Tuesday, July 11, 2017

369. தோழி கூற்று

369. தோழி கூற்று
பாடியவர்: குடவாயிற் கீரத்தனார்.
திணை: பாலை.
கூற்று : தோழி, கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.
கூற்று விளக்கம்: தலைன் தலைவியோடு உடன்போகச் சம்மதித்தான் என்பதை அறிந்த தோழி, “தலைவனுடன் செல்வாயாகஎன்று தலைவியிடம் கூறுகிறாள்.

அத்த வாகை அமலை வானெற்
றரியார் சிலம்பி னரிசி யார்ப்பக்
கோடை தூக்குங் கானம்
செல்வாந் தோழி நல்கினர் நமரே. 

கொண்டு கூட்டு: தோழி நமர் நல்கினர் அத்த வாகை அமலை வால் நெற்று அரிசி அரி ஆர் சிலம்பின் ஆர்ப்பகோடை தூக்கும் கானம் செல்வாம். 

அருஞ்சொற்பொருள்: நமர் = நம் தலைவர்; நல்குதல் = அன்பு காட்டுதல், அருள் செய்தல்; அத்தம் = பாலைவழி; வாகை = ஒருவகை மரம்; அமலை = ஒலி; வால் = வெண்மை; அரி = பரல்; அரிசி = உள்விதை; ஆர்ப்ப = ஒலிக்க; தூக்கும் = காற்று அலைக்கும்; கானம் = காடு.


உரை: தோழி! நம் தலைவர், நம்மீது அருள் செய்தார் (உடன்போகச் சம்மதித்தார்). ஆதலின்,  கடத்தற்கரிய பாலைவழியில் உள்ள வாகைமரத்தின்,  வெண்ணிறமான  நெற்றுக்கள், தம் உள்ளிருக்கும் விதைகளோடு, பரல்களை உள்ளீடாகக் கொண்ட  சிலம்பைப் போல் ஒலிக்குமாறு, மேல்காற்று அலைக்கின்ற, காட்டுவழியில் செல்வோமாக.

No comments:

Post a Comment