Sunday, July 17, 2016

220. தலைவி கூற்று

220.  தலைவி கூற்று

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 126 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: பருவ வரவின்கட் கிழத்தி தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் கூறிச் சென்ற கார் காலம் வரவும் அவன் வாராததால், “தாம் வர வேண்டிய இக் காலத்தும் வந்திலர்; இனி என் செய்வேன்!” என்று தோழியிடம்  தலைவி கூறுகிறாள்.

பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே. 

கொண்டு கூட்டு:
தோழி!  பழமழைக் கலித்த புதுப்புன வரகின் இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை இருவி சேர் மருங்கில் பூத்த முல்லைவெருகு சிரித்தன்ன பசுவீ மென்பிணிக் குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின் வண்டுசூழ் மாலையும் பொருட் பிரிந்தோர்  வாரார்கண்டிசின்!

அருஞ்சொற்பொருள்: பழமழை = பழைய மழை; கலித்த = தழைத்த; புனம் = கொல்லை; இரலை = ஆண்மான்; பாவை = மானால் உண்ணப்படும் இலையை உடைய வரகின்தாள்;  இருவி = வரகு அரிந்த தாள்; சேர் = சேர்ந்த; வெருகு = காட்டுப்பூனை; வீ = பூ; பிணி = அரும்பு (விரிவதற்கு முன்னுள்ள மொட்டு); முகை = மொட்டு; புறவு = முல்லை நிலம்; கண்டிசின் = காண்பாயாக.

உரை: தோழி! பழைய மழையினால் தழைத்த, கொல்லையில் உள்ள புதிய வரகின் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டனகதிர் அரியப்பட்ட வரகின் தாள்களில் எஞ்சியிருந்த இலைகளை ஆண்மான் மேய்ந்ததால், அவை குறைந்த தலையையுடைனவாக உள்ளனஅவற்றின் பக்கத்தில் உள்ள முல்லைக் கொடியில், காட்டுப் பூனை சிரித்ததைப் போன்ற தோற்றத்தையுடைய, மெல்லிய இதழ்கள் மூடிய புதிய பூவின் சிறிய அரும்புகள் மலர்ந்து, மணம் வீசுகின்ற முல்லை நிலத்தில், வண்டுகள் அம் மலர்களில் உள்ல தேனை உண்ணுவதற்காகச் சுற்றுகின்றன. இத்தகைய மாலைக்காலத்திலும், பொருள் ஈட்டுவதற்காக நம்மைவிட்டுப் பிரிந்த தலைவர் வரவில்லை. நீ இதனைக் காண்பாயாக!


சிறப்புக் குறிப்பு: பழமழை என்றது வரகு விதைத்த காலத்தில் பெய்த மழையைக் குறிக்கிறது. புதுமை என்றது வரகின் கதிரைக் குறிக்கிறது.

219. தலைவி கூற்று

219. தலைவி கூற்று

பாடியவர்: வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 97 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: சிறைப்புறம்.
கூற்று விளக்கம்: தலைவன் வந்து வேலிக்கு வெளியே நிற்பதை அறிந்த தலைவி, தோழிக்குக் கூறுவது போல், தன்னுடைய வருத்தத்தை தலைவனின் காதுகளில் விழுமாறு கூறுகிறாள்.

பயப்பென் மேனி யதுவே நயப்பவர்
நாரில் நெஞ்சத் தாரிடை யதுவே
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே
ஆங்கட் செல்கம் எழுகென வீங்கே
வல்லா கூறியிருக்கு முள்ளிலைத்
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க்
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே. 

கொண்டு கூட்டு: தோழி! பயப்பு என் மேனியது. நயப்பு அவர் நார்இல் நெஞ்சத்து ஆர் இடையது. செறிவும் சேண் இகந்தன்று; அறிவுஆங்கண் செல்கம் எழுகஎனஈங்கே வல்லா கூறி இருக்கும். முள்ளிலைத் தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க்கு :எ நீரிரோ எனின் இடம் மன்

அருஞ்சொற்பொருள்: பயப்பு = பசப்பு; நயப்பு = விருப்பம்; நார் = அன்பு; ஆர் – இடைச்சொல்; செறிவு = அடக்கம்; சேண் = தொலை (தூரம்); இகத்தல் = கடத்தல் (பிரிதல்); வல்லா = முடியாதவற்றை; தடவு நிலை = அகன்ற அடிப்பாகம்; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; இடம் = காலம் (சமயம்).


