Showing posts with label 194. தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 194. தலைவி கூற்று. Show all posts

Sunday, May 15, 2016

194. தலைவி கூற்று

194.  தலைவி கூற்று

பாடியவர்: கோவர்த்தனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 66 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற (வருந்தும்) தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: கார்காலத்தில் வருவதாகக் கூறித் தலைவன் பிரிந்து சென்றான். மேகங்களின் இடி முழக்கத்தாலும், மயில்களின் ஆரவாரத்தாலும் கார்காலம் வந்துவிட்டது என்பதைத் தலைவி உணர்கிறாள். கார்காலம் வந்தும் தலைவன் வரவில்லையே என்று தலைவி வருந்துகிறாள். தன் மனநிலையைத் தலைவி தோழிக்குக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

என்எனப் படுங்கொல் தோழி மின்னுபு
வானேர் பிரங்கும் ஒன்றோ? அதன்எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்குஎன்
பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே. 

கொண்டு கூட்டு: தோழி! மின்னுபு வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர் கான மஞ்ஞை கடிய ஏங்கும் ஏதில கலந்த இரண்டற்கு, என் பேதை நெஞ்சம் பெருமலக்குறும். என் எனப் படும்?

அருஞ்சொற்பொருள்: என் எனப்படும் = எத்தகையது என்று சொல்லப்படும்; மின்னுபு = மின்னி; வான் = மேகம்; ஏர்பு = எழுந்து; இரங்கும் = ஒலிக்கும்; கானம் = காடு ; மஞ்ஞை = மயில்; கடிய = விரைவாக; ஏங்கும் = அகவும் (ஆரவாரிக்கும், ஒலிக்கும், கூவும்); ஏதில = தொடர்பில்லாத; மலக்குறும் = கலக்கத்தை அடையும்.


உரை: தோழி! கடல் நீரைக் குடித்து மேலே எழுந்து மின்னலோடு ஒலிக்கின்ற மேகத்தின் செயல் ஒன்றுதானா எனக்குத் துன்பந் தருவது? அந்த மேகம் ஒலித்ததற்கு மறுமொழி கூறுவதுபோல்,  காட்டிலுள்ள மயில்கள், விரைவாக ஆரவாரிக்கின்றன. இவ்வாறு எனக்குத் தொடர்பில்லாத இவ்விரண்டினாலும்  எனது பேதைமை மிக்க நெஞ்சம், பெரிய கலக்கத்தை அடைகிறது. என் மனநிலையை என்னவென்று சொல்லுவது?