Saturday, March 26, 2016

171. தலைவி கூற்று

171. தலைவி கூற்று

பாடியவர்: பூங்கணுத்திரையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48 – இல் காணாலாம்.
திணை: மருதம்.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்குத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் காதலைப் பற்றி அறியாத பெற்றோர் அவள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். அவளைப் பெண் கேட்க சிலர் வந்தனர். இதையெல்லாம் கண்ட தோழி தலைவிக்குத் தலைவன் அல்லாத வேறு எவரோடாவது திருமணம் நடந்து விடுமோ?” என்று கவலைப்படுகிறாள். தோழியின் கவலையைக் கண்ட தலைவி, இந்த முயற்சிகளால் எவ்விதப் பயனும் இல்லை என்று தோழியிடம் கூறுகிறாள்.

காண் இனி வாழி தோழி யாணர்க்
கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட
மீன்வலை மாப் பட்டாஅங்கு
இது மற்று எவனோ நொதுமலர் தலையே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! இனி காண்! யாணர்க் கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட மீன்வலை மா பட்டாஅங்கு நொதுமலர் தலை!  இது மற்று எவனோ

அருஞ்சொற்பொருள்: இனி = இப்பொழுது; யாணர் = புது வருவாய்; கடும் புனல் = விரைந்து வரும் நீர் (வெள்ளம்); அடைகரை = அடைந்தகரை; கயம் = குளம்; நெடுங்கயம் = ஆழமான குளம்; மா = விலங்கு; மற்றுஅசை நிலை; நொதுமலர் = அயலார்; தலை = இடம்.


உரை: தோழி! நீ வாழ்க! இப்பொழுது பார்! புதிதாக விரைந்து வரும் நீரும்  அதற்கேற்ற கரையையுமுடைய, ஆழமான குளத்தில் மீனுக்காக வீசிய வலையில் விலங்கு அகப்பட்டதுபோல், தலைவனைத் தவிர வேறு ஒருவரிடத்து என்னைத் திருமணம் செய்விக்கும் இந்த முயற்சி என்ன பயனைத் தரப்போகிறது? 

No comments:

Post a Comment