Tuesday, November 17, 2015

109. தோழி கூற்று

109. தோழி கூற்று

பாடியவர்:  நம்பி குட்டுவர். இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (109,243), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (236, 243) இயற்றியுள்ளார்
திணை: நெய்தல்.
 கூற்று: சிறைப்புறம் தம் வேறுபாடு கண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்றத் தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கு காலம் கடத்துகிறான்அதனால் தலைவி வருந்திகிறாள். வருத்தத்தால்  அவள் நெற்றி தன் அழகை இழந்து காணப்படுகிறது. அதைக் கண்ட ஊரார் அலர் தூற்றுகின்றனர். தலைவியைக் காணவந்த தலைவன் காதில் கேட்குமாறு, அலர் பற்றிய செய்தியைத் தோழி  கூறுகிறாள்.

முடக்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉந் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே. 

கொண்டு கூட்டு: முடக்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை புணரி இகுதிரை தரூஉந் துறைவன் புணரிய இருந்த ஞான்றும் இன்னது மன்னோ நன்னுதற் கவினே. 

அருஞ்சொற்பொருள்: முடம் = வளைவு; முடக்கால் = முடம் + கால் = வளைந்த கால்; இறவு = இறால் மீன் (இறா மீன்); முடங்குதல் = வளைதல்; புறம் = முதுகு; கிளை = இனம்; புணரி = கடல்; இகுதல் = விழுதல்; துறைவன் = நெய்தல் நிலத் தலைவன்; புணரிய = அளவளாவிய; ஞான்று = பொழுது; இன்னது = இத்தன்மையது; மன் = கழிவுக்குறிப்பு ( இரங்கத் தக்கது); கவின் = அழகு.


உரை: வளைந்த காலையுடைய இறாமீனின், வளைந்த முதுகையுடைய பெரிய இனத்தை,  கடலில் தோன்றும் அலைகள், கொண்டுவந்து தருகின்ற கடற்கரையையுடைய தலைவனோடு அளவளாவி இருந்தபொழுதும், உன்னுடைய நல்ல நெற்றியின் அழகு, பிறர் அலர் கூறும்படி அழகை இழந்து இத்தகையதாயிற்று; இது இரங்கத் தக்கதாகும்!

No comments:

Post a Comment