Showing posts with label 295. தோழி கூற்று. Show all posts
Showing posts with label 295. தோழி கூற்று. Show all posts

Sunday, January 22, 2017

295. தோழி கூற்று

295.  தோழி கூற்று

பாடியவர்: தூங்கலோரியார்.
திணை: மருதம்.
கூற்று : வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பரத்தையோடு சிலகாலம் இருந்தான். இப்பொழுது, அவன் தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். தான் தன் மனைவியோடு சேர்ந்து வாழ்வதற்குத் தலைவியின் தோழியின் உதவியைத் தலைவன் நாடுகின்றான். அவளைத் தனக்காகத் தலைவியிடம் தூது போகுமாறு வேண்டுகிறான். “இப்பொழுது, பரத்தையரோடு இருந்ததற்கான அடையாளங்களோடு நீ வந்திருக்கிறாய். ஒருகாலத்தில் நீ வறுமையில் வாடினாய். உனக்குத் தலைவி மனைவியாக வந்த பிறகுதான் வளமான வாழ்க்கை கிடைத்தது.” என்று இவ்வூரில் உள்ளவர்கள் பேசிக்கொள்கிறார்கள் என்று தோழி கூறுகிறாள்

உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும் 
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே யிஃதோ
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே. 

கொண்டு கூட்டு: உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி நீ விழவொடு வருதி.  இவ்வூர், இஃதோ ஓர் ஆன் வல்சிச் சீர்இல்  வாழ்க்கை பெருநலக் குறுமகள் வந்தெனஇனி விழவு ஆயிற்று என்னும்.
அருஞ்சொற்பொருள்: துவன்றி = நெருங்கி; ஆன் = பசு; வல்சி = உணவு; சீர் = சிறப்பு; இனி = இப்பொழுது; விழவாயிற்று = விழாவைப் போலச் சிறப்புடையதாயிற்று.

உரை: தழைகளை உடுத்திக் கொண்டும், அவற்றை மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்டும், குழை முதலிய அணிகலன்களாகத் தழைகளை அணிந்தும், கூந்தலில் அவற்றைச் செருகியும், தழையலங்காரத்தால் பொலிவு பெற்ற பரத்தையர் கூட்டத்தோடு நெருங்கி இருந்து, நீ விழாவிற்குரிய அடையாளங்களோடு வருகின்றாய். இந்த ஊரில் உள்ளவர்கள், ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக்கொண்டு உண்ணும் உணவையுடைய, செல்வச் சிறப்பில்லாத வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த உனக்குமிகுந்த நன்மையுடைய இளமை பொருந்திய தலைவி மனைவியாக வந்ததால், இப்பொழுது விழாக்கோலம் பூண்டது போன்ற  வாழ்க்கை உண்டாயிற்று என்று கூறுகின்றனர்.