Saturday, March 26, 2016

176. தோழி கூற்று

176. தோழி கூற்று
.

பாடியவர்: வருமுலையாரித்தியார். இவர் பாடியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: தோழி, கிழத்தியைக் குறைநயப்பக் கூறியது.  (குறை நயப்ப - தலைவனது காரியத்தை விரும்பி நிறைவேற்றுதற்கு.)
கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண்ணைப் பார்த்தான், அவள் அழகில் மயங்கினான். அவளை அடைய விரும்பினான். தனக்குத் தலைவியின் மேல் உள்ள விருப்பத்தைத் தலைவியின் தோழியிடம் கூறி, தலைவியைச் சந்திப்பதற்கு அவள் உதவியை நாடினான். ஒருமுறை அன்று; இருமுறை அன்று; அவன் பலமுறை தோழியின்  உதவியை வேண்டினான். தோழி தலைவியிடம் அவனுக்காகப் பரிந்துரைத்தாள். ஆனால், தலைவி அவனை ஏற்கவில்லை.  அதனால் ஏமாற்றம் அடைந்த தலைவன் இப்பொழுது எங்கோ சென்றுவிட்டான்தோழி, உன்னை அவன் மிகவும் விரும்பினான். அவன் மிகவும் பணிவானவன்; நல்லவன். உன்னைச் சந்திப்பதற்கு என் உதவியை வேண்டினான். நான் சொன்ன சொற்களை நீ ஏற்கவில்லை. இப்பொழுது அவனைக் காணவில்லை. அவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ என்று தோழி தலைவியிடம் தன் வருத்தத்தைக் கூறுகிறாள்.

ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி என்
நன்னர் நெஞ்சம்  நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனின் போகியோனே
ஆசுஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?
வேறுபுலன் நன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும் என் நெஞ்சே. 


கொண்டு கூட்டு: ஒருநாள் வாரலன், இருநாள் வாரலன்பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி  என் நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றைவரைமுதிர் தேனிற் போகியோன்.
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோவேறு புலன் நன்னாட்டுப் பெய்த ஏறுடை மழையிற் கலிழும் என் னெஞ்சே. 

அருஞ்சொற்பொருள்: பணிமொழி = பணிவான சொற்கள்; பயிற்றி = கூறி; நன்னர் = நன்மை ( நல்ல); பின்றை = பிறகு; வரை = மலை; ஆசு = பற்றுக்கோடு ; எந்தை = என் தலைவன் ( நம் தலைவன்); புலன் = புலம் = இடம்; ஏறு = இடி; கலிழும் = கலங்கும்.

உரை: தலைவன் ஒருநாள் வரவில்லை; இரண்டு நாட்கள் வரவில்லை. பல நாட்கள் வந்து, பணிவான சொற்களைப் பலமுறை கூறி எனது நல்ல நெஞ்சத்தை இரங்கச் செய்த பிறகு மலையிலிருந்து முதிர்ந்து விழுந்த தேனடையைப் போலப் போனவனும், நமக்குப் பற்றுக்கோடாக இருக்கும் எம் தந்தை போன்றவனுமாகிய நம் தலைவன் இப்பொழுது  எங்கே இருக்கின்றானோ? வேற்றுப் புலங்களையுடைய நல்ல நாட்டில், இடியுடன் பெய்த மழைநீர் கலங்கி நம் நாட்டிற்கு வருவது போல, எங்கோ இருக்கும் தலைவனை நினைத்து என் நெஞ்சு கலங்குகின்றது.


சிறப்புக் குறிப்பு: மலையில் முதிர்ர்ந்த தேனடை, தன்னிடம் உள்ள தேன் ஒருவருக்கும் பயன்படாது விழுந்து அழிந்ததைப் போல, தான் கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ளாததால்  தலைவன் எங்கோ சென்றான் என்பது குறிப்பு. வேற்று நாட்டில் இடியுடன் பெய்த மழை கலங்கித் தலைவி இருக்கும் நாட்டிற்கு வருவதைப் போல் எங்கோ இருக்கும்  தலைவனைப் பற்றிய நினைவு தோழிக்கு மனக்கலக்கத்தைத் தருகின்றது.

