Showing posts with label 140. தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 140. தலைவி கூற்று. Show all posts

Saturday, January 16, 2016

140. தலைவி கூற்று

140.  தலைவி கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 32-இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பொருள்வயிற் பிரிந்தவிடத்து, நீ ஆற்றுகின்றிலை யென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்திருக்கிறான். தலைவி பிரிவினால் வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “நீ பிரிவினால் மிகவும் வருந்துகிறாயே! தலைவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை பொறுத்துக்கொள்.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். அதைக்கேட்ட தலைவி, “நான் படும் துன்பத்தை இவ்வூர் எப்படி அறிந்தது?” என்று தோழியைக் கேட்கிறாள்.

வேதின வெரிநின் ஓதிமுது போத்து
ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து
ஈங்கியான் தாங்கிய எவ்வம்
யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே. 

கொண்டுகூட்டு: காதலர், வேதின வெரிநின் ஓதிமுது போத்து ஆறுசெல் மாக்கள் புள்கொளப் பொருந்தும் சுரன்  சென்றனர். உரனழிந்து ஈங்கியான் தாங்கிய எவ்வம்
 ழுங்கலூர்  யாங்கறிந்தன்று?

அருஞ்சொற்பொருள்: வேதினம்  = கருக்கரிவாள்; வெரிந் = முதுகு; ஓதி = ஓந்தி (ஓந்தி என்பது ஓதியென இடைக்குறைந்து வந்தது)  = ஓணான்; போத்து = விலங்குகளின் ஆண் (குறிப்பாக புலி, மான் ஆகியவற்றின் ஆண்);  புள் = நிமித்தம்; சுரன் = பாலைநிலம்; உரன் = வலிமை; ஈங்கு = இங்கு; எவ்வம் = துன்பம்; அழுங்குதல் = மிகவருந்துதல், இரங்குதல்.

உரை: தலைவர், வழிச்செல்லும் மனிதர்கள் கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடைய, முதிய ஆண் ஓணானை நிமித்தமாகக் கொள்ளும், பாலைநிலத்து வழியில் சென்றார். வலிமை அழிந்து, அவர் பிரிந்த பிறகு, இங்கே இருந்து நான் தாங்கிக் கொண்டுள்ள துன்பத்தை, இப்பொழுது மிகவும்வருத்தத்தில் இருக்கும் இவ்வூர், எவ்வாறு அறிந்தது?


சிறப்புக் குறிப்பு: தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றபொழுது, அவனைத் தோழி தடுத்து நிறுத்தாமல், இப்பொழுது வந்து தனக்குக் ஆறுதல் கூறுவதால் சினமுற்ற தலைவி, தோழியைத் தன்னிடமிருந்து வேறுபடுத்துவதற்காக, அவளை ஊர் மக்களோடு இணைத்துக் கூறினாள்.  “அவர் பிரிந்து சென்றபொழுது இல்லாத வருத்தம் உனக்கு இப்பொழுது எப்படி வந்தது?” என்று தலைவியை மறைமுகமாகக் கேட்கிறாள்