Showing posts with label 79. பாலை – தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 79. பாலை – தலைவி கூற்று. Show all posts

Sunday, August 30, 2015

79. பாலை – தலைவி கூற்று

79. பாலைதலைவி கூற்று

பாடியவர்: குடவாயிற் கீரக்கனார்.  இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: தலைவி தன்னுடன் வரமாட்டாள் என்று தவறாகப் புரிந்துகொண்ட தலைவன் அவளிடம் சொல்லாமலேயே அவளைப் பிரிந்து, பொருள் தேடச் செல்கிறான். தன்னைத் தவறாகப் புரிந்துகொண்ட தலைவன் தான் சென்ற இடத்திலேயே தங்கிவிட்டானோ என்று தலைவி தோழியிடம் கூகூறித் தன் வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள்.
 
கான யானை தோனயந் துண்ட
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவை யேறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லா தகறல் வல்லு வோரே. 

கொண்டுகூட்டு: யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பற்கு, சொல்லாது அகறல் வல்லுவோர்கான யானை தோல் நயந்து உண்ட பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை அலங்கல் உலவை ஏறி, ஒய் எனப் புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்த் தாமே சேர்ந்தனர் கொல்லோ?
அருஞ்சொற்பொருள்: கானம் = காடு; தோல் = மரத்தின் பட்டை; நயந்து = விரும்பி; பொரிதல் = பொருக்குவெடித்தல்; தாள் = அடிப்பக்கம்; ஓமை = ஒரு மரம்; வளி = காற்று; பொருதல் = வீசுதல்; சினை = கிளை; அலங்கல் = அசைதல்; உலவை = மரக்கொம்பு; ஒய்யென = விரைவாக ; புலம்பு = தனிமை ; தரு = தரும் (வெளிப்படுத்தும்) ; குரல = குரலையுடைய; புறவு = புறா; பெடை = பெண்பறவை; அத்தம் = பாலை நிலம்; நண்ணுதல் = பொருந்துதல்;  சீறூர் = சிற்றூர்; சேர்தல் = ஒன்று கூடுதல்; ஒல்லுதல் = உடன்படுதல்; தப்பல் = தவறு புரிதல்; அகலல் = நீங்கல்; வல்லுவோர் = வல்லவர் .
உரை: தோழி, நாம் அவர் பிரிவுக்கு உடன்பட மாட்டோம் என்று தலைவர் தவறாக எண்ணியதால், சொல்லாமற் செல்லுதலில் வல்லமை உடைய அவர் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றார். அவர் சென்ற இடத்தில், காட்டு யானைகள் தோலை விரும்பியுண்ட, பொரிந்த தாளோடு கூடிய ஓமை மரங்களின் காற்று அடிக்கும் கிளைகளுள் அசையும் உலர்ந்த கிளையின் மேல் ஏறி விரைவாகத், தனிமையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தும் குரலோடு, ஆண்புறாக்கள் தங்கள் துணையை அழைக்கும் பாலைநிலத்தில் உள்ள, அழகிய குடிகளையுடைய சிற்றூரில் தங்கினரோ?

விளக்கம்: பாலை நிலத்திலுள்ள ஆண்புறா தன் பெடையை விரும்பி அழைக்கும் இடத்தில் தங்கினாரோ என்றது, ”பறவையினங்களும் தம் துணையை அன்போடு அழைக்கும் அவ்விடத்தில் தங்கினால், அங்குள்ள நிகழ்ச்சிகள் அவர் என்னிடம் வந்து வாழவேண்டிய கடமையை அவருக்கு அறிவுறுத்தும் அல்லவா/”  என்று தலைவி கூறுவதைக் குறிக்கிறதுதலைவர் சொல்லாமல் செல்லுவதுண்டு என்பது  குறுந்தொகையின் 43 – ஆம் பாடலிலும் கூறப்பட்டுள்ளது