Saturday, March 26, 2016

170. தலைவி கூற்று

170. தலைவி கூற்று

பாடியவர்: கருவூர்கிழார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான்.  தலைவி தனிமையில் வருந்துவாள் என்று எண்ணித் தோழி அவளைக் காணவந்தாள். ” தலைவர் உன்னைவிட்டுப் பிரிந்திருப்பதால் பலரும் பலவிதமாகப் பேசுகிறார்கள். அதைப் பற்றி நீ கவலைப் படாதேஎன்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். தலைவி, “எங்கள் காதல் விதிவசத்தால் தோன்றியது. அதற்கு என்றும் அழிவில்லை. யார் எதை வேண்டுமானலும் பேசட்டும். அதைப் பற்றி என்க்குக் கவலை இல்லைஎன்று தோழியிடம் கூறுகிறாள்.


பலவும் கூறுகவஃ தறியா தோரே
அருவி தந்த நாட்குர லெருவை
கயனா டியானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.

கொண்டு கூட்டு: அருவி தந்த நாட்குரல் எருவை  கயம் நாடு யானை கவளம் மாந்தும்  மலைகெழு நாடன் கேண்மை  தலைபோகாமை யான் நன்கு அறிந்தனென்.  அஃது அறியாதோர் பலவும் கூறுக

அருஞ்சொற்பொருள்: கெழு = பொருந்திய; நாள் குரல் = புதிய கொத்து; எருவை = கொறுக்காந்தட்டை (நாணல்); கயம் = குளம்; நாடும் = ஆராயும்; கவளம் = வாயளவு கொண்ட உணவு; மாந்துதல் = உண்ணூதல்; கேண்மை = நட்பு; தலைபோதல் = பெருங்கேடுறுதல், முடிதல், அழிதல்; தலைபோகாமை = கெடாமை; நற்கு = நன்கு.
உரை: தோழி! அருவியால் விளைந்த புதிய கொத்தாக இருக்கும் கொறுக்காந்தட்டையை, ஆழமான நீர்நிலையை ஆராய்கின்ற யானை, கவளமாக உண்ணும். அத்தகைய,  மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனது நட்பு, கெடாமையை  நான் நன்றாக அறிவேன். அதனை, அறியாதவர்கள்தான் பலவிதமாகப் பேசுவார்கள்.

சிறப்புக் குறிப்பு:  அருவியை ஊழிற்கு உவமை கூறுவது மரபு. “நீர்வழிப் படூஉம் புணைபோலாருயிர் முறைவழிப்படூஉம்என்று கணியன் பூன்குன்றனார் புறநானூற்றுப் பாடல் 192 – இல் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.


குளத்தை நாடிச் செல்லும் யானை, எவ்வித முயற்சியும் இல்லாமல், அருவியின் நீரால் விளைந்த கொறுக்கந்தட்டையை உண்டதைப் போல, விதிவசத்தால் நானும் தலைவனும் சந்தித்துக் காதலித்தோம். எங்கள் காதல் என்றும் அழியாதுதலைவன் என்னை விரைவில்  திருமணம் செய்துகொள்வான். இதை அறியாதவர்கள் பலவாறாகப் பேசுவார்கள்என்று தலைவி கூறுகிறாள்.

No comments:

Post a Comment