19.
மருதம் - தலைவன் கூற்று
பாடியவர்: பரணர். சங்க காலப்
புலவர்களிலேயே மிகவும்
சிறந்த புலவர்களில்
ஒருவர் பரணர். பரணரால் பாடப்படுவது பாராட்டுதற்குரியது என்ற கருத்தில் “பரணன் பாடினன்’ என்று ஒளவையார் குறிப்பிடுகிறார்
(புறநானூறு - 99).
பரணர், புறநானூற்றில் 13 செய்யுட்களும், அகநானூற்றில்
34 செய்யுட்களும், நற்றிணையில்
12 செய்யுட்களும், குறுந்தொகையில்
16 செய்யுட்களும், பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார். இவரால் பாடப்பட்டோர் உருவப்
பஃறேர் இளஞ்சேட்சென்னி,
சேரமான் குடக்கோ
நெடுஞ்சேரலாதன், சோழன்
வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி,
வையாவிக் கோப்பெரும்
பேகன், சேரமான் கடல்பிறக்கோட்டிய வேல்கெழு
குட்டுவன் ஆகியோராவர். இவருடைய பாடல்கள் வரலாற்றுச்
செய்திகள் நிறைந்தவை. இவர் கபிலரின் நண்பர். மருதத் திணைக்குரிய பாடல்கள்
இயற்றுவதில் வல்லவர்.
இவர் பதிற்றுப்பத்தில் கடல் பிறக்கோட்டிய வேல்குழு
குட்டுவனைப் பாடியதற்கு,
உம்பற்காட்டு வாரியையும்
அவன் மகன்
குட்டுவன் சேரனையும்
பரிசாகப் பெற்றதாகக்
கூறப்படுகிறது.
பாடலின்
பின்னணி:
தலைவன்
தலைவியைப் பிரிந்து சிலகாலம் வாழ்ந்து வந்தான். அவன் திரும்பி வந்தபொழுது,
தலைவி அவன்மீது மிகுந்த கோபத்தோடு ஊடினாள். அவன் தலைவிடம் தன் அன்பைத் தெரிவித்து
அவளைத் தேற்றினான். ஆனால்,
அவள் பின்னும் தொடர்ந்து ஊடினாள். “இவள் தன் பழைய தன்மையிலிருந்து
மாறி நம்மோடு உறவில்லாதவள் போல் இருக்கின்றாள்” என்று தன்
நெஞ்சை நோக்கித் தலைவன் வருந்திக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.
அருஞ்சொற்பொருள்: எவ்வி = ஒரு சிற்றரசன்; வறுந்தலை = வறிய
தலை; புல்லென்று = பொலிவிழந்து;
இனைதல் = வருந்துதல்; மதி
– முன்னிலை அசைச் சொல்; மனை = வீடு; எல் = ஒளி; மௌவல் = முல்லை ; நாறுதல்
= மணத்தல்; பல் = பல;
இரு = கரிய.
உரை: வீட்டிற்கு
அருகே உள்ள மரத்தில் படர்ந்திருந்த முல்லைகொடியின் பூக்கள் மணக்கும் அடர்ந்த கரிய கூந்தலை
உடைய இவள் இனி நமக்கு என்ன உறவோ?
ஆதலால், எவ்வி என்னும் வள்ளலை இழந்ததால் வறுமையுற்ற
யாழ்ப்பாணர்களின் தலைகள் பொன்னாலான பூக்கள் இல்லாமல் பொலிவிழந்து காணப்படுவதுபோல்,
நெஞ்சே, நீயும் இனி பொலிவிழந்து வருந்துவாயாக!
விளக்கம்: எவ்வி
என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநிலமன்னன். அவன் வேள்
எவ்வி என்றும் அழைக்கப்பட்டான். அவன் பாணர்களுக்குப்
பொன்னாலான பூக்களை அளித்து அவர்களை ஆதரித்து வந்ததாகத் தெரிகிறது. அவன் போரில் இறந்ததைக் கேட்ட புலவர் வெள்ளெருக்கிலையார், அவன் இறந்த செய்தி பொய்யாகட்டும் என்று விரும்புவதைப் புறநானூற்றுப் பாடல்
233—இல் காணலாம். வள்ளலாக விளங்கிய எவ்வி இறந்ததால்,
பாணர்கள் தங்கள் யாழை முறித்து எறிந்தனர் என்ற செய்தி அகநானூற்றுப் பாடல்
15-இல் காணப்படுகிறது.
இப்பாடலில், எவ்வி பாணர்களுக்குப் பொன்னாலான பூக்களை அளித்து அவர்களை ஆதரித்தது போல்
, தலைவன் தலைவியோடு வாழ்ந்த காலத்தில், தலைவி அவனுடன்
அன்போடும் அவனுக்கு ஆதரவாகவும் இருந்தாள் என்ற செய்தி உள்ளுறை உவமமாகக் கூறப்பட்டிருக்கிறது.
இச்சிறிய பாடலில், ஒருவரலாற்றுக் குறிப்பையும்,
கருப்பொருளாகிய முல்லையையும் மருத்திணைக்குரிய ஊடலையும் புலவர் இணைத்துக் கூறியிருப்பது இப்பாடலின்
சிறப்பு.