உரை: தோழி! பசலையானது என் மேனியில் படர்ந்துள்ளது. காதல் அவரது அன்பற்ற நெஞ்சமாகிய அரிய இடத்தில் உள்ளது. எனது அடக்கம், என்னைவிட்டு நெடுந்தூரம் விலகியது. எனது அறிவு, “தலைவர் உள்ள இடத்திற்குச் செல்வதற்காக எழுவாயாகஎன்று நம்மால் முடியாதவற்றைக் கூறி இங்கேயே தங்கி இருக்கிறது. பருத்த அடிகளையுடைய தாழைகள் உள்ள கடற்கரைத் தலைவருக்குஎத்தன்மையுடன் இருக்கின்றீர்?” என்று பரிவுடன் கேட்டு, நம் குறை தீர்க்க இது தக்க சமயமாகும்

218. தலைவி கூற்று

218. தலைவி கூற்று

பாடியவர்: கொற்றனார். இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில்  உள்ள இரண்டு படல்கள்  (218, 358) மட்டுமே சங்க இலக்கியத்தில் உள்ளன.
திணை:
பாலை.
கூற்று: பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்து.
கூற்று விளக்கம்: தலைவி, பிரிவைப் பொறுத்துக்கொள்ள மாட்டாள் என்று கவலைப்பட்ட  தோழியை நோக்கி, “தலைவர் நம் உயிர்க்கு உயிர் போன்றவர்; அவரைப் பிரிந்து கணப்பொழுதும் வாழும் வலிமை எனக்கு இல்லை. இத்தகைய நிலையில் உள்ள என்னை மறந்து அவர் சென்றை இடத்திலேயே இருப்பாராயின், அவருக்காக கடவுளை வேண்டுதலும், நிமித்தம் பார்த்தலும் என்ன பயனைத் தரும்?” என்று தலைவி கூறுகிறாள்.


விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியு நில்லாம்
உள்ளலு முள்ளா மன்றே தோழி
உயிர்க்குயிர் அன்ன ராகலிற் றம்மின்
றிமைப்புவரை யமையா நம்வயின்
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே. 

கொண்டு கூட்டு: தோழி!  உயிர்க்குயிர் அன்னர் ஆகலின், தம் இன்று  இமைப்பு வரை அமையா நம்வயின் மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டு, விடர்முகை அடுக்கத்து, விறல்கெழு சூலிக்குக் கடனும் பூணாம்; கைந்நூல் யாவாம்புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்; உள்ளலும் உள்ளாம்

அருஞ்சொற்பொருள்: விடர்முகை = பிளவுள்ள குகை; விறல் = வெற்றி; சூலி = கொற்றவை; கடன் = பலி; கைந்நூல் = காப்பு; யாத்தல் = கட்டுதல்; புள் = நிமித்தம் (சகுனம்); ஓர்தல் = ஆராய்தல்; விரிச்சி = வாய்ச்சொல் ( அசரீரி); உள்ளல் = நினைத்தல்; அன்றுஅசைச்சொல்;  இமைப்பு = இமைப்பொழுது.


உரை: தோழி! நம் தலைவர் நமக்கு உயிருக்கு உயிரைப் போன்றவர். அவரை இமைப்பொழுதும் பிரிந்திருக்க முடியாத நம்மை மறந்துவிட்டு, அவர் தாம் தாம் சென்ற  இடத்திலேயே தங்குவதில் மனவலிமை மிக்கவராக உள்ளார். இனி, அவருக்காக, பிளவுற்ற குகைகளையுடைய மலைப்பக்கத்தில் உள்ள, வெற்றி பொருந்திய கொற்றவைக்குப் பலி கொடுக்க மாட்டோம்; கையில் காப்பு நூலைக் கட்டிக்கொள்ள மாட்டோம்; நற்சொற்களைக் கேட்பதாற்காகச் சென்று நிற்க மாட்டோம். இனி, அவரை மனத்தாலும் நினைக்க மாட்டோம்

217. தோழி கூற்று

217. தோழி கூற்று

பாடியவர்: தங்கால் முடக்கொல்லனார். தங்கால் என்பது விருதுநகருக்கு அருகிலுள்ள ஓரூர்இவ்வூர், ‘இராசராச பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கருநீலக்குடி நாட்டுத்திருத்தங்கால்என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இப்புலவரின் பெயர் புறநானூற்றில் தங்கால் பொற்கொல்லன் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அகநூல்களில் இவர்பெயர் பொற்கொல்லன் வெண்ணாகனார் என்றும் தங்கால் முடக்கொல்லனார் என்றும் காணப்படுகிறது. இவர் புறநானூற்றில் ஒருபாடலும் (326), அகநானூற்றில் மூன்று பாடல்களும் (48, 108, 355), நற்றிணையில் ஒருபாடலும் (313), குறுந்தொகையில் ஒரு பாடலும் (217) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: உடன்போக்கு நயப்பத் (நயத்தல் = விரும்புதல்) தோழி தலைமகட்கு க் கூறியது.
கூற்று விளக்கம்: பகற் குறியும் இரவுக் குறியும் இப்பொழுது பொருந்தா; என்செய்வேம்!என்றதற்குத் தலைவன் உடன்போக்கை எண்ணிப் பெருமூச்சுவிட்டான்; அவனுடைய எண்ணம் சரியானதுதான் என்று  நான் கூறினேன்என்று தோழி தலைவியிடம் கூறி, அவள் உடன்போக்கை மேற்கொள்வதற்கு ஊக்கம் அளிக்கிறாள்.

 தினைகிளி கடிகெனிற் பகலும் ஒல்லும்
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல்
யாங்குச் செய்வாமெம் இடும்பை நோய்க்கென
ஆங்கியான் கூறிய அனைத்திற்குப் பிறிதுசெத்
தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற
ஐதே காமம் யானே
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே. 

கொண்டு கூட்டு: தினைகிளி கடிக எனில் பகலும் ஒல்லும்இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்; எம் இடும்பை நோய்க்கு   யாங்குச் செய்வாம் என, ஆங்கியான் கூறிய அனைத்திற்கு, ஓங்குமலை நாடன் பிறிது செத்து, உயிர்த்தோன் மன்றகாமம் ஐது. யான்  கழிமுதுக் குறைமையும் பழியும் என்றிசின்.

அருஞ்சொற்பொருள்: கடிதல் = வெருட்டுதல்; ஒல்லும் = இயலும்; ஊறு = துன்பம்; அஞ்சுவல் = அஞ்சுகிறேன்; இடும்பை = துன்பம்; செத்து = நினைத்து; உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல்; ஐது = நுண்ணியது; கழி = மிகுந்த; முது = பேறறிவு; முதுக்குறை = பேறறிவுடைமை; என்றிசின் = என்றேன்.

உரை:தினைப்புனத்திற்குச் சென்று கிளிகளை வெருட்டுகஎன்று தாய் சொன்னால், பகலில் உன்னைச் சந்திக்க இயலும். ஆனால், தாய் அவ்வாறு சொல்லவில்லை. நீ இனி இரவில் வரலாம் என்றால், நீ வரும் வழியில் உனக்கு நேரக்கூடிய துன்பங்களுக்காக நான் அஞ்சுகிறேன். துன்பத்தைத் தரும் எமது நோயைத் தீர்ப்பதற்கு , என்ன செய்யலாம்?” என்று நான் தலைவனைக் கேட்டேன். நான் அவ்வாறு கூறியதற்கு, உயர்ந்த மலை நாட்டை உடைய தலைவன், வேறு ஒன்றை நினைத்து, அந்நினைவினால் பெருமூச்சு விட்டான். நிச்சயமாக, காமநோய் நுட்பமானது. அவனது குறிப்பை உணர்ந்த நான், ”நீ நினைத்தவாறு செய்வது மிகுந்த அறிவுடைய செயல்தான். ஆனால் அது பழிக்கும் காரணம் ஆகும்என்றேன்.

சிறப்புக் குறிப்பு: தோழி, “எம் நோய்என்றது, தலைவி துன்புறுவது கண்டு தானும் துன்புறுவதைக் குறிக்கிறது.


தலைவன் பிறிதொன்றை நினைத்துப் பெருமூச்சு விட்டான் என்பது, அவன் உடன்போக்கைப் பற்றியும் அதனால் வரும் விளைவுகளைப் பற்றியும் எண்ணிப் பெருமூச்சு விட்டான் என்பதைக் குறிக்கிறது. அதை அறிந்த தோழி, “ அவ்வாறு செய்தலே மிகுந்த அறிவுடைய செயல். ஆனால், அவ்வாறு செவதால் பழி வரும்.” என்று தலைவனிடம் கூறுகிறாள். பழி வந்தாலும் அறிவுடைய செயலைச் செய்வதற்குத் தயங்கக் கூடாது என்று நினைத்த தோழிதலைவனின் கருத்தை ஆமோதிக்கிறாள். தலைவியையும்  உடன்போக்குக்கு உடன்படுமாறு தோழி ஊக்குவிக்கிறாள்

216. தலைவி கூற்று

216.  தலைவி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 213 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பருவ வரவின்கண்ஆற்றாள்எனக் கவன்ற (கவலைப்பட்ட) தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததால் தலைவி ஆற்றாள் என்று கவலையுற்ற தோழியை நோக்கி, “அவர் பொருள் தேடச்சென்றார். நான் அவரை நினைந்து வருந்துகின்றேன். கார்ப்பருவமும் வந்து விட்டது; இனி என் உயிர் நில்லாது போலும்!” என்று தலைவி கூறியது.

அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே
யானே, தோடார் எல்வளை ஞெகிழ ஏங்கிப்
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே
அன்னள் அளியள் என்னாது மாமழை
இன்னும் பெய்ய முழங்கி
மின்னுந் தோழியென் இன்னுயிர் குறித்தே. 

கொண்டு கூட்டு:
தோழி! அவர், கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசுஇலை
வாடா வள்ளியங் காடு இறந்தோர்யான், தோடு ஆர் எல்வளை ஞெகிழ ஏங்கிப்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசின்.  மாமழை அன்னள் அளியள் என்னாது,
என் இன்னுயிர் குறித்தே. இன்னும் பெய்ய முழங்கி மின்னும்.

அருஞ்சொற்பொருள்: விழுப்பொருள் = சிறந்த செல்வம்; தோடு = தொகுதி; ஆர் = அழகிய; எல் = ஒளி; பாடு = தூக்கம்; கூர்தல் = மிகுதல்; மா = கரிய; மழை = மேகம்.


உரை: தோழி! அத் தலைவர், கேடில்லாத சிறந்த செல்வத்தைக் கொண்டு வருவதற்காக, பசுமையான இலைகளையுடைய, வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காட்டைக் கடந்து சென்றார்.  நான் அணிந்திருந்த வளையல்கள் தொகுதியாக, அழகாகாக , ஒளிபொருந்தியனவாக இருந்தன. அவை இப்பொழுது நெகிழும்படி, கவலையுற்று, உறங்குவதற்குரிய படுக்கையில் வீழ்ந்து, மிகுந்த துன்பமுறுகிறேன். நான் அத்தகையதுன்பத்தை உடையவள்; இரங்கத் தக்கவள்என்று எண்ணாமல், கரிய மேகம் இன்னும் மழையைப் பெய்யும் பொருட்டு இடியிடித்து முழக்கம் செய்து, எனது இனிய உயிரைக் கொல்லக் குறிக்கொண்டு மின்னுகிறது.

215. தோழி கூற்று

215.  தோழி கூற்று

பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். இவர் இயற்பெயர் மள்ளனார். இவர் மதுரையைச் சார்ந்த அளக்கர் ஞாழலார் என்பவரின் மகனாகையால் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறதுஇவர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவர் பாடியனவாக அகநானூற்றில் ஏழு பாடல்களும் (33, 144, 174, 244, 314, 344, 353), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (188, 215), நற்றிணையில் மூன்று பாடல்களும் (82, 297, 321), புறநானூற்றில் ஒருபாடலும் (388) காணப்படுகின்றன. அம்மள்ளனார் என்ற பெயருடைய புலவர் ஒருவர் நற்றிணையில் உள்ள 82-ஆம் பாடலை இயற்றியுள்ளார். அம்மள்ளனார் என்பவரும் இப்பாடலை இயற்றிய மள்ளனார் என்பவரும் ஒருவர் அல்லர் என்று கருதப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி,“உன்னுடைய துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து விடுவார்என்று தோழி உறுதி கூறுகிறாள்.

