Showing posts with label 118. தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 118. தலைவி கூற்று. Show all posts

Monday, December 7, 2015

118. தலைவி கூற்று

118. தலைவி கூற்று

பாடியவர்: நன்னாகையார்.  இவரும் கச்சிப்பேட்டு நன்னாகையார் என்பவரும் ஒருவரே என்று கருதப்படுகிறது. இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 30-இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவு (திருமணம்) நீட்டித்த வழித் தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். திருமணத்திற்கு  காலம் நீடித்துகொண்டே இருக்கிறது. தலைவன்  வருவான் என்று ஒவ்வொரு நாளும் தலைவி எதிர்பார்க்கிறாள். ஒருநாள் மாலைப்பொழுது வந்தது. அன்றும் தலைவன் வராததால் ஏமாற்றத்தோடு இருந்த தலைவி, தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.  

புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நாரில் மாலைப்
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ எனவும்
வாரார் தோழிநங் காத லோரே. 

கொண்டுகூட்டு: தோழி! புள்ளும் மாவும் புலம்பொடு வதியநள்ளென வந்த நார்இல் மாலைப் பலர்புகு வாயில் அடைப்ப, கடவுநர் வருவீர் உளீரோ எனவும்  நம் காதலோர் வாரார்.

அருஞ்சொற்பொருள்: புள் = பறவை ; மா = விலங்கு ; புலம்பு = தனிமை; வதிதல் = தங்குதல்;  நள்என = செறிவாக ; நார் = இரக்கம்; கடவுநர் = வினவுவோர்.

உரை: தோழி! பறவைகளும் விலங்குகளும், தனிமையில் தங்க, ”நள்என்னும் ஓசையுடன் வந்த அன்பில்லாத மாலைக் காலத்தில், பலரும் புகுதற்குரிய வீட்டு வாயிலை அடைக்க எண்ணி, ”யாராவது உள்ளே வருவதற்கு இருக்கின்றீர்களோஎன்று வினாவுவார்   கேட்கவும், நம் தலைவர் வாரார் ஆயினர்.


சிறப்புக் குறிப்பு: பழங்காலத்தில், விடுதிகளோ சத்திரங்களோ இல்லை. ஆகவே, வழிப்போக்கர்கள், ஆங்காங்கே உள்ள வீடுகளின் புறத்திண்ணையில் தங்குவது வழக்கம். வீட்டுக்குரியவர்கள், இரவில் வாயிற் கதவை அடைப்பதற்குமுன் யாராவது திண்ணையிலே இருக்கிறார்களா என்று பார்த்து, அவர்களுக்கு உணவும், இரவு தங்குவதற்கு வசதியும் அளிப்பது வழக்கம். தலைவியின் வீட்டில், இரவில் கதவை அடைக்குமுன்யாரவது உள்ளே வருவதற்கு இருக்கின்றீர்களோ?” என்று வினவியபோது, தலைவன் இருந்தால், அவனும் வழிப்போக்கன் போல வீட்டுக்குள் வந்து தலைவியைச் சந்தித்திருப்பான். ஆனால் அவன் வரவில்லை. தலைவன் வராததால் தலைவி ஏமாற்றம் அடைந்தாள். அவள் தன் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள்