Showing posts with label 81. குறிஞ்சி - தோழி கூற்று. Show all posts
Showing posts with label 81. குறிஞ்சி - தோழி கூற்று. Show all posts

Sunday, August 30, 2015

81. குறிஞ்சி - தோழி கூற்று

81. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்.    பேரி என்ற சொல்லுக்கு முரசு என்று பொருள்.  இவரது இயற்பெயர் சாத்தனார்.  இவர், ஒருபாடலில் கடலலையின் ஒலிக்கு முரசின் ஒலியை உவமையாகக் கூறியதால் பேரி சாத்தனார் என்று அழைக்கப்பட்டார்.  தங்கத்தைப் பரிசோதனை செய்பவர்களுக்கு வண்ணக்கன் என்பது தொழிற்பெயர்.  மற்றும், இவர் வட நாட்டிலிருந்து தமிழகத்தில் குடியேறியதால் வடம என்ற அடைமொழியும் இவர் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது.  இவர் புறநானூற்றில் இயற்றிய ஒரு செய்யுள் (198) மட்டுமல்லாமல் அகநானூற்றில் 5 செய்யுட்களையும் (38, 214, 242, 268, 305), நற்றிணையில் 8 செய்யுட்களையும் (25, 37, 67, 104, 199, 299, 323, 378), குறுந்தொகையில் 5 செய்யுட்களையும் (81, 159, 278, 314, 366) இயற்றியுள்ளார். 
பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் பகல் நேரங்களில் சந்தித்தார்கள். தலைவன் தலைவியை இரவில் சந்திக்க விரும்புகிறான். தலைவியிடம் தன் விருப்பத்தை நேரடியாகக் கூறினால் அவள் சம்மதிக்க மட்டாளோ என்று எண்ணித் தலைவன் தோழியிடம் தலைவியைத் தான் இரவு நேரத்தில் சந்திக்க விரும்புவதாகவும், அதற்குத் தோழி உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்கிறான். தலைவனுக்காகப் பரிந்துரை செய்வதைத் தோழி விரும்பவில்லை. ஆனால், தலைவன் மீண்டும் மீண்டும் தோழியை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால், “சரி. உனக்காக நான் தலைவிடம் பேசுகிறேன்என்று தோழி கூறினாள். தலைவனை இரவு நேரத்தில்  சந்திப்பதற்குத் தோழி தலைவியை சம்மதிக்கச் செய்தாள்விருப்பமும் அச்சமும் கூடிய மனநிலையோடு தலைவி தலைவனை ஒருநாள் இரவு சந்தித்தாள். தலைவனும் தலைவியும் உணர்ச்சி வசப்பட்டார்கள். இருவரும் உடலுறவு கொண்டார்கள். தலைவி முதன்முறையாகத் தன் பெண்மை நலத்தை (கற்பை) இழந்தாள்.  உணர்ச்சியினால் உந்தப்பட்டு நடைபெற்ற தவறையும் அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும் எண்ணிப்பார்த்துத் தலைவி தனிமையில் வருத்தத்தோடு வாடுகிறாள். மறுமுறை தலைவியை சந்திக்கத் தலைவன் அதே இடத்திற்கு வருகிறான், அங்கே, தலைவிக்குப் பதிலாகத் தோழி வருகிறாள். ” நீ தலைவிக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்; அவளைக் கைவிட்டுவிடாதே; அவளோடு பழக வேண்டும்என்று கூறி, தானும் தலைவியும் வசிக்கும் ஊரையும் அதற்கான அடையாங்களையும் தோழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.



இவளே, நின்சொற் கொண்ட என்சொல் தேறிப்
பசுநனை ஞாழற் பல்சினை ஒருசிறைப்
புதுநலன் இழந்த புலம்புமார் உடையள்
உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும்
நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக்
கடலும் கானலுந் தோன்றும்
மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே. 

கொண்டுகூட்டு: நின்சொல் கொண்ட என்சொல் தேறிப் பசுநனை ஞாழல் பல்சினை ஒருசிறைபுதுநலன் இழந்த புலம்புமார் உடையள் இவள்உதுக்காண் ! நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக் கடலும் கானலுந் தோன்றும் மடல்தாழ் பெண்ணை எம் சிறுநல் ஊர்.  (நீ)  உள்ளல் வேண்டும்!

அருஞ்சொற்பொருள்: தேறுதல் = நம்புதல்; பசு = பசுமையான; நனை = மொட்டு; ஞாழல் = ஒருவகை மரம்சினை = கிளை; சிறை = இடம்; புதுநலன் = புதிதாக இருந்த பெண்மை நலம் (கற்பு); புலம்பு = தனிமை; மார்அசை நிலை, இடைச்சொல்; உது = அது (சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிலுள்ளதைக் குறிக்கும் ஒரு சுட்டுப் பெயர்); தெய்ய - அசை நிலை ; உள்ளல் = நினைத்தல்; புலவு = புலால் நாற்றம்; திரை = அலை; கானல் = சோலை; பெண்ணை = பனைமரம்.

உரை:, உன் சொல்லை ஏற்றுக்கொண்டு உனக்காக நான் கூறிய சொற்களை நம்பி, பசுமையான அரும்புகளையுடைய ஞாழல் மரத்தின் பல கிளைகள் இருக்கும் ஓரிடத்தில், இதுவரை இழக்காமல் இருந்த தன் பெண்மை நலத்தை இழந்ததால் தலைவி இப்பொழுது தனிமையில் வருந்துகிறாள். அதோ பார் !  நிலவையும் அதனோடு சேர்ந்த இருளையும் போல, புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலையும், அதன் கரையிலுள்ள சோலையையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனைமரங்களையுமுடையது, எமது சிறிய நல்ல ஊர். இனி, நீ எம்மை மறவாது நினைக்க வேண்டும்.

விளக்கம்: தோழியின் சொற்களை நம்பித் தலைவி தன் காதலனை இரவு நேரத்தில் சந்திக்கச் சம்மதித்தாள். கடந்தமுறை சந்தித்த பொழுது அவள் முதன்முறையாகத் தன் பெண்மை நலத்தை இழந்தாள். அதனால், அவள் மனக்கலமுற்றுச் செய்வதறியாமல் தனிமையில் வருத்தத்தோடு இருக்கிறாள். தலைவியின் நிலைக்குத் தான் ஒரு காரணம் என்பதை நினைத்துத் தோழியும் வருந்துகிறாள். ”தலைவன் தொடர்ந்து தலைவியோடு பழக வேண்டும்; அவளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்; திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்ய வேண்டும்.” என்று தோழி எண்ணுகிறாள். ஆகவே, அவளும் தோழியும் வசிக்கும் ஊரையும் அதற்கான அடையாளங்களையும் தலைவனுக்குக் கூறுகிறாள்.


கடல் அலைகள் நுரைகளுடன் கூடி  வெண்மையாக இருப்பதால் கடலுக்கு  நிலவும், சோலை அடர்த்தியாக இருண்டு இருப்பதால் சோலைக்கு இருளும் உவமையாகக் கூறப்பட்டுள்ளனசிறிய ஊராக இருந்தாலும் அவ்வூர் நல்ல ஊர் என்பதைக் குறிப்பதற்காக, “சிறு நல்லூர்என்று தோழி கூறுவதாகத் தோன்றுகிறது