Showing posts with label 195. தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 195. தலைவி கூற்று. Show all posts

Sunday, May 15, 2016

195. தலைவி கூற்று

195. தலைவி கூற்று

பாடியவர்: தேரதரனார். இவர் எழுதியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: பிரிவிடைப் பருவவரவின்கட் கிழத்தி மெலிந்து கூறியது.
கூற்று விளக்கம்: கார்காலத்தில் திரும்பி வருவதாகத் தலைவன் கூறிச் சென்றான். கார்காலம் வந்தது. காதலர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைக்காலமும் வந்தது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. ”தான் மேற்கொண்ட பணியை முடிக்கச் சென்றவர் எனது நிலையை உணராதவராக உள்ளார். அவர் இப்பொழுது எங்கே இருக்கிறாரோ?” என்று தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.

சுடர்சினம் தணிந்து குன்றம் சேரப்
படர்சுமந்து எழுதரு பையுள் மாலை
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர்
இன்னாது இரங்கும் என்னார் அன்னோ
தைவரல் அசைவளி மெய்பாய்ந்து உறுதரச்
செய்வுறு பாவை அன்னஎன்
மெய்பிறிது ஆகுதல் அறியா தோரே. 

கொண்டு கூட்டு: அன்னோ! அசைவளி தைவரல் மெய்பாய்ந்து உறுதரச் செய்வுறு பாவை அன்ன என் மெய்பிறிதாகுதல் அறியாதோர் வேண்டுவினை முடிநர்  சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப் படர்சுமந்து எழுதரு பையுள் மாலை இன்னாது இரங்கும் என்னார் யாண்டுளர் கொல்லோ?  

அருஞ்சொற்பொருள்: சுடர் = கதிரவன்; சினம் = வெம்மை; படர் = துன்பம்; பையுள் = துன்பம்; முடிநர் = முடிப்பவர்; இன்னாது = துன்பத்தைத் தருவது; இரங்கல் = வருந்துதல், உள்ளம் உருகுதல்; அன்னோ = அந்தோ; தைவரல் = தடவுதல்; வளி = காற்று; உறுதல் = தொடுதல்; பிறிதாகுதல் = வேறுபாடுடையதாகுதல்.


உரை: அந்தோ! அசைந்து வரும் காற்று, என் உடலைத் தழுவிச் செல்வதால்,  ஒப்பனை செய்யப்பட்ட பாவையைப் போன்ற எனது உடல்  மெலிவதை (வேறுபாடு அடைவதை) அறியாமல், தாம் விரும்பிச்சென்ற பணியை முடிப்பதற்காக என்னைப் பிரிந்து சென்ற தலைவர்கதிரவன் வெம்மை நீங்கி, மலையில் மறையும் துன்பத்தைச் சுமந்துவரும் மாலைக் காலம் துன்பத்தைத் தருவது என்பதை உணராமல், ”நான் வருந்துவேன்என்பதையும்  உணராமல் எங்கே இருக்கின்றாரோ