3. குறிஞ்சி - தலைவி கூற்று
பாடியவர்: தேவகுலத்தார். குறுந்தொகையில் இவர் இயற்றியதாக இந்த ஒரு
பாடல் மட்டுமே உள்ளது.
பாடலின் பின்னணி: தலைவன்மீது தலைவி மிகுந்த காதல் உடையவளாகவும் அன்புடையவளாகவும் இருக்கிறாள்.
அவர்களிடையே உள்ள நட்பை அவள் மிகவும் அருமையானதாகக் கருதுகிறாள்.
ஒருநாள் தலைவன் தலைவியைக் காண வருகிறான். தலைவன்
காதில் கேட்கும்படியாக,
அவர்களுடைய நட்பின் அருமையைத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
அருஞ்சொற்பொருள்: உயர்ந்தன்று = உயர்ந்தது; நீர்
= கடல்; ஆர் = அருமை;
அளவின்று = அளவினை உடையது; சாரல் = மலைப் பக்கம்; கருங்கோல்
= கரிய கொம்பு; இழைத்தல் = செய்தல்; நாடன் = குறிஞ்சி நிலத்
தலைவன்.
உரை: மலைப்
பக்கத்தில் உள்ள, கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின்
மலர்களைக் கொண்டு, பெருமளவில் வண்டுகள் தேனைச் செய்தற்கு
ஏற்ற இடமாகிய நாட்டை உடைய தலைவனோடு எனக்குடைய நட்பு, பூமியைக்
காட்டிலும் பெரியது; ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது;
கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது.
விளக்கம்: இப்பாடலில் குறிஞ்சி நிலத்தின் கருப்பொருளாகிய குறிஞ்சிப் பூவும், வண்டும், உரிப்பொருளாகிய புணர்ச்சியும் (ஆண் பெண் சேர்க்கையும்) குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் குறிஞ்சித் திணையைச்
சார்ந்ததாகக் கருதப்படுகிறது.