Monday, September 14, 2015

86. குறிஞ்சி - தலைவி கூற்று

86. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: வெண்கொற்றனார். இவர் பாடியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: தலைவனின் பிரிவைப் பொறுக்க முடியாததால்  தலைவி தூங்காமல்  வருத்தத்துடன் இருக்கிறாள். தோழியும் அவளோடு இருக்கிறாள்.  அவள் வீட்டிற்கு அருகே எருது ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அந்த எருதின் முகத்தில் ஈ ஒன்று மீண்டும் மீண்டும் வந்து உட்கார்கிறது. ஈயின் தொல்லை தாங்காமல் அந்த எருது தன் தலையை அசைக்கிறது. எருது தலையை அசைப்பதால் அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணி மெல்லிய ஓசையை எழுப்புகிறது. தூங்காமல் இருப்பதால், அந்த மெல்லிய மனியோசையைத் தலைவியால் கேட்க முடிகிறது.  “தலைவனோடு இன்புற்றிருக்க வேண்டிய இந்தக் கூதிர்காலத்தின் நள்ளிரவில் என்னுடைய தனிமைத் துயரத்தை மிகுதிப்படுத்தும் எருதுவின் மணியோசையை கேட்பவர்கள் வேறு யாராவது இருப்பார்களோ?” என்று தலைவி தோழியைக் கேட்கிறாள்.

சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆனுளம் புலம்புதொ றுளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.
-

கொண்டுகூட்டு: உறை சிறந்து ஊதை தூற்றும் கூதிர் யாமத்து ஆன்நுளம்பு  உலம்புதொறு உளம்பும் நாநவில் கொடுமணி நல்கூர் குரலை, சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண் பொறை அரு நோயொடு, புலம்பு அலைக் கலங்கிப் பிறரும் கேட்குநர் உளர்கொல் ?

அருஞ்சொற்பொருள்: பனி = கண்ணீர்; சிறை பனி =  கட்டுப்படுத்தியிருந்த கண்ணீர்; சேயரி = சே + அரி = செவ்வரி = கண்ணிலுள்ள சிவந்த கோடுகள் (இரேகைகள்); மழைக்கண் = குளிர்ந்த கண் ; பொறையரு = பொறை + அரு = பொறுத்தற்கரிய; நோய் = பிரிவினால் விளைந்த துன்பம்; புலம்பு = தனிமை; அலைத்தல் = வருத்துதல்;  உறை = மழைத்துளி; சிறந்து = பெரிதாக; ஊதை = வாடைக்காற்று; கூதிர் = கூதிர் காலம் (ஐப்பசி கார்த்திகை மாதங்கள்); யாமம் = நள்ளிரவு; ஆன் =  எருது; நுளம்பு =   (மாட்டு ஈ); உலம்புதல் = ஒலித்தல்; உளம்புதல் = அலைத்தல்; நா = மணியின் நா; நவிலுதல் = ஒலித்தல்; கொடு = கொடிய; நல்கூர் குரல் =  மெல்லிய ஓசை.

உரை: தோழி, பெரிய மழைத்துளிகளை வாடைக்காற்று வீசித் தூவுகின்ற கூதிர்காலத்தின் நள்ளிரவில், எருது தன் முகத்தருகே வந்து ஓசையிடும் ஈக்களை விரட்டத் தன் தலையை அசைக்கிறது.  ஏருது தலையை அசைப்பதால் அதன் கழுத்தில் உள்ள கொடிய மணியின் நா அசைந்து மெல்லிய ஓலியை எழுப்புகிறது. அந்த ஒலி காதில் விழும்பொழுது, கட்டுப்படுத்தியிருந்த கண்ணீர் துளித்துளியாக விழுகின்ற, சிவந்த வரிகளையும் குளிர்ச்சியையுமுடைய கண்களோடும் பொறுத்தற்கரிய காமநோயோடும் தனிமை வருத்துவதால் அந்த ஒலியைக் கேட்டுக் கலங்கி வருந்துபவர்கள் என்னைத் தவிர பிறரும் உளரோ?


விளக்கம்: சிறைபனிஎன்றது தலைவி தன் துயரத்தை அடக்க முயலும் முயற்சியைக் குறிக்கிறது. தனிமைத் துயரத்தை மேலும் அதிகப்படுத்துவதால்  எருதின் கழுத்திலுள்ள மணிகொடுமணிஎன்று குறிப்பிடப்பட்டது

No comments:

Post a Comment