Sunday, May 1, 2016

188. தலைவி கூற்று

188. தலைவி கூற்று

பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார். இவர் பெயர் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்றும் சிலநூல்களில் காணப்படுகிறது. அளக்கர் ஞாழல் என்பது ஓர் ஊர். மள்ளர் என்பது வீரரைக் குறிக்கும் சொல் . இவர் இயற்பெயர் மள்ளனார். இவர் மதுரையைச் சார்ந்த அளக்கர் ஞாழலார் என்பவரின் மகனாகையால் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.  இவர் பாடியனவாக அகநானூற்றில் ஏழு பாடல்களும் (33, 144, 174, 244, 314, 344, 353), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (188, 215), நற்றிணையில் மூன்று பாடல்களும் (82, 297, 321), புறநானூற்றில் ஒருபாடலும் காணப்படுகின்றன. அம்மள்ளனார் என்ற பெயருடைய புலவர் ஒருவர் நற்றிணையில் உள்ள 82-ஆம் பாடலை இயற்றியுள்ளார். அம்மள்ளனார் என்பவரும் இப்பாடலை இயற்றிய மள்ளனார் என்பவரும் ஒருவர் அல்லர் என்று கருதப்படுகிறது.
திணை: முல்லை.
கூற்று: பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: கார்காலதில் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற தலைவன் கார்காலம் வந்த பின்னரும் வரவில்லை. “கார்காலம் வந்துவிட்டது. ஆனால் தலைவர் இன்னும் வரவில்லையேஎன்று தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.

முகைமுற் றினவே முல்லை முல்லையொடு
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்
வாலிழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்றுஎன் மாண்நலம் குறித்தே. 

கொண்டு கூட்டு: முல்லை முகை முற்றின; தண்கார் வியன் புனம் முல்லையொடு தகை முற்றின; என் மாண் நலம் குறித்து  மாலை வந்தன்று. வால் இழை நெகிழ்த்தோர் வாரார்

அருஞ்சொற்பொருள்: முகை = மலரும் பருவத்தரும்பு; தகை = தகுதி (மலர்தல் முல்லைக்குரிய தகுதி); வியன்புனம் = முல்லை நிலத்தின் அகன்ற நிலப்பரப்பு; வால் = தூய; இழை = அணிகலன்; வந்தன்று = வந்த்து; மாண் = அழகு, பெருமை.


உரை: தோழி! முல்லைக்கொடிகளில் அரும்புகள் முதிர்ந்தன; குளிர்ந்த கார்காலத்தில்  அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களோடு அழகு நிரம்பப் பெற்றன. எனது சிறப்பான அழகைக் கெடுப்பதற்காகவே மாலைக் காலம் வந்தது;  என்னைப் பிரிந்து,  என் தூய அணிகலன்கள் கழலுமாறு செய்த  என் தலைவர் இன்னும் வரவில்லை.

No comments:

Post a Comment