Showing posts with label 27. பாலை - தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 27. பாலை - தலைவி கூற்று. Show all posts

Sunday, May 31, 2015

27. பாலை - தலைவி கூற்று

27. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: வெள்ளிவீதியார். இவர் குறுந்தொகையில் எட்டுப் பாடல்களும் ( 27, 44, 58, 130, 146, 149,169, 386), அகநானூற்றில் இரண்டு பாடல்களும் ( 45, 362), நற்றிணையில் மூன்று பாடல்களும் ( 70, 335, 348) பாடல்களும் இயற்றியுள்ளார். தன் சொந்த வாழ்க்கையில், வெள்ளிவீதியார் தன் தலைவனைவிட்டுப் பிரிந்திருந்தபொழுது தன் நிலையைக் குறித்து வருந்தி இப்பாடலை இயற்றியதாகக் கூறப்படுகிறது. இப்பாடலைப் பாடியவர் கொல்லனழிசி என்று கூறுவாரும் உளர்

பாடலின் பின்னணி: தலைவனின் பிரிவினால் வருந்திய தலைவி பசலை நோயுற்றாள். அந்தப் பசலை நோயால், தன் அழகு தனக்கும் பயனில்லாமல் தன் தலைவனுக்கும் உதவாமல் வீணாகிறது என்று தலைவி தன் தோழியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமைக் கவினே. 

அருஞ்சொற்பொருள்: ஆன் = பசு; தீ = இனிமை; உக்குதல் = வீணாகுதல்; என்னை = என்+ = என் தலைவன்; பசலை = காதலனின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதால் காதலியின் உடலில் தோன்றும் பொன்நிறம்; உணீஇயர் = உண்ண; வேண்டும் = விரும்பும்; திதலை = தேமல்; அல்குல் = இடை (இங்கு, உடலைக் குறிக்கிறது); மாமை = மேனி; கவின் = அழகு.

உரை: நல்ல பசுவின் இனிய பாலானது, அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், தரையில் சிந்தி வீணானது போலதேமல் பொருந்திய என் உடலின் கருமை நிறத்தோடு கூடிய அழகை, எனக்கும் பயனளிக்காமல் என் தலைவனுக்கு இன்பம் பயக்காமல் பசலை நோய் உண்ண விரும்புகிறது.


விளக்கம்: கன்று உண்டபின் பாத்திரத்தை நிரப்பும் பசுவின் பால் போல, தலைவியின் அழகு அவளுக்கும் அவள் தலைவனுக்கும் பயனளிக்கிறது என்று புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது.