றியும் தன் காம உணர்வைப் பற்றியும் தோழிக்குக் கூறியதாகக் கருதலாம். தலைவி, ”என் காமம், தலைவனைக் கண்ட போது இன்பத்தைத் தருகிறது. அவனைக் காணாத போது துன்பத்தைத் தருகிறது. எப்பொழுதும் தலைவனோடு இருந்தால் துன்பில்லாமல் மகிழ்ச்சியாகவே இருப்பேன்.” என்று கூறுகிறாள்.

வேரு முதலும் கோடு மோராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம்
அகலினும் அகலா தாகி
இகலுந் தோழிநங் காமத்துப் பகையே. 

கொண்டு கூட்டு: தோழி! நம் காமத்துப் பகைவேரும் முதலும் கோடும் ஓராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் கீழ்தாழ்வு அன்ன வீழ்கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம்அகலினும் அகலா தாகி இகலும்.

அருஞ்சொற்பொருள்: முதல் = அடிமரம்; கோடு = கிளை; ஓராங்கு = இடைவெளியின்றி; தூங்குபு = தொங்குவனவாய்; தொடரி = தொடர்ந்து; கீழ் தாழ்வு = கீழே தாழ்ந்திருப்பது போன்ற; கோள் = குலை; வீழ்கோள் = விழுவதுபோலத் தோன்றும் பழக்குலைகள்; ஆர்கலி = ஆரவாரம்; வெற்பன் = மலைக்குத் தலைவன்; இகல் = பகை; இகலும் = பகைக்கும்.

உரை: தோழி! என்னிடத்து உள்ள காமமாகிய பகை, வேரிலும் அடிமரத்திலும் கிளையிலும், இடைவெளியின்றி,  தொடுத்து வைத்ததைப் போலத்  தொங்கிக்கொண்டு தொடர்ச்சியாக,  கீழே தாழ்ந்திருப்பது போல் தோன்றும்,  தாழ்ந்த குலைகளை உடைய பலாமரங்கள் உள்ள, ஆரவாரத்தை உடைய மலைக்குத் தலைவன், இங்கே வருந்தோறும்  கூடவே வரும். அவன் பிரிந்து போனாலும் அந்தக் காம உணர்வு பிரிந்து போகாமல் பகைத்து என்னைத் துன்புறுத்தும்.


சிறப்புக் குறிப்பு: காமம் இன்பத்தைத் தருவதாயினும் தலைவனைப் பிரிந்த பொழுது தன்னுடனேயே இருந்து தனக்குத்  துன்பத்தைத் தருவதால் காமத்தைப் பகை என்று தலைவி கருதுகிறாள். பெண்களுக்கு இயற்கையாகவே உள்ள பண்பு நாணம். அவர்களுடைய காதல் வாழ்க்கை நாணத்துக்கும் காமத்துக்கும் இடையே ஏற்படும் போராட்டம். அதனால், காமத்தைப் பகை என்று கூறினாள் என்றும் பொருள் கொள்ளலாம். தலைவனுடைய நாட்டில் பலாமரத்தில் வேர், அடிப்பாக்கம், கிளகைள் ஆகிய எல்லா இடங்களிலும் தொடர்ந்து பழங்கள் இருப்பதைப் போல், தலைவனோடு இடைவிடாது எப்பொழுதும் ஒன்றுகூடி இருந்தால் எப்பொழுதும் இன்பமாகவே இருக்கலாம் என்று தலைவி எண்ணுவதாகத் தோன்றுகிறது.

256. தலைவன் கூற்று

256.  தலைவன் கூற்று

பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: பாலை.
கூற்று: பொருள் விலக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது. (விலங்கு = தடை)
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காக  வெளியூருக்குச் செல்ல விரும்புகிறான். அவன் தலைவியிடத்தில், “நான் திரும்பிவரும்வரை உன்னால் என்னைப் பிரிந்து இருக்க முடியுமா?” என்று கேட்கிறான். அவன் அந்தக் கேள்வியைக் கேட்டு முடிப்பதற்கு முன்னரே அவள் அழத் தொடங்கிவிட்டாள். அவள் அழுகையால் அவன் தான் பொருள் தேடப் போவதைத் தவிர்க்கிறான். இந்த நிகழ்ச்சியை இப்பாடல் சித்திரிக்கிறது. 

மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகை
பிணிகால் மென்கொம்பு பிணையொடு மார்ந்த
மானே றுகளுங் கானம் பிற்பட
வினைநலம் படீஇ வருது மவ்வரைத்
தாங்கல் ஒல்லுமோ பூங்குழை யோயெனச்
சொல்லா முன்னர் நில்லா வாகி
நீர்விலங் கழுத லானா
தேர்விலங் கினவால் தெரிவை கண்ணே. 

கொண்டு கூட்டு: பூங்குழையோய்! மணிவார்ந்தன்ன மாக்கொடி அறுகை  பிணிகால் மென்கொம்பு பிணையொடும் ஆர்ந்த  மான்ஏறு உகளுங் கானம் பிற்பட வினைநலம் படீஇ வருதும்; அவ்வரைத் தாங்கல் ஒல்லுமோ எனச் சொல்லா முன்னர், தெரிவை கண் நில்லாவாகிநீர்விலங்கு அழுதல் ஆனாதேர் விலங்கின.

அருஞ்சொற்பொருள்: மணி = நீலமணி; வார்தல் = நீளுதல்; மா = கரிய; அறுகை = அறுகம் புல்; பிணிகால் = பின்னிக்கொண்டுள்ள அடிப்பக்கம்; கொம்பு = தண்டு; பிணை = பெண்மான்; ஆர்தல் = உண்ணுதல்; மானேறு = மான் +ஏறு = ஆண்மான்; உகளுதல் = துள்ளுதல்; கானம் = காடு; வினைநலம் படீஇ வருதும் = செயலில் வெற்றிபெற்றுத் திரும்பி வருதல்; அவ்வரை = +வரை = அதுவரை; ஒல்லுமோ = முடியுமோ; பூ = அழகு; குழை = காதணி; விலங்கு = தடை; குறுக்காக நிறைந்து மறைத்தல்;; ஆனா = நீங்காத; அடங்காத; தெரிவை = பெண் (இங்கு, தலைவியைக் குறிக்கிறது).

உரை: அழகிய காதணிகளை அணிந்த தலைவியேநீலமணி நீண்டு கிடப்பதைப் போன்ற கரிய நிறக்கொடியாகிய அறுகின் பின்னிக் கொண்டுள்ள மெல்லிய தண்டை, பெண்மானோடு சேர்ந்து வயிறு நிரம்ப உண்ட,  ஆண்மான் துள்ளுகின்ற கார்காலம் வருவதற்கு முன்பே, காட்டைக் கடந்து சென்று, தொழிலால் நன்மை பெற்று (பொருள் தேடுவதிலே வெற்றி பெற்றுத்) திரும்பி வருவேன். அதுவரை, உன்னால் பொறுத்திருக்க முடியுமா?” என்று நான் கேட்பதற்கு முன்னரே, தலைவியின் கண்கள், பழைய நிலையில் நில்லாமல் கலங்கி,  தடுத்து நிறுத்த முடியாமல் கண்ணீரால் மறைக்கப்பட்டு அழுவது மட்டுமல்லாமல், என் தேரைத் தடை செய்தன.

சிறப்புக் குறிப்பு: பிணையொடு மார்ந்த மானேறு உகளும் கானம் பிற்படஎன்றது மான்கள் இன்பம் நுகர்ந்து துள்ளித் திரியும் கார்காலத்திற்கு முன்பே திரும்பிவருவதாகத் தலைவன் கூறுவதைக் குறிக்கிறது.

 பொருள் தேடச் செல்லப் புறப்பட்ட தலைவன், தான் செல்லப் போகும் செய்தியைக் கூறியவுடன், தலைவி அழ ஆரம்பித்துவிட்டாள். ஆகவே, இன்னும் சில நாட்கள் தலைவியுடன் இருந்து அவளுக்கு ஆறுதல் கூறிப் பிறகு  செல்லலாம் என்ற நோக்கத்தோடு அவன் செல்லுவதைத் தவிர்த்தான். இவ்வாறு பிரிதலைத் தவிர்த்தலைத் தொல்காப்பியம், “செலவழுங்குதல்என்று குறிப்பிடுகிறது.

