Monday, March 14, 2016

163. தலைவி கூற்று

163. தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 49 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: தன்னுட் கையாறெய்திடு கிளவி. (கையாறு - செயலறுதல்.) 
கூற்று விளக்கம்: தலைவனது பிரிவினால் துன்புற்ற தலைவி காமமிகுதியால் செயலற்று, கடலை நோக்கி, “நள்ளிரவிலும் உன் குரல் கேட்கிறதே! உன்னை யார் வருத்தமடையச் செய்தது?” என்று வருந்திக் கூறுகிறாள்.


யாரணங் குற்றனை கடலே பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே. 

கொண்டு கூட்டு: கடலே! பூழியர் சிறுதலை வெள்ளைத் தோடு பரந்தன்ன மீன் ஆர் குருகின் கானலம் பெருந்துறை வெள்வீத்தாழை திரையலை நள்ளென் கங்குலும் கேட்கு நின் குரலேயார் அணங்குற்றனை?

அருஞ்சொற்பொருள்: அணங்கு = வருத்தம்; பூழி = ஒரு நாடு ( ஆடுகள் மிகுந்த நாடு); வெள்ளை = வெள்ளாடு; தோடு = தொகுதி (கூட்டம்) ; பரத்தல் = பரவுதல் ; ஆர்தல் = உண்ணுதல்; குருகு = கொக்கு (நாரை); கானல் = கடற்கரைச் சோலை; வீ = பூ; அலைக்கும் = அசைக்கும்; நள் = நடு,செறிவு; கங்குல் = இரவு.

உரை: கடலே! பூழி நாட்டாரது, சிறிய தலையையுடைய, வெள்ளாட்டுக் கூட்டம் பரவினாற்போன்ற, மீனை உண்ணும் கொக்குகள் பரவி இருக்கும்  சோலை சூழ்ந்த பெரிய நீர்த்துறையில், வெண்ணிறமான பூவையுடைய தாழையை, அலைகள் மோதி அசைக்கின்ற, நடு இரவிலும்,  உன் குரல் கேட்கிறது. நீ யாரால் வருத்தம் அடைந்தாய்?


No comments:

Post a Comment