Showing posts with label 186. தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 186. தலைவி கூற்று. Show all posts

Sunday, May 1, 2016

186. தலைவி கூற்று

186.  தலைவி கூற்று

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 126 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச்சென்றான். கார்காலம் வந்தது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. அதனால் தலைவி வருந்துவாளே என்று கவலைப்பட்ட தோழியிடம், தலைவி, “ தலைவனை நினைத்தேன். உறக்கம் வரவில்லைஎன்று கூறுகிறாள்.  

ஆர்கலி ஏற்றொடு கார்தலை மணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
எயிறுஎன முகைக்கும் நாடற்குத்
துயில்துறந் தனவால் தோழிஎன் கண்ணே. 

கொண்டு கூட்டு: தோழி!, ஆர்கலி ஏற்றொடு கார்தலை மணந்தகொல்லைப் புனத்த முல்லை மென்கொடி எயிறு என முகைக்கும் நாடற்கு என் கண் துயில் துறந்தன.  

அருஞ்சொற்பொருள்: ஆர்கலி = ஆரவாரம், மிகுந்த ஒலி; ஏறு = பெரிய ஒலியுடன் கூடிய இடி;  கார் = மழை; தலைஅசைசொல்; மணந்த = கலந்த; கொல்லை = முல்லைநிலம்; எயிறு = பற்கள்; முகைக்கும் = அரும்பும்; துயில் = உறக்கம்; துறத்தல் = நீக்குதல் (இழத்தல்). ஆல்அசைச்சொல்.


உரை: தோழி! பேரொலி எழுப்பும் இடியுடன் முழங்கிப் பெய்த மழைநீரோடு கலந்த முல்லை நிலத்திலுள்ள, மெல்லிய முல்லைக் கொடிகள், பற்களைப் போல அரும்பும் நாட்டையுடைய தலைவனை நினத்து என் கண்கள் உறக்கத்தை இழந்தன.