இங்கு,
செல்லாமை உண்டேல் எனக்குரை, மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை.                                            (குறள் – 1151)


என்ற குறள் நினைவு கூரத் தக்கது

255. தோழி கூற்று

255. தோழி கூற்று 
பாடியவர்: கடுகு பெருந்தேவனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: இடை நின்று மீள்வர் எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். அவன் தன்மேல் உள்ள அன்பால், பொருள் தேடும் முயற்சிகளை இடையிலேயே விட்டுவிட்டுத் திரும்பிவிடுவானோ என்று தலைவி கலைப்படுகிறாள். அதைக் கண்ட தோழி, ”அவர் தன் கடமையை உணர்ந்தவர். ஆகவே, அவர் தாம் தேடிச்சென்ற பொருளைப் பெற்ற பிறகுதான் வருவார்.”என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

பொத்தில் காழ அத்த யாஅத்துப்
பொரியரை முழுமுதல் உருவக் குத்தி
மறங்கெழு தடக்கையின் வாங்கி உயங்குநடைச்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்
தடமருப் பியானை கண்டனர் தோழி
தங்கட னிறீஇய ரெண்ணி யிடந்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற வாறே. 

கொண்டு கூட்டு: தோழி! தம் கடன் இறீஇயர் எண்ணி, இடந்தொறும் காமர் பொருட்பிணி போகியநாம் வெம் காதலர் சென்ற ஆறுபொத்து இல் காழ அத்தம் யாஅத்துப்
பொரி அரை முழுமுதல் உருவக் குத்தி, மறம்கெழு தடக்கையின் வாங்கி, உயங்கு நடைச்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும் தடமருப்பு யானை கண்டனர்

அருஞ்சொற்பொருள்: பொத்து = பொந்து (ஓட்டை);காழ் = வயிரம் பாய்ந்தயா = யா மரம்; அரைஅடிப்பக்கம்; முழு = திரண்ட; உருவ = ஊடுருவுமாறு; மறம் = வலிமை; தட = பெரிய, வளைந்த; மருப்பு = கொம்பு; உயங்குதல் = வருந்துதல்; வாங்கி = கொண்டுவந்து; நிரை = வரிசை; கடன் = கடமை; இறீஇயர் = நிறைவேற்றுவதற்காக; எண்ணி = கருதி; காமர் = விருப்பம்; வெம் = விரும்பும்; ஆறு = வழி.
உரை: தோழி! தன்னுடைய கடமையை நிறைவேற்றக் கருதி, இடங்கள் தோறும், தாம் விரும்பும் பொருளைத் தேடும் பற்றுதலால், நாம் விரும்பும் காதலர் நம்மைப் பிரிந்து சென்றார்.  அவர் சென்ற வழியில், ஓட்டையில்லாத, வயிரம் பாய்ந்த யாமரங்களின், பொரிந்த திரண்ட அடிபக்கத்தை ஊடுருவும்படித் தன் கொம்பால் குத்தி, அதிலிருந்து வரும் நீரை, வலிமை பொருந்திய, பெரிய துதிக்கையினால் கொண்டுவந்து,  வருந்திய நடையையும்,  சிறிய கண்களையும் உடைய, பெரியயானை வரிசையின், மிகுந்த பசியைத் தீர்க்கின்ற,  வளைந்த கொம்பை உடைய ஆண் யானையைக் கண்டிருப்பார்.


