Sunday, May 1, 2016

186. தலைவி கூற்று

186.  தலைவி கூற்று

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 126 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச்சென்றான். கார்காலம் வந்தது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. அதனால் தலைவி வருந்துவாளே என்று கவலைப்பட்ட தோழியிடம், தலைவி, “ தலைவனை நினைத்தேன். உறக்கம் வரவில்லைஎன்று கூறுகிறாள்.  

ஆர்கலி ஏற்றொடு கார்தலை மணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
எயிறுஎன முகைக்கும் நாடற்குத்
துயில்துறந் தனவால் தோழிஎன் கண்ணே. 

கொண்டு கூட்டு: தோழி!, ஆர்கலி ஏற்றொடு கார்தலை மணந்தகொல்லைப் புனத்த முல்லை மென்கொடி எயிறு என முகைக்கும் நாடற்கு என் கண் துயில் துறந்தன.  

அருஞ்சொற்பொருள்: ஆர்கலி = ஆரவாரம், மிகுந்த ஒலி; ஏறு = பெரிய ஒலியுடன் கூடிய இடி;  கார் = மழை; தலைஅசைசொல்; மணந்த = கலந்த; கொல்லை = முல்லைநிலம்; எயிறு = பற்கள்; முகைக்கும் = அரும்பும்; துயில் = உறக்கம்; துறத்தல் = நீக்குதல் (இழத்தல்). ஆல்அசைச்சொல்.


உரை: தோழி! பேரொலி எழுப்பும் இடியுடன் முழங்கிப் பெய்த மழைநீரோடு கலந்த முல்லை நிலத்திலுள்ள, மெல்லிய முல்லைக் கொடிகள், பற்களைப் போல அரும்பும் நாட்டையுடைய தலைவனை நினத்து என் கண்கள் உறக்கத்தை இழந்தன.

No comments:

Post a Comment