Sunday, May 1, 2016

189. தலைவன் கூற்று

189. தலைவன் கூற்று

பாடியவர்: மதுரை ஈழத்துப் பூதன்தேவனார். இவர் அகநானூற்றில் மூன்று பாடல்களும் (88, 231, 307), குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (189, 343, 360), நற்றிணையில் ஒருபாடலும் ( 366) இயற்றியுள்ளார்.
திணை: பாலை.
கூற்று: வினை தலைவைக்கப்பட்ட விடத்து தலைமகன் பாகற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவைக்கப்பட்ட விடத்துஎன்பதற்குஒருபணியைச் செய்ய வேண்டுமென்று ஏவப்பட்ட காலத்தில்என்று பொருள். ஒருவேலையை செய்து முடித்து வரவேண்டுமென்று அரசன் தலைவனுக்குக் கட்டளையிட்டான்.  தலைவனுக்குத் தலைவியைவிட்டுப் பிரிய மனமில்லை. அதே சமயம், அரசன் கட்டளையை நிறைவேற்றாமலும் இருக்க முடியவில்லை. ஆகவே, தலைவன், “ இன்றே சென்று அரசன் இட்ட பணியை முடித்து, நாளை மாலைக்குள் திரும்பவேண்டும்என்று கூறுகிறான். இப்பாடலைத் தலைவன் தேர்ப்பாகனுக்கு உரைத்தது என்று கருதாமல் தலைவன் தனக்குத் தானே கூறிக்கொள்கிறான் என்று எண்ணிப்பார்ப்பது சிறந்ததாகத் தோன்றுகிறது.

இன்றே சென்று வருவது நாளைக்
குன்றுஇழி அருவியின் வெண்தேர் முடுக
இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்
கால்இயல் செலவின் மாலை எய்திச்
சில்நிரை வால்வளைக் குறுமகள்
பன்மாண் ஆகம் மணந்துஉவக் குவமே. 

கொண்டு கூட்டு: இன்றே சென்று நாளை வருவது. குன்று இழி அருவியின் வெண்தேர் முடுகஇளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமிவிசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பகால் இயல் செலவின் மாலை எய்தி, சில்நிரை வால்வளைக் குறுமகள்
பல்மாண் ஆகம்  மணந்து உவக்குவமே. 

அருஞ்சொற்பொருள்: முடுக்குதல் = விரைவாகச் செலுத்துதல்; சுடர் = ஓலி; நேமி = சக்கரம்; விசும்பு = ஆகாயம்; கொள்ளி = ; பைம்பயிர் = பசுமையான பயிர்; துமிப்ப = அழியகால் = காற்று; செலவு = ; எய்தி = அடைந்து; நிரை = வரிசை; வால் = வெண்மையான; ஆகம் = உடல்; மணத்தல் = கலத்தல் (கூடுதல்).

உரை:  இன்றே சென்று, அரசன் இட்ட பணியை முடித்துவிட்டு  நாளை மீண்டு வருவோமாக. குன்றிலிருந்து விழும் அருவியைப் போன்ற வெண்மையான  யானைத் தந்தத்தாற் செய்த வெண்ணிறமான தேரில் விரைந்துசென்று, இளம்பிறையைப் போல், விளங்குகின்ற ஒளியையுடைய அத்தேரினது சக்கரம், வானத்திலிருந்து விழுகின்ற கொள்ளியைப் போல, பசிய பயிர்களை அழித்துக்  காற்றைப் போன்ற வேகத்தோடு, நாளை மாலைக்காலத்தில் தலைவியிருக்கும் இடத்தையடைந்து, வரிசையாக வெண்மையான சில வலையல்களை அணிந்த அவளுடைய பலவகையிலும் சிறந்த அழகான உடலைத் தழுவி மகிழ்வோம்.


சிறப்புக் குறிப்பு:   சக்கரம் நிலத்தில் செல்லும்பொழுது, மண்ணிற் புதைந்த பகுதி போக எஞ்சியபகுதியே வெளியில் தெரியுமாதலின் அப்பகுதிக்குப் பிறை உவமை ஆகியது. ஆகாயத்திலிருந்து விழும் கொள்ளி என்றது எரிநட்சத்திரத்தைக் குறிக்கிறது. ஆகாயத்திலிருந்து எரிநட்சத்திரம் விழுந்தால் பயிர்கள் அழிவதைப்போல் தேர் விரைந்து செல்லுவதால் பயிர்கள் அழிந்தன என்று பொருள் கொள்ளலாம்.    ”சில்நிரை வளைஎன்ற அடைமொழி தலைவி இளம்பெண் என்பதைக் குறிக்கிறது.  வால்வளைஎன்பது சங்கினாற் செய்த வளையல்களைக் குறிக்கிறது.  பன்மாண் ஆகம் என்றது தலைவியின் உடல் காண்பதற்கு இனிமையாகவும், தழுவுவதற்கு இனிமையாகவும், மணமுள்ளதாகவும் பலவகையிலும் சிறப்பானதாக இருப்பதாகத் தலைவன் கருதுவதைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment