Showing posts with label 190. தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 190. தலைவி கூற்று. Show all posts

Sunday, May 1, 2016

190. தலைவி கூற்று

190.  தலைவி கூற்று

பாடியவர்: பூதம் புலவனார். இவர் பெயர் பூதம் புலவர்என்றும்பூதம் புல்லனார்என்றும்  பிரதிகளில் காணப்படுகிறது. இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.  
திணை: முல்லை.
கூற்று: பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகக் கணவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவினால் அவள் வளையல்கள் நெகிழுமாறு மெலிந்தாள். ஒருநாள், நள்ளிரவில் இடியுடன் கூடிய பெரிய மழை பெய்கிறது. அவள் தூக்கமில்லாமல் கணவன் நினைவாகவே இருக்கிறாள். ”நடு இரவில் நான் இவ்வாறு உறக்கமின்றி துன்பப்படுவதை என் கணவர் அறிவாரோ?”  என்று தோழியிடம் தன் துன்பத்தைப் பகிர்ந்துகொள்கிறாள்.


நெறியிரும் கதுப்பொடு பெருந்தோள் நீவிச்
செறிவளை நெகிழச் செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி தோழி ! பொறிவரி
வெஞ்சின அரவின் பைந்தலை துமிய
உரம்உரும் உரறும் அரைஇருள் நடுநாள்
நல்லேறு இயங்குதோறு இயம்பும்
பல்ஆன் தொழுவத்து ஒருமணிக் குரலே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! நெறி இரும் கதுப்பொடு பெருந்தோள் நீவிச் செறிவளை நெகிழ , செய்பொருட்கு அகன்றோர்பொறிவரி வெஞ்சின அரவின் பைந்தலை துமிய உரம்உரும் உரறும் அரை இருள் நடுநாள் பல் ஆன் தொழுவத்து நல்லேறு இயங்குதோறு  இயம்பும் ஒருமணிக் குரலே அறிவர்கொல்?

அருஞ்சொற்பொருள்: நெறி = நெளி; இரு = கரிய; கதுப்பு = கூந்தல்; நீவி = தடவி; செறிவு = அடர்த்தி; பொறி = புள்ளி; பைந்தலை =  படமுள்ள தலை; துமித்தல்  = துண்டித்தல்; உரம் = வலி; உரும் = இடி; உரறும் = முழங்கும்; அரைஇருள் = ; நடுநாள் = நள்ளிரவு; ஏறு = காளை; இயங்குதல் = அசைதல், செல்லுதல்; இயம்புதல் = ஒலித்தல்; பல்லான் = பல்+ஆன் = பல பசுக்கள்; தொழுவம் = மாட்டுக் கொட்டில்.

உரை: தோழி, நெளிந்த கரிய கூந்தலையும், பெரிய தோள்களையும் தடவி,  என்னைத் தேற்றி, இறுகச் செறித்த வளையல்கள் நெகிழும்படி, தாம் பொருள் ஈட்டும் பொருட்டு, என்னைப்பிரிந்து சென்ற தலைவர், புள்ளிகளையும், வரிகளையும் உடைய, மிகுந்த சினமுள்ள பாம்புகளின் படமுள்ள தலைகள் துண்டிக்கும்படி, வலிமை உடைய இடியேறு முழங்குகின்ற நடு இரவில், பல பசுக்கள் உள்ள தொழுவத்தில், நல்ல காளை ஒன்று அசையுந்தோறும் ஒலிக்கின்ற, ஒற்றை மணியின் ஒலியை அறிவாரோ?

சிறப்புக் குறிப்பு:  தன்  வீட்டுக்கு அருகே, தொழுவத்தில் உள்ள காளையின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒற்றை மணியிலிருந்து எழும் ஒலியைத் தலைவி கேட்கிறாள். அந்த ஒலி, காளை பசுக்களோடு இன்பமாக இருக்கும் பொழுது. காளையின் அசைவினால் தோன்றியது என்பதை அவள் உணர்கிறாள். அச்சத்தைத் தரும் நள்ளிரவில் பசுக்கள் இன்பமாக இருப்பதை உணர்ந்த தலைவி, ”நான் கேட்பதைப்போல் மணியொலியைத் தலைவர் கேட்பாரோ? அவ்வாறு அவர் அந்த ஒலியைக் கேட்டால், நான் படும் துன்பத்தை உணர்ந்து விரைவில் திரும்பிவருவார்என்று நினைக்கிறாள்.  


அரைஇருள் நடுநாள்என்பதை, “அரைநாள் நடுஇருள்என்று கொண்டுகூட்டி, “ஒருநாளின் பாதியாகிய இரவில், இருள் நடுவில்என்று பொருள் கொள்க