Showing posts with label 367. தோழி கூற்று. Show all posts
Showing posts with label 367. தோழி கூற்று. Show all posts

Tuesday, July 11, 2017

367. தோழி கூற்று

367. தோழி கூற்று
பாடியவர்: மதுரை மருதனிள நாகனார்.
திணை: மருதம்.
கூற்று -1: வரைவுணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராமை உணர்த்தியது. (கழி உவகைமிகுந்த மகிழ்ச்சி; மீதூராமைமிகவும் அதிகமாகதபடி)
கூற்று -2: வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி, ஆற்றும் வகையால் ஆற்றுவித்தது.
கூற்று விளக்கம் - 1: தலைவன் திருமணம் செய்துகொள்ளப் போகிறான் என்ற செய்தியைத் தலைவிக்கு உணர்த்தும் தோழி, தலைவியின் மகிழ்ச்சி மிகவும் அதிகாமல் இருக்கும் பொருட்டு, “தலைவர் அன்பு காட்டாவிட்டாலும்  அவர் மலையைக் கண்டு ஆற்றி இருப்பாயாகஎன்று கூறுகிறாள்.
கூற்று விளக்கம் – 2: தலைவன் திருமணத்திற்குக் காலம் தாழ்த்துவதால், வருந்திய தலைவியை  ஆற்றுவிப்பதற்காக, “தலைவர் அன்பு காட்டாவிட்டாலும்  அவர் மலையைக் கண்டு ஆற்றி இருப்பாயாகஎன்று தோழி கூறியது.

கொடியோர் நல்கா ராயினும் யாழநின்
தொடிவிளங் கிறைய தோள்கவின் பெறீஇயர்
உவக்காண் தோழி அவ்வந் திசினே
தொய்யல் மாமழை தொடங்கலின் அவர்நாட்டுப்
பூச லாயம் புகன்றிழி அருவியின்
மண்ணுறு மணியின் தோன்றும்
தண்ணறுந் துறுகல் ஓங்கிய மலையே. 

கொண்டு கூட்டு: தோழி! தொய்யல் மாமழை தொடங்கலின் அவர்நாட்டுப்  பூசல் ஆயம் புகன்று இழி அருவியின் மண்ணுறு மணியின் தோன்றும்தண் நறும்  துறுகல் ஓங்கிய மலை கொடியோர் நல்காராயினும் நின் தொடிவிளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்அவ்வந்திசின்உவக்காண்!

அருஞ்சொற்பொருள்: நல்குதல் = அன்போடு இருத்தல் ; யாழமுன்னிலை அசைச்சொல்; இறை = முன் கை, மணிக்கட்டு; கவின் = அழகு; உவக்காண் = அதோ பார்; அவ் வந்திசின் = அங்கே அருக; தொய்வு = நெகிழ்ச்சி; தொய்யல் மாமழை = நிலத்தை நன்றாக நனைக்கும் பெரிய மழை; பூசல் = ஆரவாரம்; ஆயம் = மகளிர் கூட்டம்; புகன்று = விரும்பி; மண்ணுதல் = கழுவுதல்; துறுகல் = பாறை (குண்டுக்கல்).

உரை: தோழி! நிலத்தை நன்றாக நனைக்கும் பெரிய மழை, பெய்யத் தொடங்கிவிட்டதுஅத்தலைவருடைய நாட்டிலுள்ள, ஆரவாரத்தையுடைய மகளிர் கூட்டம், விரும்பி நீராடுவதற்குப் புகுகின்ற அருவியினால் கழுவப்பட்ட நீல மணியைப் போலத் தோன்றுகின்ற, குளிர்ந்த, மணமுள்ள குண்டுக்கற்கள் பொருந்திய  உயர்ந்த மலையை, கொடுமையையுடைய தலைவர் உன்னிடம் அன்பு காட்டாவிட்டலும், வளையல்கள் விளங்கும் முன்கைகளையுடைய உன்தோள்கள் அழகு பெறும்வண்ணம், அங்கே வந்து  பார்ப்பாயாக!


சிறப்புக் குறிப்பு: திருமணத்தற்குக் காலம் நீட்டிப்பதால், அவர் அன்பு காட்டாவிட்டாலும் அவரது மலையைப் பார்த்து ஆற்றுவாயாகஎன்று தோழி கூறுவது பாடலின் கருத்துக்கு ஏற்றதாக உள்ளது. அதாவது, இரண்டாவது கூற்று, பாடலுக்குப் பொருத்தமானதாக உள்ளது