Showing posts with label 62. குறிஞ்சி - தலைவன் கூற்று. Show all posts
Showing posts with label 62. குறிஞ்சி - தலைவன் கூற்று. Show all posts

Monday, August 3, 2015

62. குறிஞ்சி - தலைவன் கூற்று

62. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 56-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு ஆண்மகன் தற்செயலாக ஒரு பெண்ணைச் சந்திக்கிறான்.  முதல் சந்திப்பிலேயே அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவளுடைய அழகும், அவளிடத்திலிருந்த நறுமணமும் அவள் தளிர்போன்ற மேனியும் அவனை மிகவும் கவர்ந்தது. முதல்நாள் அவளைச் சந்தித்த இடத்திற்கே  போனால் அவளை மீண்டும் சந்த்திக்கும் வாய்ப்பு இருக்கும் என்று எண்ணுகிறான். அதே இடத்திற்கே மீண்டும் செல்கிறான். அவள் வந்தால் அவளைத் தழுவ வேண்டும் என்று மிகுந்த ஆவலாக இருக்கிறான். அவளைத் தழுவுவதால் அவன் அடையப்போகும் இன்பத்தைக் கற்பனை செய்கிறான்.

கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. 

அருஞ்சொற்பொருள்: கோடல் = வெண்காந்தள் மலர்; எதிர்தல் = தோன்றுதல்; முகை = மலரும் பருவத்தரும்பு; பசு = பசுமையான; வீ = பூ; நாறும் = மணக்கும்; குவளை = குவளை மலர்; இடையிடுபு = இடையில் இட்டு; விரைஇ = கலந்து; ஐது = அழகு; தொடை = தொடுத்தல்; மாண்ட = அழகிய; கோதை = மாலை; நறிய = மணமுள்ள; முறி = தளிர்; வாய் = சிறப்பு; முயங்குதல் = தழுவுதல்.

உரை: நெஞ்சே, காந்தள் மலரையும்,  அரும்பிலிருந்து தோன்றிய நல்ல  முல்லைப்பூக்களையும், மணமுள்ள இதழ்களையுடைய குவளைமலர்களையும் இடையிடையே கலந்து, அழகாகத் தொடுக்கப்பட்ட அழகிய மாலையைப்போல நறுமணத்தை உடைய தலைவின் உடல், தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது.  அது தழுவுதற்கும் இனியது.


விளக்கம்: தான் விரும்பும் பெண்ணின் முகம் ஒளிபொருந்திய காந்தள் மலரைப் போலவும், அவள் கண்கள் குவளை மலர்களைப் போலவும், அவள் பற்கள் முல்லை மலர்களைப் போலவும் அவள் மேனி மாந்தளிரைப்போலவும் இருந்ததைத் தலைவன் எண்ணிப் பார்க்கிறான்அவன் காதலி, கண்ணுக்கு இனியவளாகவும், நறுமணமுள்ளவளாகவும் இருந்தது மட்டுமல்லாமல் தழுவுவதற்கும் இனிமையானவளாக இருப்பாள் என்று தலைவன் எண்ணிப்பார்த்து மகிழ்ச்சி அடைகிறான்