Showing posts with label 71. பாலை - தலைவன் கூற்று. Show all posts
Showing posts with label 71. பாலை - தலைவன் கூற்று. Show all posts

Monday, August 17, 2015

71. பாலை - தலைவன் கூற்று

71. பாலை - தலைவன் கூற்று

பாடியவர்: கருவூர் ஓதஞானியார்.  இவர் இயற்றியதாக சங்க இலக்கியத்தில் இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது. குறுந்தொகையின் 227 – ஆம் பாடலை இயற்றியவரின் பெயரும் ஓதஞானி என்பதுதான். ஆனால், அவர் வேறு; இந்தப் பாடலை இயற்றியவர் வேறு என்று கருதப்படுகிறது.

பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலையில் உள்ளான். அவள் அவனுடைய காமநோய்க்கு மருந்தாகவும், பெருஞ்செல்வம் போலவும் இருப்பதால், அவளைவிட்டுப் பிரிய முடியாமல் தவிக்கிறான். ஆகவே, பிரிவதைத் தவிர்க்கலாமா என்று சிந்திக்கிறான். இப்பாடல் அவனுடைய மனக்கலக்கத்தைச் சித்திரிக்கிறது.

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப்
பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற்
கல்கெழு கானவர் நல்குறு மகளே.

அருஞ்சொற்பொருள்: வைப்பு = செல்வம்; அரும்புதல் = தோன்றுதல்; சுணங்கு = தேமல் ; அம் = அழகிய; பகடு = பெருமை; நுணுகிய = சிறிய; நுசுப்பு = இடை; கல் = மலை; கெழு = பொருந்திய; கானவர் = முல்லைநில மக்கள்; குறுமகள் = இளம்பெண் (இங்கு, தலைவியைக் குறிக்கிறது.)
உரை: நெஞ்சே, தேமல்கள் தோன்றிய, அழகிய, பெருமையையுடைய இளைய முலைகளையும், பெரிய தோளையும், சிறிய இடையையும் உடைய இந்தப் பெண், மலைகள் பொருந்திய காடுகளுக்கு உரியவர்  பெற்ற மகள். அவள் என்னுடைய காமநோய்க்கு மருந்து வேண்டுமென்று நான் கருதும் பொழுது எனக்கு மருந்தாகவும், செல்வம் வேண்டுமென்று நான் கருதும் பொழுது எனக்குச் செல்வம் போன்றவளாகவும்  இருக்கிறாள்.

விளக்கம்: .அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலைப் பெருந்தோள் நுணுகிய நுசுப்புஎன்றது  தேமலுடன் கூடிய முலைகளும், பெரிய தோளும், சிறிய இடையும் மகளிர்க்கு அழகாகக் கருதப்பட்டன என்பதைக் குறிக்கிறது. இவளைப் பிரிந்தால் காமநோய்க்கு மருந்தில்லை என்றும், தான் இன்பம் பெறும்பொருட்டுத் தேடிச் செல்ல எண்ணிய செல்வம் போன்றவள் இவளேயாதலின், இவளைப் பிரிந்து செல்லுதலை தவிர்க்கலாமா என்றும் தலைவன் கருதுவதாகத் தோன்றுகிறது,      

பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்நோய்க்குத் தனே மருந்து.                                                         (குறள் – 1102)

என்ற குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.


மகாகவி பாரதியார் கண்ணனைத் தன் காதலியாகக் கற்பனை செய்து பாடிய பாடல் ஒன்றில், ”செல்வமடி நீயெனக்கு, சேமநிதி நானுனக்குஎன்று பாடியிருப்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.