175. தலைவி கூற்று

175. தலைவி கூற்று

பாடியவர்: உலோச்சனார். இவர் சோழ நாட்டில் இருந்த கண்ப வாயில் என்னும் ஊரைச் சார்ந்தவராகக் கருதப்படுகிறது.  இவர் நெய்தல் திணைப் பாடல்களை இயற்றுவதில் வல்லவர்.  இவர் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்த போது அவனைப் பாடிப் பரிசில் பெற்றவர் (புறநானூறு - 377).  இவர் புறநானூற்றில் மூன்று பாடல்கள் ( 258, 274, 377) இயற்றியதோடு மட்டுமல்லாமல், நற்றிணையில் இருபது பாடல்களும் (11, 38, 63, 64, 74, 131, 149, 191, 203, 223, 249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398), அகநானூற்றில் எட்டுப் பாடல்களும் ( 20, 100, 190, 200, 210, 300, 330, 400), குறுந்தொகையில் நான்கு பாடல்களும் (175, 177, 205, 248) இயற்றியுள்ளார்.
திணை: நெய்தல்.
கூற்று: பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பிரிந்திருந்த பொழுது, வருத்தத்தோடு இருந்த  தலைவியை நோக்கி, “தலைவனுடைய பிரிவினால் நீ வருந்துவது எனக்குப் புரிகிறது. அவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை பொறுத்துக்கொள். ஊரில் உள்ளவர்கள் உன்னைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்என்று தோழி கூறுகிறாள். தோழியின் கூற்றுக்கு மறுமொழியாக,  “ஊரார் எதை வேண்டுமானாலும் பேசட்டும். அதற்காக நான் வருந்தப் போவதில்லை.” என்று தலைவி கூறுகிறாள்.    

பருவத் தேன் நசைஇப் பல்பறைத் தொழுதி
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்கு
இரங்கேன் தோழி ஈங்கு என் கொல் என்று
பிறர்பிறர் அறியக் கூறல்
அமைந்தாங்கு அமைக, அம்பல் அஃது எவனே. 


கொண்டு கூட்டு: தோழி! பருவத் தேன் நசைஇப் பல்பறைத் தொழுதி உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்கு இரங்கேன். ஈங்கு என் கொல் என்று பிறர்பிறர் அறியக் கூறல் அமைந்தாங்கு அமைக! அம்பல் அஃது எவன்

அருஞ்சொற்பொருள்: நசைஇ = விரும்பி; பறை = பறவை (வண்டு); தொழுதி = கூட்டம்; உரவு = வலிமை; உரவுத்திரை = வலிய கடலலை; பொருத = மோதிய; திணிதல் = செறிதல்; மா = பெரிய, கரிய; சினை = கிளை; தொகூஉம் = கூடுகின்ற; அம்பல் = பழிச்சொல்.

உரை: தோழி! பருவ காலத்தில் உள்ள தேனை விரும்பி, பல வண்டுக்கூட்டங்கள், வலிமையான அலைகள் மோதுகின்ற மணல் செறிந்த கரை ஓரத்தில் உள்ள நனைந்த புன்னை மரத்தின் பெரிய கிளையில் மொய்க்கும்படி மலர்ந்த மலர்களையும், கரிய நீரையுமுடைய கடற்கரைத் தலைவன் என்னைப் பிரிந்ததற்காக நான் வருந்தேன். இங்கு,”இவள் ஏன் இங்ஙனம் ஆனாள்?” எனப் பிறர், பிறர் அறியும்படி கூறுதல், அவர்களுடைய மனத்திற்கேற்றபடி  அமையட்டும். அவர்கள் கூறும் பழிச்சொற்கள் என்னை  என்ன செய்யும்?

