Showing posts with label 309. தோழி கூற்று. Show all posts
Showing posts with label 309. தோழி கூற்று. Show all posts

Sunday, February 19, 2017

309. தோழி கூற்று

309. தோழி கூற்று

பாடியவர்: உறையூர்ச் சல்லியன் குமாரனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று : பரத்தையிற் பிரிந்துவந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தன் மனைவியைவிட்டுப் பிரிந்து சென்று, பரத்தையரோடு  சிலகாலம் இருந்தான். இப்பொழுது, மீண்டும் தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். தலைவன், மனைவியின் தோழியைச் சந்தித்து, அவளைத் தனக்காகத் தன் மனைவியிடம் பரிந்து பேசி, அவள் ஊடலைத் தணித்துத் தன்னை ஏற்றுக் கொள்ளச் செய்யுமாறு வேண்டுகிறான். தலைவனின் உதவி இல்லாமல் அவன் மனைவியால் தனித்து வாழ முடியாது என்பதைத் தோழி நன்கு உணர்ந்தவளாதலால், அவனுக்காகப் பரிந்து பேச விரும்பாவிட்டாலும், அவன் வேண்டுகோளுக்கு இணங்குகிறாள்.

கைவினை மாக்கடம் செய்வினை முடிமார்
சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட
நீடின வரம்பின் வாடிய விடினும்
கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது
பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும்
நின்னூர் நெய்த லனையேம் பெரும
நீயெமக், கின்னா தனபல செய்யினும்
நின்னின் றமைதல் வல்லா மாறே. 

கொண்டு கூட்டு: பெரும! நீ எமக்கு, இன்னாதன பல செய்யினும்  நின்னின்று அமைதல் வல்லாமாறுகை வினை மாக்கள் தம் செய்வினை முடிமார்சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்படநீடின வரம்பின் வாடிய விடினும், ”கொடியர்; நிலம்பெயர்ந்து உறைவேம்.” என்னாதுபெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் நின் ஊர் நெய்தல் அனையேம்.

அருஞ்சொற்பொருள்: கைவினைகையால் செய்யும் தொழில் (இங்கு, களையெடுத்தலைக் குறிக்கிறது); சுரும்பு = வண்டு; வாசம் = மணம்; வரம்பு = வரப்பு; கடிந்த = நீக்கிய (களைந்த); செறு = வயல்; பெரும = தலைவ; வல்லாமாறு = வல்லமை இல்லாததால்.

உரை: தலைவ! நீ எங்களுக்குப் பல கொடிய செயல்களைச் செய்தாலும், நீ இல்லாமல் எங்களால் வாழ இயலாதுகளை எடுக்கும் தொழிலைச் செய்யும் உழவர்கள், தாம் செய்யும் தொழிலை முடிப்பதற்காக, வண்டுகள் உண்ணுமாறு, மலர்ந்த நெய்தல் மலர்களின் மணம் தரையிலே படும்படி,  நீண்ட வரப்பிலே அந்த  மலர்கள் வாடும்படி விட்டாலும்,  இவர் கொடியர்; இந்நிலத்தை நீங்கிச் சென்று, நாம் வேறிடத்தில் வாழ்வோம்.” என்று எண்ணாமல்,  மீண்டும் தம்மைக் களைந்த வயலிலேயே,  உன் ஊரில் உள்ள நெய்தல் மலர்கள் மலர்கின்றன. நாங்களும் அந்த மலர்களை போன்றவர்கள்தான்.

சிறப்புக் குறிப்பு: நெய்தற் கிழங்கு வயலில் இருந்ததால், அந்த வயலில் மீண்டும் நெய்தல் மலர் பூத்தது. ”தன்னைப் பிடுங்கி எறிந்த உழவரின் வயலில் நெய்தல் மலர் மீண்டும் பூத்ததைப் போல, நீ எமக்கு இன்னா செய்தாலும், நீ இல்லாமல் எம்மால் வாழ இயலாததால், நாங்கள் உன்னிடம்  தொடர்ந்து அன்புடையவர்களாக இருக்கிறோம்.” என்று தோழி கூறுகிறாள்.

 சங்க கால சமுதாயத்தில், பெண்கள் தனித்தியங்கும்  தன்மை இல்லாமல், ஆண்களை நம்பியே வாழ்ந்தார்கள் என்பது இப்பாடலிலிருந்து நன்கு தெரிகிறது