Showing posts with label 233. தலைவன் கூற்று. Show all posts
Showing posts with label 233. தலைவன் கூற்று. Show all posts

Sunday, August 14, 2016

233. தலைவன் கூற்று

233.  தலைவன் கூற்று

பாடியவர்: பேயனார். முல்லைத் திணை வளங்களை சிறப்பாகப் பாடுவதில் இவர் மிக்க ஆற்றல் உடையவர். இவர் ஐங்குறுநூற்றின் ஐந்தாவது நூறாகிய முல்லைத்திணைப் பாடல்களையும் (401 – 500), குறுந்தொகையில் மூன்று பாடல்களையும் (233, 359, 400), அகநானூற்றில் ஒரு பாடலும் (234) இயற்றியுள்ளார்.
திணை: முல்லை.
கூற்று: பட்டபின்றை (பட்ட பின்றை - களவு வெளிப்பட்ட பிறகு) வரையாது சென்று வினைமுற்றி மீளுந் தலைமகன்,தேர்ப்பாகற்குச்             சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுடைய களவொழுக்கம் அனைவருக்கும் தெரிய வந்ததுதலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தான், அதனால், திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகச் சென்றான். அவன் தேடிய பொருளோடு திரும்பிவரும் பொழுது, தன் தலைவியின் ஊரை மகிழ்ச்சியோடு தேர்ப்பாகனுக்குச் சுட்டிக்காட்டுகிறான்.

கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி
கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர்
பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன
காரெதிர் புறவி னதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோ ளறியாச் சொன்றி
நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே! 

கொண்டு கூட்டு: உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோள் அறியாச் சொன்றிநிரைகோல் குறுந்தொடி தந்தை ஊர் கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி கொன்றை ஓள் வீ தாஅய்ச் செல்வர் பொன்பெய் பேழை மூய் திறந்தன்ன கார் எதிர் புறவினது.

அருஞ்சொற்பொருள்: கவலை = ஒரு வகைக் கிழங்கு; கெண்டிய = தோண்டிய; ஒள் = ஒளி பொருந்திய ; வீ = பூ; தாஅய் = பரவிய ; மூய் = மூடி ; புறவு = முல்லை நிலம்; மிச்சில் = எஞ்சிய பொருள்; வரைகோள் = இவ்வளவு என்று ஒரு எல்லை கொள்ளுதல்; சொன்றி = சோறு; கோல் = திரண்ட.


உரை: (பாக!) திரண்ட சிறிய வளையல்களை வரிசையாக அணிந்துள்ள என் தலைவியினுடைய தந்தையின் ஊர், உயர்ந்தவர்களுக்கு நீரோடு தானம் செய்து கொடுத்த  பிறகு எஞ்சிய பொருளும், யாவருக்கும் எல்லை இல்லாத அளவுக்குச் சோறும் உடையது.  அந்த ஊர், கவலைக் கிழங்கைத் தோண்டி எடுத்ததால் உண்டான அகன்ற வாயை உடைய சிறிய குழிகளில்,  ஒளி பொருந்திய கொன்றை மலர் நிறைந்து பரவி இருப்பதால்,  செல்வந்தர்கள், பொன்னையிட்டு வைக்கும் பெட்டியின், மூடியைத் திறந்து வைத்தாற் போன்ற தோற்றத்தை உடைய கார்காலத்தை ஏற்றுக் கொண்ட, முல்லை நிலத்தின்கண் உள்ளது.