Showing posts with label 308. தோழி கூற்று. Show all posts
Showing posts with label 308. தோழி கூற்று. Show all posts

Sunday, February 19, 2017

308. தோழி கூற்று

308. தோழி கூற்று
பாடியவர்: பெருந்தோட் குறுஞ்சாத்தனார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடைக் கிழத்தியை வன்சொற் சொல்லி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறாள். “நீங்கள் இருவரும் இல்லற வாழ்வில் இன்பமாக இருப்பதற்காகத்தானே தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். பொருள் தேடுவதில் வெற்றிபெற்றவுடன் தலைவன் விரைவில் வந்து உன்னைத் திருமணம் செய்து கொள்வான். நீங்கள் இருவரும் கூடி மகிழ்ந்து இன்பமாக இருக்கப் போகிறீர்கள். நீ இவ்வாறு பொறுமை இழந்து வருந்துவது சரியன்று. ” என்று தோழி தலைவியை இடித்துரைக்கிறாள்.

சோலை வாழைச் சுரிநுகும் பினைய
அணங்குடை அருந்தலை நீவலின் மதனழிந்து
மயங்குதுயர் உற்ற மையல் வேழம்
உயங்குயிர் மடப்பிடி யுலைபுறந் தைவர
ஆமிழி சிலம்பின் அரிதுகண் படுக்கும்
மாமலை நாடன் கேண்மை
காமந் தருவதோர் கைதாழ்ந் தன்றே. 

கொண்டு கூட்டு: சோலை வாழைச் சுரி நுகும்பு இனைய அணங்குடை அருந்தலை நீவலின், மதன் அழிந்து மயங்கு துயர் உற்ற மையல் வேழம்உயங்கு உயிர் மடப்பிடி உலைபுறம் தைவர, ஆம்இழி சிலம்பின் அரிதுகண் படுக்கும் மாமலை நாடன் கேண்மைகாமம் தருவதுஓர் கை தாழ்ந்தன்று. 

அருஞ்சொற்பொருள்: சுரி = சுருண்ட; நுகும்பு =குருத்து; இனைய = வருந்தும்படி; அணங்கு = தெய்வம்; நீவல் = தடவுதல்; மதன் = வலிமை; மையல் = மயக்கம்; வேழம் = யானை (இங்கு ஆண்யானையைக் குறிக்கிறது); உயங்குதல் = வருந்துதல்; உயிர் = மூச்சுக் காற்று; மடப்பிடி = இளம் பெண்யானை; உலைதல் = வருந்துதல்; தைவர = தடவ; ஆம் = அருவி நீர்; சிலம்பு = மலைப் பக்கம்; கேண்மை = நட்பு; காமம் = விருப்பம்; கை = தன் முயற்சி (செயல்); தாழ்ந்தன்று = அதில் ஈடுபட்டது.

உரை:  சோலையில் உள்ள வாழையின் சுருண்ட குருத்து, தெய்வம் உறைவதாகக் கருதப்படும்  யானையின் (ஆண்யானையின்) பெரிய தலையைத் தடவியதால்யானை தன் வலிமையை இழந்து கலக்கமுற்று, துன்பத்தோடு கூடிய மயக்கத்தை அடைந்தது. அந்த யானையின்பால் அன்புள்ள, வருந்தி மூச்சுவிடும் இளம் பெண்யானை, அந்த யானையின்  முதுகைத் தடவிக் கொடுத்தது. அருவியிலிருந்து நீர் வழிகின்ற மலைப்பக்கத்தில், பெண்யானை தடவிக் கொடுக்க, ஆண்யானை அருமையாக தூங்குகிறதுஅத்தகைய மலைநாட்டையுடைய தலைவனது நட்பு, நாம் விரும்புபவற்றைத் தரும் செயலில் ஈடுபட்டுள்ளது.

சிறப்புக் குறிப்பு: யானையின் மத்தகத்தில் தெய்வம் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை சங்க  காலத்தில் நிலவியதாகத் தெரிகிறது. மற்றும், யானையின் தலையில் வாழைக்குருத்து பட்டால் யானை தன் வலிமையை இழக்கும் என்றும் கருதப்பட்டது.


பெண்யானை தடவிக் கொடுக்க, வலிமை இழந்த ஆண்யானை வருத்தம் தணிந்து அருமையாகத் தூங்குகிறதுஎன்றது அக்காட்சியைக் காணும் தலைவன் தானும்  தலைவியால் தழுவப்பட்டு, இன்பமாக உறங்க வேண்டுமென்று விரும்புவான் என்பதைக் குறிக்கிறது. இது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்