சிறப்புக் குறிப்பு: பறப்பதைத் தொழிலாகக் கொண்டதால் பறை என்ற சொல்  பறவையைக் குறிக்கிறது. தேன் நசைஇஎன்ற குறிப்பால் பறை என்ற பொதுப்பெயர் இங்கே வண்டைக் குறிக்கிறது     “தலைவன் என்னைப் பிரிந்தான் என்று நான் வருந்தவில்லை; ஆயினும் என்னை அறியாமால் என்னிடம் சில மாற்றங்கள் உண்டாகின்றன. அவற்றைக் கண்டு பிறர் என்ன வேண்டுமானாலும் கூறட்டும்; அவற்றால் என் காமம் வலிமையடையுமே தவிர எனக்குத் துன்பம் ஒன்றுமில்லைஎன்று தலைவி கூறுகிறாள்.


பலவிடங்களிற் பறந்து செல்லும் வண்டுகள் சரியான காலத்தில் பருவத் தேனை உண்ண வருவதைப்போல், தலைவன் பலவகை முயற்சிகளில் ஈடுபட்டு என்னைப் பிரிந்து சென்றாலும், உரிய காலத்தே வந்து என்னோடு மகிழ்ச்சியாக இருப்பான் என்ற நம்ம்பிக்கை எனக்கு உள்ளதால் நான் அவன் பொருட்டு வருந்த மாட்டேன்என்று தலைவி கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம்

174. தலைவி கூற்று

174. தலைவி கூற்று

பாடியவர்: வெண்பூதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 97 – இல் காணலாம். திணை: பாலை.
கூற்று: பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிவதாக முடிவு செய்துவிட்டான். இதை அறிந்த தோழி, தலைவியிடம் வந்து தலைவனின் முடிவைப் பற்றிக் கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவி, அவர் செல்லும் பாலை நிலத்து வழிகள் கடத்தற்கு அரியவை. அவற்றைக் கடப்பதில் உள்ள இன்னல்களை எண்ணிப் பார்க்காமல் அவர் என்னைவிட்டுப் பிரியப் போகிறார் என்றால், இவ்வுலகில், பொருள்தான் பெறுதற்கரியது என்பதும் அருளை மதிப்பவர் யாரும் இல்லை என்பதும் தெளிவு என்று தோழியிடம் கூறுகிறாள்.

பெயன்மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவைமுள் கள்ளிக்காய் விடு கடுநொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார் நம் துறந்து
பொருள்வயிற் பிரிவாராயின் இனி இவ்வுலகத்துப்
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆரும் இல்லதுவே. 


கொண்டு கூட்டு: பெயல் மழை துறந்த புலம்புறு கடத்து, கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடிதுதை மென்தூவித் துணைப்புறவு இரிக்கும் அத்தம் அரிய என்னார், நம் துறந்து பொருள் வயின் பிரிவாராயின் இவ்வுலகத்து மன்ற பொருளே பொருள்மன்ற அருளே ஆரும் இல்லது. 

அருஞ்சொற்பொருள்: பெயல் = பெய்யும்; துறந்த = நீங்கிய; புலம்பு = தனிமை; கடம் = காடு; கவை = பிளப்பு; கடு = விரைவு; நொடி = வெடிக்கும் ஒலி; துதைத்தல் = செறித்தல்; தூவி = சிறகு; புறவு = புறா; இரிக்கும் = ஓடச் செய்யும்; அத்தம் = பாலை நிலம்; மன்ற = உறுதியாக; பொருள் = செல்வம், மதிக்கத் தக்கது; ஆரும் = யாரும்.

உரை:  மழை பெய்யாத்தால் வறட்சி மிகுந்துள்ள, தனிமைமிக்க பாலை நிலத்தில், பிளவுபட்ட, முள்ளையுடைய கள்ளியின் காய்கள் வெடிக்கும் பொழுது எழும் விரைவான ஒலியானது, நெருங்கிய மெல்லிய சிறகுகளையுடைய, ஆணும் பெண்ணுமாக இணைந்திருக்கும் புறாக்களைப் பிரிந்து ஓடச் செய்யும். அரிய வழிகள் உள்ள பாலைநிலம், கடத்தற்கரியது என்று கருதாமல், பொருளைத்தேடும் பொருட்டு நம் தலைவர் பிரிவாராயின், உறுதியாக, இந்த உலகத்தில் செல்வம் மட்டுமே மதிக்கத் தக்கது என்பதிலும், அருளை ஒரு பொருளாக ஏற்றுக் கொள்வார் யாரும் இல்லை என்பதிலும் நிச்சயமாக ஐயமில்லை.


