Sunday, July 12, 2015

55. நெய்தல் - தோழி கூற்று

55. நெய்தல் - தோழி கூற்று

பாடியவர்: நெய்தற் கார்க்கியர். கார்க்கியர் என்பது ஒரு முனிவரின் பெயர்.  அதுவே இவரது இயற்பெயராகும். நெய்தல் திணையைப் பாடும் ஆற்றல் மிகுந்தவராதலால் இவர் நெய்தல் கார்க்கியர் என்ற பெயரைப் பெற்றார் போலும். இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களை (55, 212) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: களவொழுக்கம் நீடிப்பதைத் தலைவி விரும்பவில்லை. அவள் விரைவில் தலைவனைத் திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறாள்திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் செய்யாததைக் கண்டு தலைவி மிகவும் வருந்துகிறாள். தலைவியின் துயரத்தைக் கண்ட தோழியும் வருந்துகிறாள். தலைவியைக் காணவந்த தலைவன் மறைவான ஓரிடத்தில் இருக்கிறான். அவன் வந்திருப்பது தோழிக்குத் தெரியும். “விரைவில் திருமணம் நடைபெற  வேண்டும் என்ற மிகுந்த  விருப்பத்துடன் இருக்கிறாள். திருமணத்திற்கான  காலம் நீடிப்பதால் தலைவி மிகவும் வருந்துகிறாள், இந்நிலையில் அவள் இந்த ஊரில் அதிக நாட்கள் வாழமாட்டாள்.” என்று தலைவனுக்குக் கேட்குமாறு தோழி கூறுகிறாள்.

மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்
பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட் டாகும்
சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே. 

அருஞ்சொற்பொருள்: மா = கருமை; கழி = உப்பங்கழி; மணி = நீலமணி; கூம்புதல் = குவிதல்; தூ = தூய்மை; திரை = அலை; பிதிர் = பிசிர் = துளி மழை; துவலை = மழைத்தூவல்; மங்குல் =  மேகம்; தைஇ = பொருந்திய; கையறுதல் = செயலற்ற நிலை; தைவரல் = தடவுதல்; ஊதை = வாடைக்காற்று; இன்னா = துன்பம் தருபவை; உறையுள் =  ஆயுள், தங்குமிடம்; சின்னாட்டு = சில்+நாட்டு = சில நாட்களையுடையது; அம்மஅசை நிலை.

உரை:  கரிய உப்பங்கழியில் உள்ள நீலமணி போன்ற நெய்தல் மலர்கள் கூம்பும் மாலை நேரத்தில்,  தூய அலைகளிடத்திலிருந்து பொங்கிவரும் நீர்த்துளிகளோடு பொருந்திய மேகத்தோடுகூடிய  வாடைக்காற்று தங்கள் காதலர்களைப் பிரிந்தவர்கள் செயலறுமாறு வீசுகிறது. இத்தகைய துன்பங்களைத் தரும் இந்தச் சிறிய நல்ல ஊரில், இன்னும் சிலநாட்களே வாழமுடியும்.

விளக்கம்: மணிப்பூ என்பது நீலமணி போன்ற முள்ளி  அல்லது நெய்தல் மலரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ”கூம்பஎன்று கூறியது மலர்கள் கூம்பும் மாலை நேரத்தைக் குறிக்கிறது.    ”இன்னாவுறையுட்டாகுஞ் சின்னாட்டம்ம இவ்வூர்'” என்று ஊரைக் குறிப்பிட்டாலும்,  ”தலைவி இன்னும் சில நாட்களே இவ்வூரில் உயிர் வாழ்வாள்; அந்தச் சிலநாட்களும் துன்பம் தரும் இயல்புடையவைஎன்று தோழி கூறுவதாகப் பொருள்கொள்வது பொருந்தும். அதனால், தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோழி வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது.


 ”சிறு நல்லூர்என்று கூறியதால், இன்னா உறையுளும், சிலநாட்களாதலும் ஊரின்மேல் உள்ள குறையன்று என்று தோழி கூறுவதாகத் தோன்றுகிறது

No comments:

Post a Comment