Showing posts with label 327. தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 327. தலைவி கூற்று. Show all posts

Sunday, March 19, 2017

327. தலைவி கூற்று

327. தலைவி கூற்று
பாடியவர்: அம்மூவனார்.
திணை: . குறிஞ்சி.
கூற்று : கிழவன் கேட்கும் அண்மையனாக அவன் மலையினின்று வரும் ற்றிற்கு  உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைக் காண்பதற்காகத் தலைவியின் வீட்டுக்கு வந்து, வேலிக்கு வெளியே நிற்கிறான். அவன் வரவை அறிந்த தலைவி, அவன் காதுகளில் கேட்குமாறு, ஆற்றை நோக்கித் தலைவன் தனக்குச் செய்த கொடுமையைப் பற்றிக் கூறுகிறாள்.

நல்கின் வாழும் நல்கூர்ந் தோர்வயின்
நயனில ராகுதல் நன்றென உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும் நன்றும்
நின்னிலை கொடிதால் தீய கலுழி
நம்மனை மடமகள் இன்ன மென்மைச்
சாயலள் அளியள் என்னாய்
வாழைதந் தனையாற் சிலம்புபுல் லெனவே. 

கொண்டு கூட்டு: தீய கலுழிநம் மனை மடமகள், இன்ன மென்மைச்  சாயலள்; அளியள்.” என்னாய்சிலம்பு புல்லென வாழை தந்தனை. ”நல்கின் வாழும் நல்கூர்ந்தோர் வயின் நயன்இலர் ஆகுதல் நன்றுஎன உணர்ந்தகுன்ற நாடன் தன்னினும் நின்னிலை நன்றும் கொடிது.

அருஞ்சொற்பொருள்: நல்குதல் = அருள் செய்தல்; நல்கூர்ந்தார் =  வறுமையுற்றோர் (இங்கு, தலைவனின் அன்பைப் பெறாத வறியவர்); வயின் = இடம்; நயன் = அன்பு; நன்றும் = மிகவும்; கலுழ் = நீர்ப்பெருக்கம் (இங்கு காட்டாற்றில் வரும் வெள்ளத்தைக் குறிக்கிறது); மடமகள் = இளம்பெண்; அளியள் = இரங்கத் தக்கவள்; சிலம்பு = மலைப் பக்கம்; புல் = இழிவு; புல்லென = புல் + என  = பாழாகும்படி (அழகு இழக்கும்படி).

உரை: தீமை இழைக்கின்ற வெள்ளப் பெருக்கோடு வருகின்ற காட்டாறே!   நாம் செல்லும் வழியின் அருகில் உள்ள வீட்டில் உள்ள இளம்பெண், இவ்வாழையைப் போன்ற  மெல்லிய சாயலை உடையவள், இரங்கத் தக்கவள் என்று கருதாமல், மலைப்பக்கம் அழகு இழக்கும்படி  அங்கே வளர்ந்த வாழை மரத்தை நீ பெயர்த்துக் கொண்டுவந்தாய். அதனால், தாம் அருள் செய்வதால் வாழ்கின்ற வறியோரிடம்அன்பு இல்லாதவராக இருப்பது நல்லது என்று உணர்ந்த குன்ற நாடனது (தலைவனது)  நிலையைக் காட்டிலும்,  உனது இயல்பு மிகவும் கொடியது.