Showing posts with label 180. தோழி கூற்று. Show all posts
Showing posts with label 180. தோழி கூற்று. Show all posts

Monday, April 18, 2016

180. தோழி கூற்று

180. தோழி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார். இவறைப் பற்றிய செய்திகளைப் பாடல் 30 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது (உறுதியாகச் சொல்லுதல்).
கூற்று விளக்கம்: தலைவனின் பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “அவர் சென்ற இடத்தில் தாம் விரும்பிய பொருளைப் பெற்றாரோ? இல்லையோ? அவர் பொருளை பெற்றிருப்பாரானால் உடனே மீண்டு வருவார்என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

பழூஉப்பல் அன்ன பருவுகிர்ப் பாஅடி
இருங்களிற்று இனநிரை ஏந்தல் வரின்மாய்ந்து
அறைமடி கரும்பின் கண்ணிடை அன்ன
பைதல் ஒருகழை நீடிய சுரன்இறந்து
எய்தினர் கொல்லோ பொருளே, அல்குல்
அவ்வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத்தாம் சென்ற நாட்டே.

கொண்டு கூட்டு: பழூஉப்பல் அன்ன பருஉகிர்ப் பா அடி இருங்களிற்று இனநிரை ஏந்தல் வரின், மாய்ந்து அறைமடி கரும்பின் கண்ணிடை அன்ன பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்துநம் அல்குல் அவ்வரி வாட  வன்பர் ஆகத் துறந்தோர், தாம் சென்ற நாட்டே பொருளே எய்தினர் கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: பழு = பேய்; பரு = பருமை; உகிர் = நகம்; பா = பரவுதல்; இரு = பெரிய; களிறு = யானை; இனம் = கூட்டம்; நிரை = வரிசை; ஏந்தல் = தலைவன்; மாய்ந்து = அழிந்து; அறை = பாத்தி; மடிதல் = வீழ்தல்; கண் = கணு; பைதல் = வருத்தம்; கழை = மூங்கில்; நீடிய = ஓங்கிய; சுரன் = பாலை நிலம்; இறந்து = கடந்து; எய்துதல் = அடைதல்; வரி = தேமல்; வன்பர் = வன்னெஞ்சினர் ( அன்பில்லாதவர்); அல்குல் = இடை.

உரை:, பேயின் பற்களைப் போன்ற, பருத்த நகங்களையும் பரந்த பாதங்களையும் உடைய  பெரிய யானைக் கூட்டத்திற்குத் தலைமைதாங்கி வந்த யானை புகுந்ததால், அழிந்து,  பாத்தியில் வீழ்ந்த கரும்புகளின், கணுக்களின் இடையேயுள்ள பகுதியைப் போன்ற,  வருத்தத்திற்குரிய ஒற்றை மூங்கில், மட்டும் ஓங்கிவளர்ந்து நிற்கும்  பாலைநிலத்தைக் கடந்து, நமது இடையில் உள்ள அழகிய தேமல் வாடும்படி (நாம் வாடும்படி),  நம்மைப் பிரிந்த வன்னெஞ்சினரான தலைவர் தாம் போன இடத்தில் தேடிய பொருளைப் பெற்றாரோ? இல்லையோ?


சிறப்புக் குறிப்பு: யானையின் பாதத்தில் உள்ள நகத்திற்குப் பேயின் பல் உவமை. யானைகள் கூட்டமாகப் போகும்பொழுது அக்கூட்டத்திற்குமுன் ஒரு வலிய களிறு (ஆண் யானை) செல்லுவது வழக்கம். இங்கு ஏந்தல் என்றது தலைமை யானையைக் குறிக்கிறது. யானையால் முறிக்கப்பட்ட கரும்பின் ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்கும் இடையிலுள்ள அளவே வளர்ந்த ஒற்றை மூங்கில் மட்டுமே என்றதால் அது வருத்தத்திற்கு உரியதாயிற்று.