சிறப்புக் குறிப்பு: பாலை நிலம் கடத்தற்கரியதாக இருப்பதை எண்ணிப் பார்க்காமல், தம் துணையைப் பிரிந்து செல்லுவது அருளுக்கு மாறுபாடான செயலாக இருப்பதால் பொருள்தான் பெறுதற்கரியது என்று இவ்வுலத்தில் உள்ளவர்கள் கருதுவதாகத் தலைவி கூறுகிறாள். கள்ளிக்காய் வெடிப்பதால் தோன்றிய ஒலி, இணைந்திருக்கும் புறாக்களைப் பிரிப்பதைப்போல், பொருள்மேல் தலைவனுக்கு உள்ள விருப்பம் தலைவனையும் தலைவியையும் பிரிக்கிறது என்ற கருத்து இப்பாடலில் உள்ளுறையாக இருப்பதாகத் தோன்றுகிறது.

173. தலைவன் கூற்று

173.  தலைவன் கூற்று

பாடியவர்: மதுரைக் காஞ்சிப்புலவன்.  மதுரைக் காஞ்சிப் புலவர், மாங்குடி கிழார், மாங்குடி மருதனார் என்ற மூன்று பெயர்களும் ஒருவரையே குறிப்பதாக உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். இந்தப் புலவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 164 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: குறைமறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவியைக் காண்பதற்கு உதவி செய்யுமாறு தலைவன் தலைவியின் தோழியை வேண்டினான். தோழி உதவி செய்ய மறுத்தாள். ”நீ உதவி செய்யாவிட்டால், என்ன செய்வது என்று எனக்குத் தெரியும். மடலேறுவதுதான் இதற்குச் சரியான வழிஎன்று கூறி அங்கிருந்து செல்கிறான்.
பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறி நாண் அட்டு
அழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப
இன்னள் செய்தது இது என முன்னின்று
அவள் பழி நுவலும் இவ்வூர்
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகுமார் உளெனே. 

கொண்டு கூட்டு: பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த பல்நூல் மாலைப் பனைபடு கலிமாப் பூண்மணி கறங்க ஏறி, நாண் அட்டு அழிபடர் உள்நோய் வழிவழி சிறப்பஇன்னள் செய்தது இது என, இவ்வூர் முன்னின்று அவள் பழி நுவலும்.  ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகுமார் உளென். 

அருஞ்சொற்பொருள்: ஆவிரை = ஒரு மலர்; மிடைந்த = கலந்த; பன்னூல் = பல நூல்கள்; படுதல் = உண்டாதல்; கலிமா = குதிரை; கறங்க = ஒலிக்க; நாண் = நாணம்; அடுதல் = அழித்தல்; அழிபடர் = மிகுந்த துன்பம்; வழிவழி = பரம்பரை (மேலும் மேலும்); சிறப்ப = மிகுதியாக; நுவலுதல் = கூறுதல்; ஆங்கு = அவ்வாறு (அப்படி); ஈங்கு = இவ்விடம்; ஏகுதல் = செல்லுதல்.


உரை: பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருக்கமாகக் கட்டிய,  பல நூல்களாலான மாலைகளை அணிந்த, பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையை, அதன் கழுத்திற் பூட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து,  நாணத்தைத் தொலைத்து, என்  உள்ளத்தேயுள்ள காமநோய், மேலும் மேலும் மிகுதியாகுமாறு, ”இது (இந்தக் காம நோய்) இன்னாளால் உண்டாக்கப்பட்டதுஎன்று நான் கூற, அதைக் கேட்ட இவ்வூரில் உள்ளவர்கள், எல்லோர்க்கும் முன்னே நின்று, தலைவியைப் பழி தூற்றுவர். அப்படி ஒரு வழி உண்டு என்பதை நான் அறிந்திருப்பதால், இவ்விடத்திலிருந்து செல்கிறேன்.

