Showing posts with label 122. தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 122. தலைவி கூற்று. Show all posts

Thursday, December 24, 2015

122. தலைவி கூற்று

122.  தலைவி கூற்று

பாடியவர்:
ஓரம் போகியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 10 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: தலைமகள் பொழுது கண்டு அழிந்தது (வருந்தியது).
கூற்று விளக்கம்: தலைவி தலைவனைப் பிரிந்திருக்கிறாள். பிரிவினால் தலைவி வருந்துகிறாள். ஒருநாள், மாலைப்பொழுது வந்ததைக் கண்டு துன்புற்று, “இம்மாலையோடு என் துன்பம் தீராது. இந்த மாலைக்குப் பிறகு நள்ளிரவும் வரப் போகிறதே!” என்று நினைத்து வருந்துகிறாள்.

பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன
குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே. 

கொண்டு கூட்டு: பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன குண்டுநீர் ஆம்பலும் கூம்பின. இனியே மாலை வந்தன்று; ஒருதான் அன்றே, கங்குலும் உடைத்தே. வாழியோ!

அருஞ்சொற்பொருள்: பை = உடல்வலிமை, பசுமை; புன் = புல்லிய (சிறிய); புறம் = முதுகு; குண்டு = ஆழம்; ஆம்பல் = அல்லி மலர் ; இனி = இப்பொழுது ; வந்தன்று = வந்தது; மாலை = இரவு ஆறு மணி முதல் பத்து மணி வரை ; கங்குல் = இரவு பத்து மணி முதல் இரண்டு மணி வரை; வாழியோ= வசையைக் குறிக்கும் குறிப்புமொழி (அதாவது, இங்கு எதிர்மறையாகப் பொருள்கொள்ள வேண்டும்) . எழுத்தோடும் சொல்லோடும் சேராமல் சொல்லினால் உணரப்படும் பொருளின் புறத்தே வேறு பொருள் உணர்த்துவதைத் தொல்காப்பியம் குறிப்புமொழிஎன்று கூறுகிறது.
உரை: வலிமையான கால்களை உடைய கொக்கின்  சிறிய முதுகைப் போல், ஆழமான நீரில் உள்ள ஆம்பல் மலர்களும் குவிந்தன. இப்பொழுது மாலைநேரம் வந்தது. இந்த மாலை மட்டும் தனித்து வராமல் நள்ளிரவும் வரப்போகிறதே! வாழ்க இந்த மாலைப்பொழுது!


சிறப்புக் குறிப்பு: ஆம்பல் மலர்கள் குவிந்ததற்குக் காரணம் நீர்வளம் குன்றியிருப்பது அன்று. ”குண்டு நீர் ஆம்பல்என்றதால் ஆம்பல் மலர்கள் குவிந்திருப்பதற்குக் காரணம் மாலைநேரம் மட்டுமே என்பது தெளிவு. மாலை நேரம் தன்னை வருத்துவது மட்டுமல்லாமல் இரவையும் கொண்டுவருவதால், தலைவிவாழியோ மாலைஎன்றது அவளுக்கு மாலைநேரத்தின்மீதுள்ள வெறுப்பைக் குறிக்கிறது.