Showing posts with label 237. தலைவன் கூற்று. Show all posts
Showing posts with label 237. தலைவன் கூற்று. Show all posts

Sunday, August 14, 2016

237. தலைவன் கூற்று

237. தலைவன் கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 32 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பொருள் முற்றி மீள்வான், தேர்ப்பாகனுக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: பொருளுக்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், பொருளோடு திரும்பி வரும்பொழுது, தேர்ப்பாகனை நோக்கி, “நாம் இருக்கும் இடத்திற்கும் தலைவி இருக்கும் இடத்திற்கும் தூரம் அதிகமாக உள்ளது. வழியிலே பல இடையூறுகள் உள்ளன. என் நெஞ்சம் ஏற்கனவே, அவளிடம் விரைந்து சென்றுவிட்டது. அதைப்போல், நீயும் தேரை விரைந்து செலுத்துகஎன்று கூறுகிறான்.


அஞ்சுவ தறியா தமர்துணை தழீஇய
நெஞ்சுதப் பிரிந்தன் றாயினும் எஞ்சிய
கைபிணி நெகிழின்அஃ தெவனோ நன்றும்
சேய வம்ம இருவா மிடையே
மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு
கோட்புலி வழங்குஞ் சோலை
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே. 

கொண்டு கூட்டு: அஞ்சுவது அறியாது அமர்துணை தழீஇய நெஞ்சு நப் பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய கைபிணி நெகிழின்,அஃ தெவனோ? இருவாம் இடையே நன்றும் சேய அம்ம! முயக்கிடை மலைவு, கோள்புலி மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு  வழங்கும் சோலை எனைத்து என்று எண்ணுகோ?

அருஞ்சொற்பொருள்: அமர்விருப்பம்; தழீஇய = தழுவும் பொருட்டு; நப் பிரிந்து = நம்மைப் பிரிந்து; பிணி = இறுக்கம்; சேய = தொலைவில்; அம்மஅசைச்சொல்; இருவாம் = இருவராகிய யாம்; மா = பெரிய; வலன் = வலம் = வலிமை; ஏர்பு = எழுந்து; கோள் புலி = கொல்லும் புலி; முயக்குதல் = தழுவுதல்; மலைவு =தடைகள்.

உரை:  (பாக!), நான் அவள் நிலையை நினைத்து அஞ்சுவதைத் தான் அறியாமல், நான் விரும்பும் தலைவியைத் தழுவும் பொருட்டு, என் நெஞ்சு, என்னைப் பிரிந்து சென்றது. ஆனாலும், என் கைகள் இங்கே எஞ்சி இருக்க, கட்டித் தழுவ முடியாத, என் நெஞ்சு சென்று தழுவியதனால் என்ன பயன்?  எனக்கும்  தலைவிக்கும் இடையில் உள்ள தூரம் மிகவும் அதிகம். நான் தலைவியைத் தழுவுவதற்குத் தடையாக, இடையிலே கரியகடலின் அலையைப் போல் முழங்கி, கொலை செய்யும் புலிகள் ஆரவாரம் செய்து, வலிமையுடன்  எழுந்து, உலவுகின்ற சோலைகளை, எத்தனை என்று எப்படி எண்ணுவேன்?


சிறப்புக் குறிப்பு: தலைவன் தலைவியோடு இன்பமாக இருக்க விரும்புகிறான். அவன் அவள் இருக்கும் இடம் நோக்கித் தேரில் செல்லுகின்ற போழுது, அவன் நெஞ்சம் அவள் இருக்கும் இடத்திற்கு அவளைத் தழுவச் சென்றதாக உணர்கிறான். இன்பம் நுகர வேண்டுமானால், தலைவியைக் கையால் கட்டித் தழுவாமல், நெஞ்சால் தழுவி என்ன பயன் என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறான். அவன் இருக்கும் இடத்திற்கும் தலைவி இருக்கும் இடத்திற்கும் இடைய வெகு தூரம் உள்ளது.  மற்றும், வழியிலே பல இடையூறுகள் பல உள்ளன. ஆகவே, தேர்ப்பாகனிடம், “என் நெஞ்சு தலைவி இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றது போல், நீயும் தேரை விரைவாகச் செலுத்துகஎன்று கூறுகிறான்.