172. தலைவி கூற்று

172.  தலைவி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார்.   இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 30 – இல் காணலாம்.  
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால் தலைவி வருந்துவாள் என்று எண்ணித் தோழி அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள். ஆனால், தலைவி பிரிவால் நான் வருந்துவதாக நீ நினைக்கிறாய். நான் வருந்துவது உண்மைதான். அதைவிட, என்னைப் பிரிந்து சென்ற தலைவர் எவ்வாறு துன்பப்படுகிறாரோ என்று நினைத்து என் நெஞ்சு இடைவிடாமல் வருந்துகிறது என்று கூறுகிறாள்.

தா அம் சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர் கொல்லோ?
ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
உலை வாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே.

கொண்டு கூட்டு: தாஅ அம் சிறை நொ பறை வாவல், பழுமரம் படரும் பையுள் மாலை எமியம் ஆக ஈங்குத் துறந்தோர், தமியராக இனியர் கொல்லோ? ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த உலைவாங்கும் மிதிதோல் போலத் தலைவரம்பு அறியாது, என் நெஞ்சு வருந்தும்.

அருஞ்சொற்பொருள்: தா = வலிமை; சிறை = இறகு; நொய்ம்மைமென்மை; பறை = பறத்தல்; வாவல் = வௌவால்; படர்தல் = செல்லுதல்; பையுள் = துன்பம்; எமி = தனிமை; தமியர் = தனியராய் இருப்போர்; யாத்த = அமைத்த; உலை = கொல்லர்களின் ஊதுலை; வாங்குதல் = மூச்சு முதலியன உட்கொள்ளுதல்; மிதிதோல் = துருத்தி; தலைவரம்பு = எல்லை.

உரை: தோழி! வலிமையையுடைய அழகிய சிறகையும்,  மென்மையாகப் பறக்கும் இயல்பையும் உடைய வௌவால்கள், பழுத்த மரங்களை நோக்கிச் செல்லும், தனியாக இருப்பவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், நாம் தனியாக இருக்கும்படி,  இங்கு எம்மைவிட்டுப் பிரிந்த தலைவர், தாம் தனிமையாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பாரோ? ஏழு ஊரில் உள்ளவர்களுக்குப் பொதுவாகப் பயன்படும்படி, ஓர் ஊரில் அமைத்த, கொல்லன் உலையில் பொருத்திய துருத்தியைப் போல, எல்லையில்லாத் துன்பத்தை அடைந்து என் நெஞ்சு வருந்துகிறது.


சிறப்புக் குறிப்பு: ஏழு ஊரில் உள்ளவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்து முடிப்பதற்கு ஒரே ஒரு உலையில் உள்ள துருத்தி இடைவிடாமல் வேலை செய்வதுபோல், என் நெஞ்சு இடைவிடாமல் தலைவரை நினைத்து வருந்துகிறது என்று தலைவி கூறுகிறாள்.

171. தலைவி கூற்று

171. தலைவி கூற்று

பாடியவர்: பூங்கணுத்திரையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48 – இல் காணாலாம்.
திணை: மருதம்.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்குத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் காதலைப் பற்றி அறியாத பெற்றோர் அவள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். அவளைப் பெண் கேட்க சிலர் வந்தனர். இதையெல்லாம் கண்ட தோழி தலைவிக்குத் தலைவன் அல்லாத வேறு எவரோடாவது திருமணம் நடந்து விடுமோ?” என்று கவலைப்படுகிறாள். தோழியின் கவலையைக் கண்ட தலைவி, இந்த முயற்சிகளால் எவ்விதப் பயனும் இல்லை என்று தோழியிடம் கூறுகிறாள்.

