Monday, April 18, 2016

181. தலைவி கூற்று


181. தலைவி கூற்று

பாடியவர்: கிள்ளிமங்கலங் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 76 - இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று: தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள்ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்படமொழிந்தது. (இயற்பழித்தல் - தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறுதல்; யற்பட மொழிதல் - தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்துகூறுதல்)
கூற்று விளக்கம்: தலைவனுக்குப் பரத்தையோடு தொடர்பு இருப்பதால், தோழி தலைவனை இகழ்ந்து பேசுகிறாள். அதைக் கேட்ட தலைவி, “நமக்கு  எவ்வளவோ கடமைகள் இருக்கும்பொழுது, தலைவரைப் பற்றிப் இழிவாகப் பேசுவது முறையன்றுஎன்று கூறுகிறாள். .

இதுமற்று எவனோ தோழி துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி
இருமருப்பு எருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம்பயிர் ஆரும் ஊரன்
திருமனைப் பலகடம் பூண்ட
பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே. 

கொண்டு கூட்டு: தோழி! இருமருப்பு எருமை ஈன்ற அணிக் காரான்உழவன் யாத்த குழவியின் அகலாது பாஅல் பைம்பயிர் ஆரும் ஊரன் திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கு,  துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி,  இது மற்று எவனோ?

அருஞ்சொற்பொருள்: மற்றுஅசை; எவன் = ஏன்; அசைதுனி = முதிர்ந்த ஊடல்; இன்னர் = இத்தகையவர்; இன்னா = இனிமையில்லாத; கிளவி = கூற்று; இரு = பெரிய; மருப்பு = கொம்பு; ஈனுதல் = பெறுதல்; அணி = அண்மை; காரான் = எருமை; யாத்த = கட்டிய; குழவி = கன்று; பால் = பக்கம்; ஆர்தல் = உண்ணுதல்; திருமனை = செல்வப் பொருந்திய இல்லம்; கடம் = கடமை; பூணல் = மேற்கொள்ளல்.

உரை: தோழி! பெரிய கொம்புகளையுடைய எருமையினத்தைச் சேர்ந்த பெண்ணெருமை ஒன்றை, அது அண்மையில் ஈன்ற கன்றின் அருகேயே உழவன் கட்டியிருக்கிறான். அப் பெண்ணெருமை, தன் கன்றின் பக்கத்திலிருந்து விலகிச் செல்லாமல், அங்கேயே உள்ள பசிய பயிர்களை மேய்கிறது. அத்தகைய ஊரின் தலைவனது செல்வம் பொருந்திய இல்லத்தில், பல கடமைகளை மேற்கொண்ட பெரிய முதிய பெண்டிராகிய நமக்கு, நாம் அவரோடு ஊடியிருக்கும் இந்த நேரத்தில், அவர் இத்தகையவர் என்று பழிச்சொற்களைப் பேசுவதால் என்ன பயன்?

சிறப்புக் குறிப்பு:   தலைவன் பரத்தையரிடம் சென்றிருந்த காலத்தில் தலைவி வருத்தத்தோடு இருந்தாள். அவளுக்கு ஆதரவாக இருக்க விரும்பிய தோழி, தலைவனின் பரத்தமையைப் பற்றி இழிவாகப் பேசினாள். தன் கணவனைப் பற்றித் தோழி இழிவாகப் பேசியதை விரும்பாத தலைவி, “அவரோடு நாம் ஊடி இருக்கும்பொழுது அவரைப் பற்றிக் குறை கூறுவதனால் ஒரு பயனுமில்லை. நாம் இன்பத்தை மட்டுமே விரும்பும் இளமைப் பருவத்தைக் கடந்து முதுமைப் பருவத்தை அடைந்தவர்கள். நாம் செய்யவேண்டிய பணிகள் பல உள்ளன. ஆகவே, தலைவர் எப்படி இருப்பினும் நாம் நம் கடமைகளைச் செய்வதுதான் முறைஎன்று தோழியிடம் கூறுகிறாள்.


எருமை தன் கன்றின் அருகிலேயே மேய்கிறதுஎன்றது, தலைவன் தலைவியைவிட்டுப் பிரியாமலேயே, அவளோடு தன் வீட்டில் இருந்துகொண்டு அவ்வப்பொழுது பரத்தையரோடு தொடர்பு கொண்டான் என்றும் பொருள்கொள்ளுவதற்கு இடமளிக்கிறது.

No comments:

Post a Comment