Monday, September 14, 2015

87. குறிஞ்சி - தலைவி கூற்று

87. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: கபிலர்.இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 13-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் பழகிய காலத்தில்,  “உன்னை என்றும் பிரிய மாட்டேன்என்று கடம்பு மரத்தில் வாழும் தெய்வத்தின் முன்னிலையில் தலைவன் சூளுரை செய்தான். பின்னர், பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றான். பிரிந்து சென்றவன் இன்னும் திரும்பி வரவில்லை. தலைவனின் பிரிவால் வருந்திய தலைவியின் நெற்றியில் பசலை படர்ந்தது; தோள்கள் மெலிந்தன. பிரிந்து செல்ல மாட்டேன் என்று குளுரைத்துப் பின்னர் பிரிந்து சென்றதால் அந்தத் தெய்வம் தன் தலைவனைத் தண்டிக்குமோ என்று தலைவி அஞ்சினாள். ”என்னுடைய உடலில் தோன்றிய மாற்றங்களுக்குக் காரணம் என் தலைவர் எனக்குச் செய்த கொடுமை அன்று. அவற்றிற்குக் காரணம் என்னுடைய மனநிலைதான். ஆகவே, என் தலைவரைத் தண்டிக்க வேண்டா.” என்று தலைவி தெய்வத்திடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே. 

கொண்டுகூட்டு: மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப. எம் குன்றுகெழு நாடர் யாவதும் கொடியர் அல்லர். (என்) நுதல் பசைஇ பசந்தன்று;
(என்) தடமென்தோள் ஞெகிழ ஞெகிழ்ந்தன்று. 

அருஞ்சொற்பொருள்: மன்றம் = பொதுவிடம்; மரா = கடம்பு மரம்; பேஎம் = அச்சம்; முதிர் = முதிர்ந்த; தெறூஉம் = வருத்தும்; யாவதும் = சிறிதும்; கெழு = பொருந்திய; பசைஇ = விரும்பி; நுதல் = நெற்றி; ஞெகிழ்தல் = நெகிழ்தல், மெலிதல், உருகுதல்; தட = பெரிய, பரந்த.


உரை:  பொதுவிடத்திலுள்ள கடம்பு மரத்தில்  தங்கியுள்ள, பிறர்க்கு அச்சத்தைத் தரும் பழமையான தெய்வம், கொடியவர்களை வருத்தும் என்று கூறுவர். குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய எம் தலைவர், சிறிதளவும் கொடியவரல்லர். நான் அவரை விரும்பியதனால் என் நெற்றி தானாகவே பசலை பெற்றது; என் மனம் அவரை நினைத்து உருகியதால், என்னுடைய  பரந்த மெல்லிய தோள் தானாகவே மெலிந்தது.

1 comment: