Showing posts with label 365. தோழி கூற்று. Show all posts
Showing posts with label 365. தோழி கூற்று. Show all posts

Tuesday, July 11, 2017

365. தோழி கூற்று

365. தோழி கூற்று
பாடியவர்: மதுரை நல்வெள்ளியார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : யான் வரையுந்துணையும் ஆற்றவல்லளோ?” என்று வினாய கிழவற்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்காகத் தலைவன் பொருள் தேடுவதற்குச் செல்ல விரும்புகிறான். நான் பொருளோடு திரும்பிவந்து தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும்வரை அவளால் என் பிரிவைப் பொறுத்துக்கொண்டு இருக்க முடியுமா?” என்று கேட்ட தலைவனை நோக்கித் தோழி, “அவளால் அதுவரை பொறுத்துக்கொண்டு இருக்க முடியாதுஎன்றாள்.

கோடீர் இலங்குவளை நெகிழ நாளும்
பாடில கலிழ்ந்து பனியா னாவே
துன்னரும் நெடுவரைத் ததும்பிய அருவி
தன்ணென் முரசின் இமிழிசை காட்டும்
மருங்கிற் கொண்ட பலவிற்
பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே. 

கொண்டு கூட்டு: துன்னரும் நெடுவரைத் ததும்பிய அருவிதன்ணென் முரசின் இமிழிசை காட்டும்மருங்கிற் கொண்ட பலவிற் பெருங்கல் நாட ! நீ நயந்தோள் கண், கோடுஈர் இலங்குவளை நெகிழ,  நாளும் பாடுஇல கலிழ்ந்து, பனி ஆனா.

அருஞ்சொற்பொருள்: கோடு = சங்கு ; ஈர்தல் = அறுத்தல்; இலங்குதல் = விளங்குதல்; பாடுஇல= கண்படுதல் இல்லாமல் ( உறங்காமல்); aஅனா = நீங்கா; கலிழ்தல் = அழுதல்; துன்னரும் = நெருங்குதற்கரிய; வரை = மலை; இமிழ்தல் = ஒலித்தல்; மருங்கு = பக்கம்; நாடன் = குறிஞ்சி நிலத்தலைவன்; நயந்தோள் = விரும்பப்பட்டவள்.


உரை: நெருங்குதற்கரிய நெடிய மலையிலிருந்து ததும்பி  வழியும் அருவியானது, தண் என்ற ஒலியையுடைய முரசைப்போல,  ஒலிக்கின்ற இசையை வெளிப்படுத்தும் பக்கத்தில்,  பலாமரங்கள் உள்ள, பெரிய மலையையுடைய குறிஞ்சி நிலத்தலைவனே! உன்னால் விரும்பப்பட்ட தலைவியின் கண்கள், சங்குகளை அறுத்துச் செய்த, விளங்குகின்ற வளையல்கள் நெகிழ,  நாள்தோறும் உறக்கம் இல்லாதனவாகி, அழுவதால், கண்ணீர்த் துளிகள் நீங்காமல் இருக்கும்.