Showing posts with label 369. தோழி கூற்று. Show all posts
Showing posts with label 369. தோழி கூற்று. Show all posts

Tuesday, July 11, 2017

369. தோழி கூற்று

369. தோழி கூற்று
பாடியவர்: குடவாயிற் கீரத்தனார்.
திணை: பாலை.
கூற்று : தோழி, கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.
கூற்று விளக்கம்: தலைன் தலைவியோடு உடன்போகச் சம்மதித்தான் என்பதை அறிந்த தோழி, “தலைவனுடன் செல்வாயாகஎன்று தலைவியிடம் கூறுகிறாள்.

அத்த வாகை அமலை வானெற்
றரியார் சிலம்பி னரிசி யார்ப்பக்
கோடை தூக்குங் கானம்
செல்வாந் தோழி நல்கினர் நமரே. 

கொண்டு கூட்டு: தோழி நமர் நல்கினர் அத்த வாகை அமலை வால் நெற்று அரிசி அரி ஆர் சிலம்பின் ஆர்ப்பகோடை தூக்கும் கானம் செல்வாம். 

அருஞ்சொற்பொருள்: நமர் = நம் தலைவர்; நல்குதல் = அன்பு காட்டுதல், அருள் செய்தல்; அத்தம் = பாலைவழி; வாகை = ஒருவகை மரம்; அமலை = ஒலி; வால் = வெண்மை; அரி = பரல்; அரிசி = உள்விதை; ஆர்ப்ப = ஒலிக்க; தூக்கும் = காற்று அலைக்கும்; கானம் = காடு.


உரை: தோழி! நம் தலைவர், நம்மீது அருள் செய்தார் (உடன்போகச் சம்மதித்தார்). ஆதலின்,  கடத்தற்கரிய பாலைவழியில் உள்ள வாகைமரத்தின்,  வெண்ணிறமான  நெற்றுக்கள், தம் உள்ளிருக்கும் விதைகளோடு, பரல்களை உள்ளீடாகக் கொண்ட  சிலம்பைப் போல் ஒலிக்குமாறு, மேல்காற்று அலைக்கின்ற, காட்டுவழியில் செல்வோமாக.