Monday, April 18, 2016

182. தலைவன் கூற்று

182. தலைவன் கூற்று

பாடியவர்: மடல் பாடிய மாதங்கீரனார்.  மடலேற்றத்தைப் பற்றிய செய்தியைத் தம் செய்யுளில் குறிப்பிடுவதால் இவர்மடல் பாடிய என்னும் அடைமொழியைப் பெற்றார். இவர் குறுந்தொகையில் ஒரு பாடலும், (182) நற்றிணையில் ஒருபாடலும் (377) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தோழியாற் குறைமறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் ஒரு பெண்ணை விரும்புகிறான். அந்தப் பெண்ணின் தோழியிடம் அப்பெண்ணின்மீது தான் கொண்ட காதலைக் கூறி, அவளைச் சந்திப்பதற்கு உதவி புரியுமாறு வேண்டுகிறான். அப்பெண் அவனை விரும்பவில்லை என்பதை அறிந்த தோழி, தலைவனின் வேண்டுகோளை ஏற்க மறுத்தாள். தோழியால் கைவிடப்பட்ட தலைவன் தன் நெஞ்சை நோக்கி, “அந்தப் பெண்ணுக்கு நம்மீது இரக்கம் இல்லை. அவள் நம் வேண்டுகோளை ஏற்கவில்லை. இனி, தோழியைத் தூதுவிட்டுப் பயனில்லை. அவளை அடைவதற்கு மடலேறுவதுதான் சிறந்த வழி. அதுவே நாம் அவளுக்கு அனுப்பும் தூதாகும்என்று கூறுகிறான்.

விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென்பு அணிந்துபிறர் எள்ளத் தோன்றி
ஒருநாண் மருங்கிற் பெருநாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ
கலிழ்கவின் அசைநடைப் பேதை
மெலிந்திலள் நாம்விடற்கு அமைந்த தூதே. 

கொண்டு கூட்டு: கலிழ் கவின் அசை நடைப் பேதை  மெலிந்திலள்.  நாம் விடற்கு அமைந்த தூது விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல் மணியணி பெருந்தார் மரபிற் பூட்டிவெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றிஒருநாள் மருங்கில் பெருநாண் நீக்கித்தெருவின் இயலவும் தருவதுகொல்லோ

அருஞ்சொற்பொருள்: விழு = சிறந்த; தலை = உச்சி; பெண்ணை = பனை; விளைவு = முதுமை; மா = குதிரை; மடல் = பனை மட்டை; மாமடல் = பனைமட்டையால் செய்யப்பட்ட குதிரை போன்ற உருவம்; தார் = மாலை; என்பு = எலும்பு; மருங்கு = பக்கம்; இயலுதல் = இழுக்கப்படுதல்; கலிழ்தல் = ஒழுகுதல்; கவின் = அழகு; அவிர் = ஒளி; பேதை = இளம்பெண்; மெலிதல் = இளைத்தல் (இரங்குதல்).


உரை: நெஞ்சே, அழகு ஒழுகும் அசைந்த நடையையுடைய தலைவி, நம்மிடத்தில் இரக்கம் இல்லாதவளாக இருக்கிறாள்.  நாம் அத் தலைவிக்கு விடுகின்ற தூது,  சிறந்த உச்சியையுடைய பனைமரத்தின் முதிர்ந்த பெரிய மடலால் செய்த குதிரைக்கு, மணிகள் அணிந்த பெரிய மாலையை முறையாக அணிவித்து, நாம் வெண்ணிறமான எலும்பை அணிந்துகொண்டு, பிறர் இகழும்படி அக்குதிரையின் மேல் ஏறி அமர்ந்து, ஒருநாள் என்னுடைய பெரிய  நாணத்தை விட்டுவிட்டுத் தெருவில் செல்வது ஆகும்.

No comments:

Post a Comment