காண் இனி வாழி தோழி யாணர்க்
கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட
மீன்வலை மாப் பட்டாஅங்கு
இது மற்று எவனோ நொதுமலர் தலையே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! இனி காண்! யாணர்க் கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட மீன்வலை மா பட்டாஅங்கு நொதுமலர் தலை!  இது மற்று எவனோ

அருஞ்சொற்பொருள்: இனி = இப்பொழுது; யாணர் = புது வருவாய்; கடும் புனல் = விரைந்து வரும் நீர் (வெள்ளம்); அடைகரை = அடைந்தகரை; கயம் = குளம்; நெடுங்கயம் = ஆழமான குளம்; மா = விலங்கு; மற்றுஅசை நிலை; நொதுமலர் = அயலார்; தலை = இடம்.


உரை: தோழி! நீ வாழ்க! இப்பொழுது பார்! புதிதாக விரைந்து வரும் நீரும்  அதற்கேற்ற கரையையுமுடைய, ஆழமான குளத்தில் மீனுக்காக வீசிய வலையில் விலங்கு அகப்பட்டதுபோல், தலைவனைத் தவிர வேறு ஒருவரிடத்து என்னைத் திருமணம் செய்விக்கும் இந்த முயற்சி என்ன பயனைத் தரப்போகிறது? 

170. தலைவி கூற்று

170. தலைவி கூற்று

பாடியவர்: கருவூர்கிழார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான்.  தலைவி தனிமையில் வருந்துவாள் என்று எண்ணித் தோழி அவளைக் காணவந்தாள். ” தலைவர் உன்னைவிட்டுப் பிரிந்திருப்பதால் பலரும் பலவிதமாகப் பேசுகிறார்கள். அதைப் பற்றி நீ கவலைப் படாதேஎன்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். தலைவி, “எங்கள் காதல் விதிவசத்தால் தோன்றியது. அதற்கு என்றும் அழிவில்லை. யார் எதை வேண்டுமானலும் பேசட்டும். அதைப் பற்றி என்க்குக் கவலை இல்லைஎன்று தோழியிடம் கூறுகிறாள்.


பலவும் கூறுகவஃ தறியா தோரே
அருவி தந்த நாட்குர லெருவை
கயனா டியானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.

கொண்டு கூட்டு: அருவி தந்த நாட்குரல் எருவை  கயம் நாடு யானை கவளம் மாந்தும்  மலைகெழு நாடன் கேண்மை  தலைபோகாமை யான் நன்கு அறிந்தனென்.  அஃது அறியாதோர் பலவும் கூறுக

அருஞ்சொற்பொருள்: கெழு = பொருந்திய; நாள் குரல் = புதிய கொத்து; எருவை = கொறுக்காந்தட்டை (நாணல்); கயம் = குளம்; நாடும் = ஆராயும்; கவளம் = வாயளவு கொண்ட உணவு; மாந்துதல் = உண்ணூதல்; கேண்மை = நட்பு; தலைபோதல் = பெருங்கேடுறுதல், முடிதல், அழிதல்; தலைபோகாமை = கெடாமை; நற்கு = நன்கு.
உரை: தோழி! அருவியால் விளைந்த புதிய கொத்தாக இருக்கும் கொறுக்காந்தட்டையை, ஆழமான நீர்நிலையை ஆராய்கின்ற யானை, கவளமாக உண்ணும். அத்தகைய,  மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனது நட்பு, கெடாமையை  நான் நன்றாக அறிவேன். அதனை, அறியாதவர்கள்தான் பலவிதமாகப் பேசுவார்கள்.

சிறப்புக் குறிப்பு:  அருவியை ஊழிற்கு உவமை கூறுவது மரபு. “நீர்வழிப் படூஉம் புணைபோலாருயிர் முறைவழிப்படூஉம்என்று கணியன் பூன்குன்றனார் புறநானூற்றுப் பாடல் 192 – இல் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.


குளத்தை நாடிச் செல்லும் யானை, எவ்வித முயற்சியும் இல்லாமல், அருவியின் நீரால் விளைந்த கொறுக்கந்தட்டையை உண்டதைப் போல, விதிவசத்தால் நானும் தலைவனும் சந்தித்துக் காதலித்தோம். எங்கள் காதல் என்றும் அழியாதுதலைவன் என்னை விரைவில்  திருமணம் செய்துகொள்வான். இதை அறியாதவர்கள் பலவாறாகப் பேசுவார்கள்என்று தலைவி கூறுகிறாள்.

