Saturday, January 16, 2016

139. தோழி கூற்று

139. தோழி கூற்று

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 126-இல் காணலாம்.
திணை
: மருதம்.
கூற்று: வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.
கூற்று விளக்கம்: தலைவியை விட்டுப்பிரிந்திருந்த தலைவன் மீண்டும் தலைவியைக் காண வருகிறான். அதைக் கண்ட தோழி, “ நீ இங்கே வந்தால் பரத்தையர் பழிச் சொற்களைக் கூறுவார்கள். அதனால், நீ இங்கு வராதே!” என்று தோழி கூறுகிறாள்.

மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகின மாலை யுற்றெனப்
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு
வாரல் வாழிய ரையவெந் தெருவே. 

கொண்டுகூட்டு:
ஐய! மனையுறை கோழிக் குறுங்காற் பேடை, வேலி வெருகுஇனம் மாலை உற்றென, புகுமிடன் அறியாது தொகுபு உடன் குழீஇய பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாங்கு, இன்னாது இசைக்கும் அம்பலொடு, எம் தெரு வாரல், வாழியர்!
அருஞ்சொற்பொருள்: வெருகு = காட்டுப் பூனை; தொகுபு = கூடிய, குழீஇய = குழுமிய, கூடிய; பைதல் = துன்பம்; கிளை = குஞ்சுகளாகிய இனம்; பயிர்தல் = அழைத்தல்; இசைத்தல் = ஒலித்தல்; அம்பல் = பழிச்சொல்.

உரை: ஐய!, மாலைக் காலத்தில் வேலிக்கு அருகில் உள்ள காட்டுப் பூனையின் கூட்டம் வந்ததால், வீட்டிலிருக்கும் குறுகிய காலையுடைய பெட்டைக்கோழி அதைக் கண்டு அஞ்சிப் பாதுகாப்பாகப் புகுதற்குரிய இடத்தை அறியாமல், சேர்ந்து ஒருங்கே கூடும் பொருட்டுதுன்புறுகின்ற தன் குஞ்சுகளை அழைத்துக் கூவினாற் போல, எமக்குத் துன்பந்ததருமாறு ஊரார் பேசும் பழிச்சொற்களோடு எங்கள் தெருவிற்கு வரவேண்டாம். நீ வாழ்வாயாக!


சிறப்புக் குறிப்பு: தன்னாற் பாதுகாக்கப்பட்ட தன் குஞ்சுகளை காட்டுப்பூனைகள் கவர்ந்துவிடுமோ என்ற அச்சத்தினால் பெட்டைக்கோழிக் கூவியது போல, இதுவரை தம்மோடு  இருந்த தலைவனைத் தலைவி கவர்ந்து தன்பால் இருத்திக் கொள்வாளோ என்ற அச்சத்தினால் பரத்தையர் பழிமொழி கூறுவார்கள் என்று தோழி நினைக்கிறாள். அதனால், தலைவனைத் தலைவி இருக்கும் தெருவிற்குக்கூட வரவேண்டா என்று தோழி கூறுகிறாள்.

No comments:

Post a Comment