Showing posts with label 207. தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 207. தலைவி கூற்று. Show all posts

Sunday, June 26, 2016

207. தலைவி கூற்று

207. தலைவி கூற்று

பாடியவர்: உறையனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: செலவுக் குறிப்பறிந்து, அவர் செல்வார் என்று தோழி சொல்லக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து, பொருள்தேடச் செல்லுவதற்கு முடிவு செய்தான். தலைவியிடம் பிரிவைப் பற்றிச் சொன்னால், பிரிவது கடினம் என்று எண்ணிய தலைவன் அவளிடம் சொல்லாமலேயே பிரிந்து சொல்லத் துணிந்தான். ”தலைவன் உன்னிடம் சொல்லாமல் உன்னைவிட்டுப் பிரிந்து செல்லப் போகிறான்என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.  “அச்செய்தியைப் பலரும் என்னிடம் ஏற்கனவே கூறினர். தலைவன் பிரிந்து செல்லுவதைத் தடுத்து நிறுத்தாமல், இப்பொழுது வந்து அச்செய்தியை என்னிடம் கூறுகிறாயே!” என்று தலைவி தோழியைக் கடிந்துகொள்கிறாள்.
செப்பினஞ் செலினே செலவரி தாகுமென்
றத்த வோமை அங்கவட் டிருந்த
இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி
சுரஞ்செல் மாக்கட் குயவுத்துணை யாகும்
கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி
நல்லடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்டனம் ஆர்வலர் பலரே. 

கொண்டு கூட்டு:
செப்பினம் செலின்,  செலவு அரிதாகும் என்று அத்த ஓமை அம்கவட்டு இருந்தஇனம் தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி சுரம்செல் மாக்கட்கு உயவுத்துணை ஆகும்கல்வரை அயலது தொல்வழங்கு சிறுநெறி நல்லடி பொறிப்பத் தாஅய்ச்  சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே. 

அருஞ்சொற்பொருள்: அத்தம் = பாலை நிலம், வழி; ஓமை = ஒருவகை மரம்; கவடு = கிளை; இனம் = துணை; இனம் தீர் = இனத்தைவிட்டு நீங்கிய; புலம்பு = தனிமை; தெள்விளி = தெளிந்த ஓசை; சுரம் = பாலை நிலம்; உயவுத்துணை = பேச்சுத்துணை; வரை = மலை; தொல்வழங்கு சிறுநெறி = பழைமையான சிறிய (ஒற்றையடிப்) பாதை; பொறிப்ப = காலடிச் சுவடு பட; தாஅய்ச் செல்லுதல் = விரைந்து செல்லுதல்; ஆர்வலர்அன்புடையவர்.


உரை: நாம் செல்லுவதைத் தலைவியிடம் சொல்லிச் செல்வேமாயின், செல்லுதல் அரிதாகும் என்று கூறி, பாலைநிலத்திலுள்ள ஓமைமரத்தின்,  அழகிய கிளையில் இருந்த, இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்தினது, தனிமைத் துயரை வெளிப்படுத்தும் தெளிந்த ஓசை, பாலைநிலத்தின் அரிய வழியிற்செல்லும் மனிதர்களுக்கு,  பேச்சுத்துணையாக அமைந்த இடமாகிய,  கற்களையுடைய மலையின் பக்கத்தில் பழமையான சிறிய ஒற்றையடிப் பாதையில்  தம் நல்ல அடிகள் சுவடு செய்ய, தலைவர் விரைந்து  சென்றார் என்று கேள்விப்பட்ட  நம்முடைய அன்பர்கள் பலராவர்.