சிறப்புக் குறிப்பு: ”தலைவன்  தான் செல்லும் வழியில் ஆண்யானை தன் இனத்தைப் பாதுகாப்பதைப் பார்த்திருப்பான். அதைப்போல் தானும் தன் குடும்பத்தைப் பாதுகாப்பாதற்குப் பொருள் தேவை என்பதை உணர்ந்திருப்பான்.என்பது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருள்

254. தலைவி கூற்று

254. தலைவி கூற்று

பாடியவர்: பார்காப்பானார். இவர் பெயர் பாரகாபரர் என்றும் சில நூல்களில் காணப்படுகிறது. இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: பருவம் கண்டு, வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம் ஆகிய காலங்கள் கழிந்து இப்பொழுது இளவேனிற்காலம் வந்து விட்டது. ஆனால், தலைவன் வருவதற்கான அறிகுறிகள் எவற்றையும்  காணவில்லை. ஆகவே, தலைவி வருத்தமாக இருக்கிறாள். தோழி அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள்.  "அவர் திரும்பிவருவதாகக் கூறிய கார்காலம் கழிந்த பின்னரும் அவர் வருவார் எனச் சொல்லும் தூதுகள் வரவில்லையே; அவர் என்னை மறந்துவிட்டார் போலும். என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

இலையி லஞ்சினை யினவண் டார்ப்ப
முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்
தலையலர் வந்தன வாரா தோழி
துயிலின் கங்குல் துயிலவர் மறந்தனர்
பயினறுங் கதுப்பிற் பாயலு முள்ளார்
செய்பொருள் தரனசைஇச் சென்றோர்
எய்தின ராலென வரூஉந் தூதே. 

கொண்டு கூட்டு: தோழி! இலை இல் அம் சினை இனவண்டு ஆர்ப்பமுலை ஏர் மென்முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர் வந்தன.  செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர் எய்தினர்  என வரூஉம் தூது வாரா.  அவர் துயில்இன் கங்குல் துயில் மறந்தனர்;  பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார்.

அருஞ்சொற்பொருள்: அம் = அழகிய; சினை = கிளை; ஆர்ப்ப = ஒலிக்க; ஏர்தல் = ஒத்தல்; கோங்கு = ஒரு வகை மரம்; தலை அலர் = முதலில் பூக்கும் மலர்கள்; முகை = அரும்பு; கங்குல் = இரவு ; துயில் = உறக்கம்; பயில்தல் = பழகுதல்; கதுப்பு = பெண்களின் கூந்தல்; பாயல்படுக்கை; நசைஇ = விரும்பி; ஆல்அசைச் சொல்.
உரை: தோழி! இலை இல்லாத அழகிய கிளையில் வண்டுகளின் கூட்டம் ஆரவாரிக்கும்படி, மகளிரின் முலையைப் போன்ற அரும்புகள் மலர,  இளவேனிற் காலம் வந்ததின் அடையாளமாக முதலில் பூக்கும் கோங்க மரத்தின் மலர்கள் தோன்றின.  ஈட்டுதற்குரிய பொருளைக் கொண்டு வருவதை விரும்பிச் சென்ற தலைவர், அதைப் பெற்றுத் திரும்பி வருகிறார் என்பதை அறிவிப்பதற்குத் தூதர்கள் எவரும் வரவில்லைநம்மைப் பிரிந்து சென்ற அவர், உறங்கும் நேரமாகிய இனிய இரவில் என்னுடன் உறங்குவதை மறந்தார்பாயில் படுப்பதைப்போல் என்னுடைய நறுமணமுள்ள கூந்தலில் படுத்துப் பழகியதையும் அவர் நினைக்காமல் மறந்துவிட்டார்.


சிறப்புக் குறிப்பு: தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச் சென்றான். கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்) கழிந்து, குளிர் காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதன்கள்), முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்), பின்பனிக்காலம் (மாசி, பங்குனி மாதங்கள்) ஆகியவை எல்லாம் முடிந்து இப்பொழுது இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி மாதங்கள்)வந்துவிட்டது. அதற்கு அறிகுறியாக கோங்கு மரம் பூக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், தலவன் இன்னும் வரவில்லை. அவன் வரப்போகிறான் என்ற செய்தியை அறிவிக்கும் தூதர்கள் எவரும் வரவில்லை. ஆகவே, தலைவன் தன்னை மறந்துவிட்டதாகத் தலைவி எண்ணி வருந்துகிறாள்.