Showing posts with label 392. தோழி கூற்று. Show all posts
Showing posts with label 392. தோழி கூற்று. Show all posts

Sunday, August 20, 2017

392. தோழி கூற்று

392. தோழி கூற்று

பாடியவர்: தும்பிசேர் கீரனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத்  தொடர்ந்து வந்தார்கள். தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்வதாகத்  தலைவன் உறுதி கூறிய பிறகும் அதற்கான முயற்சிகள் எவற்றையும் அவன் மேற்கொள்ளவில்லை. ஒருநாள், தலைவியைக் காண்பதற்காகத் தலைவன் வந்து, தலைவியின்  வீட்டுக்கு வெளியே நிற்கிறான். அவன் காதுகளில் கேட்குமாறு, வண்டை நோக்கித் தோழி, “ தலைவி இன்னும் தன் சுற்றத்தரோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்என்று கூறுகிறாள்.

அம்ம வாழியோ அணிச்சிறைத் தும்பி
நன்மொழிக் கச்ச மில்லை யவர்நாட்
டண்ணல் நெடுவரைச் சேறி யாயிற்
கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினைத்
துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ அரசர்
நிரைசெல னுண்டோல் போலப்
பிரசந் தூங்கு மலைகிழ வோர்க்கே. 

கொண்டு கூட்டு: அம்ம! வாழியோ! அணிச்சிறைத் தும்பிநன்மொழிக்கு அச்சம் இல்லை. அவர் நாட்டு அண்ணல் நெடுவரைச் சேறியாயின்அரசர் நிரைசெலல் நுண் தோல் போலப் பிரசம் தூங்கும் மலைகிழவோர்க்குகடமை மிடைந்த துடவை அம்  சிறுதினைத்
துளர் எறி நுண்துகள் களைஞர் தங்கை தமரின் தீராள் என்மோ!

அருஞ்சொற்பொருள்: அணி = அழகு; சிறை = சிறகு; தும்பி = வண்டு; வரை = மலை; கடமை = ஒருவகை மான்; மிடைதல் = நிறைதல்; துடவை = தோட்டம்; துளர் = களைக்கொட்டு (களை பறிக்கும் கருவி); துகள் = புழுதி; என்மோ = என்று கூறுவாயாக; நிரை = வரிசை; நுண் தோல் = நுண்ணிய தோலால் செய்யப்பட்ட கேடயம்; பிரசம் = தேனடை; தூங்கும் = தொங்கும்.

உரை: அழகிய சிறகுகளையுடைய தும்பியே! நீ வாழ்க! நான் ஒன்று கூறுவேன். கேட்பாயாக! நல்லவற்றைக் கூறுவதற்கு அஞ்ச வேண்டியதில்லை. தலைவருடய நாட்டிலுள்ள, பெருமைக்குரிய உயர்ந்த மலைக்குச் செல்வாயாயின், அரசர்களது படைகள் வரிசையாகக் கொண்டு செல்லும்  நுண்ணிய தோலால் செய்யப்பட்ட கேடயங்களைப் போல, தேனடைகள் தொங்குகின்ற மலையையுடைய தலைவரிடத்தில், கடமை மான்கள் நிறைந்த, தோட்டத்திலுள்ள அழகிய சிறுதினையில்,  களை எடுப்பதற்காகக் களைக்கொட்டை வீசி எறிவதால் உண்டாகிய நுண்ணிய புழுபடிந்திருக்கும் களையெடுப்பவரின் தங்கையாகிய தலைவி, தன் சுற்றத்தாரைவிட்டு நீங்காமல் இருக்கிறாள் என்று கூறுவாயாக.

சிறப்புக் குறிப்பு: தமரின் தீராள்என்றது, தலைவனைத் திருமணம் செய்துகொண்டு, அவனோடு இல்லறம் நடத்த விரும்பும்  தலைவி இன்னும் தன் சுற்றத்தாரோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்பதைக் குறிக்கிறது. ”தமரின் தீராள்என்பதற்கு, தலைவியின் சுற்றத்தார் அவளைக் காவலில் வைத்தலாகிய கொடுமை செய்தாலும் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள் என்றும் பொருள் கொள்ள