Monday, March 14, 2016

168. தலைவன் கூற்று

168. தலைவன் கூற்று

பாடியவர்: சிறைக்குடி யாந்தையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 56-இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பொருள்வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவியைப் பிரிந்து, பொருள் தேடச் செல்லத் துணிந்த தன் நெஞ்சை நோக்கி, “தலைவியைப் பிரிய முடியவில்லை. பிரிந்தால் உயிர் வாழ முடியாதுஎன்று தலைவன் கூறுகிறான்.


மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
நறுந்தண் ணியளே நன்மா மேனி
புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்
 
மணத்தலுந் தணத்தலு மிலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. 

கொண்டு கூட்டு: நல் மாமேனி  மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து பெரும்பெயல் விடியல் விரித்துவிட்டன்ன,
நறுந்தண்ணியள் புனற்புணை அன்ன சாய் இறைப் பணைத்தோள் மணத்தலும் தணத்தலும் இலம்பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. 

அருஞ்சொற்பொருள்: மாரி = மழை; பித்திகம் = பிச்சிப்பூ; கொழுமுகை = கொழுவிய முதிர்ந்த மொட்டு; இரு = பெரிய; பனம் = பனை; பொதிந்து = மூடி; பெயல் = மழை; விடியல் = விடியற்காலம்; நறுமை = மணம்; தண் = குளிர்ச்சி; நல் = நல்ல; மா = கருமை; புனல் = நீர்; புணை = தெப்பம்; சாய்தல் = மெலிதல்; இறை =உடலுறுப்பின் மூட்டுவாய் (மணிக்கட்டு); பணை = மூங்கில்; மணத்தல் = கூடுதல்; தணத்தல் = பிரிதல்.


உரை:, தலைவி, நல்ல கருநிற மேனி உடையவள்.  அவள், மழைக்காலத்தில் மலரும் பிச்சியின், நீர் ஒழுகும் கொழுவிய முதிர்ந்த மொட்டுக்களில் பலவற்றைப்  பெரிய பசுமையான பனங்குடையில் ஒருங்கே வைத்து மூடி, பெருமழை பெய்யும்  விடியற்காலத்தில், விரித்துவிட்டாற் போன்ற,  நறுமணமும் குளிர்ச்சியும் உடையவள். என் காதல் வெள்ளத்தைக் கடந்து செல்லப் பயன்படும் தெப்பம் போன்றவள். அழகிய, மெல்லிய முன்கையையும், மூங்கில் போன்ற தோளையும் உடைய அவளைத் தழுவுந்தோறும் பிரிய முடியவில்லை. அவளைவிட்டுப் பிரிந்தால் உயிர் வாழ்தலும் இல்லை.

No comments:

Post a Comment