169. தலைவி கூற்று

169. தலைவி கூற்று

பாடியவர்: வெள்ளிவீதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 29 - இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று -1:  கற்புக்காலத்துத் தெளிவிடை விலங்கியது.  (விலங்கியது = மாறுபட்டது)
கூற்று - 2: இனி, தோழி வரைவு நீட்டித்தவழி வரைவுகடாயதூஉம் ஆம்.
கூற்று விளக்கம் -1: கணவன் பரத்தையரோடு தொடர்பு கொண்டான் என்று எண்ணி மனைவி அவனோடு ஊடல் கொண்டாள். தனக்குப் பரத்தையரோடு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அவன் மிகத் தெளிவிவாகக் கூறிய பிறகும், அவள் அவனை நம்பாமல், “நான் என் உயிரையே வெறுக்கிறேன். நான் உன்னோடு வாழாமல் இறப்பதே நல்லதுஎன்று கூறுகிறாள்.
கூற்று விளக்கம் -2: தலைவன் திருமணம் செய்துகொள்வதற்குக் காலம் தாழ்த்துகிறான். அதனால் தலைவி வருத்தம் அடைந்தாள். அவள் வருத்தத்தை அறிந்த தோழி, “நீ திருமணம் செய்து கொள்வதற்குக் காலம் கடத்துகிறாய். நீ அவள் நலனை நுகர்ந்தாய். இனி, உன்னைத் திருமணம் செய்துகொள்ளாமலே அவள் உயிர் நீங்குவதாகுகஎன்று தலைவனிடம் கூறுகிறாள்.

சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்
றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம்
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
பாணர், பசுமீன் சொரிந்த மண்டைபோல
எமக்கும் பெரும்புல வாகி
நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே. 

கொண்டு கூட்டு: ஐய! யாம் நும்மொடு நக்க வால்வெள் எயிறு சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற் தெற்றென இறீஇயரோ!  பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல எமக்கும் பெரும்புலவு ஆகி நும்மும் பெறேஎம், எம் உயிர் இறீஇயர்!
அருஞ்சொற்பொருள்: சுரம் =பாலைநிலம்; கல் = மலை; கோடு = யானையின் தந்தம்; தெற்றென = விரைவாக; இறீஇயர் = கெடுவதாக ( முறிந்து போவனவாக, அழிவதாக); மற்றுஅசை; நக்க = சிரித்த; வால் = தூய்மை, வெண்மை; எயிறு = பல்; மண்டை = இரப்பவர்கள் பயன்படுத்தும் பாத்திரம், வாயகன்ற பாத்திரம்; புலவு = புலால் நாற்றம்; புலவுதல் = வெறுத்தல்.
உரை: ஐய! உம்மோடு மகிழ்ந்து சிரித்த என்னுடைய தூய வெண்மையான பற்கள், பாலை நிலத்தில் செல்லும் யானையின், மலையைக் குத்திய கொம்பைப் போல, விரைவாக, முறியட்டும்.  எனது உயிர், பாணர் தாம் பிடித்த பச்சை மீனை வைத்திருகிகும் பாத்திரத்தைப் போல, எனக்குப் பெரிய வெறுப்பைத் தந்து, உம்மையும் நான் பெறாமல் அழியட்டும்.

சிறப்புக் குறிப்பு: நாம் முன்பு அன்போடு மகிழ்ந்து சிரித்துப் பழகினோமே! அதை எல்லாம் மறந்து என்னிடம் கோபித்துக் கொள்கிறாயேஎன்று தலைவன் கூறியதற்குத், தலைவி,  “அவ்வாறு உம்மோடு மகிழ்ந்து சிரித்த என் பற்கள் முறியட்டும்என்று கூறியதாகவும் கருதலாம். ”வால்வெள் எயிறுஎன்பதற்குத்தூய வெண்மையான பற்கள்அல்லதுமிகவும் வெண்மையான பற்கள்என்று பொருள்கொள்ளலாம். இது ஒருபொருட் பன்மொழிக்கு எடுத்துக்காட்டு.

முதற் கருத்து: தலைவனின் பரத்தமையால் சினங்கொண்ட தலைவி, “பாணர் மீன் பிடித்துத் தமக்குரிய பாத்திரங்களில் போட்டு வைத்ததால் அப்பாத்திரம் மீன் நாற்றத்தால் வேறு எதற்கும் பயன்படாதது போல,  என் உயிர் எனக்கே வெறுப்புத் தருவதாயிற்று; உமக்கும் நான் இனிப் பயன்பட மாட்டேன். ஆகவே, என் உயிர் போகட்டும்என்று தலைவனை நோக்கிக் கூறுவதாகத் தோன்றுகிறது.


 இரண்டாவது கருத்து: ”நீ இன்னும் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றாய். நீ தலைவியின் நலனை நுகர்ந்தாய்; அவள் உன்னை அடைய மாட்டாள் போலத் தோன்றுகிறது. ஆகவே, இனி அவள் வாழ்ந்து என்ன பயன்?. அவள் உயிர் போகட்டும்என்று தோழி கூறியதாகவும், அவ்வாறு கூறினால், தலைவன் தலைவியை விரைவில் மணந்துகொள்வான் என்று தோழி கருதுவதாகவும் பொருள் கொள்ளலாம். இந்தக் கருத்தைவிட, முதற்கருத்து பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

Monday, March 14, 2016

168. தலைவன் கூற்று

168. தலைவன் கூற்று

பாடியவர்: சிறைக்குடி யாந்தையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 56-இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பொருள்வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவியைப் பிரிந்து, பொருள் தேடச் செல்லத் துணிந்த தன் நெஞ்சை நோக்கி, “தலைவியைப் பிரிய முடியவில்லை. பிரிந்தால் உயிர் வாழ முடியாதுஎன்று தலைவன் கூறுகிறான்.


மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
நறுந்தண் ணியளே நன்மா மேனி
புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்
 
மணத்தலுந் தணத்தலு மிலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. 

கொண்டு கூட்டு: நல் மாமேனி  மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து பெரும்பெயல் விடியல் விரித்துவிட்டன்ன,
நறுந்தண்ணியள் புனற்புணை அன்ன சாய் இறைப் பணைத்தோள் மணத்தலும் தணத்தலும் இலம்பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. 

அருஞ்சொற்பொருள்: மாரி = மழை; பித்திகம் = பிச்சிப்பூ; கொழுமுகை = கொழுவிய முதிர்ந்த மொட்டு; இரு = பெரிய; பனம் = பனை; பொதிந்து = மூடி; பெயல் = மழை; விடியல் = விடியற்காலம்; நறுமை = மணம்; தண் = குளிர்ச்சி; நல் = நல்ல; மா = கருமை; புனல் = நீர்; புணை = தெப்பம்; சாய்தல் = மெலிதல்; இறை =உடலுறுப்பின் மூட்டுவாய் (மணிக்கட்டு); பணை = மூங்கில்; மணத்தல் = கூடுதல்; தணத்தல் = பிரிதல்.


உரை:, தலைவி, நல்ல கருநிற மேனி உடையவள்.  அவள், மழைக்காலத்தில் மலரும் பிச்சியின், நீர் ஒழுகும் கொழுவிய முதிர்ந்த மொட்டுக்களில் பலவற்றைப்  பெரிய பசுமையான பனங்குடையில் ஒருங்கே வைத்து மூடி, பெருமழை பெய்யும்  விடியற்காலத்தில், விரித்துவிட்டாற் போன்ற,  நறுமணமும் குளிர்ச்சியும் உடையவள். என் காதல் வெள்ளத்தைக் கடந்து செல்லப் பயன்படும் தெப்பம் போன்றவள். அழகிய, மெல்லிய முன்கையையும், மூங்கில் போன்ற தோளையும் உடைய அவளைத் தழுவுந்தோறும் பிரிய முடியவில்லை. அவளைவிட்டுப் பிரிந்தால் உயிர் வாழ்தலும் இல்லை.