Showing posts with label 280. தலைவன் கூற்று. Show all posts
Showing posts with label 280. தலைவன் கூற்று. Show all posts

Sunday, December 4, 2016

280. தலைவன் கூற்று

280. தலைவன் கூற்று

பாடியவர்: நக்கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78 – இல் காணலாம்.
திணை:
குறிஞ்சி.
கூற்று : கழற்றெதிர்மறை. (கழறுதல் = இடித்துரைத்தல்; எதிர்மறை = மறுத்தல்)
கூற்று விளக்கம்: தலைவன் தலைவிமீது மிகுந்த காதலுடையவன். ஆனால், அவளோடு கூடி மகிழும்  வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால், அவன் மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறான். அவனுடைய நண்பர்கள் அவனை இடித்துரைத்து அறிவுரை கூறுகிறார்கள். அவர்களுக்குத் தலைவனின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது

கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்
நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சி லோதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே. 

கொண்டு கூட்டு: கேளிர்! வாழியோ கேளிர்! நாளும் என் நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதிப் பெருந்தோள் குறுமகள் சிறுமெல் ஆகம் ஒருநாள் புணரப் புணரின் யான்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென். 

அருஞ்சொற்பொருள்: கேளிர் = நண்பர்கள்; நாளும் = எப்பொழுதும்; ஓதி = கூந்தல்; அஞ்சிலோதி = அம்+சில்+ஓதி = அழகிய சிலவாகிய கூந்தல்; குறுமகள் = இளம்பெண் (தலைவி); ஆகம் = உடல், மார்பு.

உரை: நண்பர்களே! நீவிர் வாழ்க! நண்பர்களே!, எப்பொழுதும் என்னுடைய நெஞ்சத்தைத் தன்னிடத்திலே ஈர்த்துக் கொண்ட, அழகிய சிலவாகிய கூந்தலையும், பெரிய தோளையும் உடைய இளைய தலைவியினது, சிறிய மெல்லிய மேனியை,  ஒரு நாள் தழுவும் வாய்ப்புக் கிடைத்தால், அதன் பிறகு  நான் அரை நாளும் வாழ்வதை விரும்ப மாட்டேன்.