படரும் பைபயப் பெயருஞ் சுடரும்
என்றூழ் மாமலை மறையும் இன்றவர்
வருவர்கொல் வாழி தோழி நீரில்
வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை
குறும்பொறை மருங்கின் அமர்துணை தழீஇக்
கொடுவரி இரும்புலி காக்கும்
நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! நீர்இல் வறுங்கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை குறும்பொறை மருங்கின் அமர்துணை தழீஇக் கொடுவரி இருபுலி காக்கும் நெடுவரை மருங்கில் சுரன் இறந்தோர் சுடரும் என்றூழ் மாலை மறையும் இன்று  அவர் வருவர்! படரும் பைப்பயப் பெயரும்!

அருஞ்சொற்பொருள்: படர் = துன்பம்; பைபய = மெல்ல மெல்ல (பையப்பைய என்பது திரிந்து பைபய என்று வந்தது); என்றூழ் = ஞாயிறு; கயம் = குளம்; துழைஇய = துழாவிய; துழாவல் = கிளறுதல்; இலங்குதல் = விளங்குதல்; மருப்பு = கொம்பு (தந்தம்); பொறை = பாறை; மருங்கு = பக்கம்; அமர்தல் = விரும்புதல்; தழீஇ = தழுவி; கொடு = வளைந்த; வரி = கோடு; இரு = பெரிய; சுரன் = பாலை நிலம்; இறந்தோர் = கடந்து சென்றவர்; கொல்அசைநிலை.

உரை: தோழி! நீ வாழ்க! நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய, விளங்கிய கொம்புகளையுடைய ஆண்யானைகள், சிறிய பாறைகளின் அருகில், தாம் விரும்புகின்ற, தம்முடைய துணையாகிய பெண்யானைகளைத் தழுவி, வளைந்த கோடுகளையுடைய பெரிய புலியின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கின்ற, உயர்ந்த மலைப்பக்கத்தில் உள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய, அத் தலைவர், ஒளியுடன் விளங்குகின்ற ஞாயிறு, பெரிய மலையில் மறைகின்ற மாலை நேரத்தில் இன்று வருவார்! உன் துன்பமும் மெல்ல மெல்ல நீங்கும்.


சிறப்புக் குறிப்பு: ஆண்யானைகள் தம் பெண்யானைகளைப் பாதுகாப்பதைப் பார்த்த தலைவரின் உள்ளம் கனியும். தலைவிமீது உள்ள காதல் அவரை விரைவில் திரும்பிவரச் செய்யும் என்பது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்.

214. தோழி கூற்று

214. தோழி கூற்று

பாடியவர்: கூடலூர்கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 166 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தோழி வெறியாட்டு எடுத்துக் கொண்ட விடத்து அறத்தொடுநின்றது.
கூற்று விளக்கம்: தலைவி உடல் மெலிந்து வருத்தத்தோடு இருப்பதைக் கண்ட  தலைவியின் தாய் முதலியோர் வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்கின்றனர். அதைக் கண்ட தோழி,  “இவளுக்குத் தழையுடை கொடுத்து அன்பு செய்தவன் ஒருவன் இருப்ப, அதனை அறியாது இது முருகனால் வந்தது என மயங்கி வெறியாட்டு நடத்துவதால் பயனில்லை” என்று கூறித் தலைவியின் காதலை வெளிப்படுத்துகிறாள்.

மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய
பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ்
அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி
திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய அயல
தரலை மாலை சூட்டி
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே. 

கொண்டு கூட்டு:
மரங்கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய பிறங்கு குரல் இறடி காக்கும், புறந்தாழ் அம் சில் ஓதி அசையியல் கொடிச்சி திருந்து இழை அல்குற்குப் பெருந்தழை உதவிச் செயலை முழுமுதல் ஒழிய அயலது அரலை மாலை சூட்டி
இவ் அழுங்கல் ஊர் ஏம் உற்றன்று.

அருஞ்சொற்பொருள்: மரம் கொல்லுதல் = மரத்தை வேரோடு அழித்தல்; கானவன் = குறிஞ்சி நிலத்து மகன் (குறவன்); புனம் = கொல்லை; துளர்ந்து = உழுது; பிறங்குதல் = விளங்குதல்; குரல் = கதிர்; இறடி = தினை; புறம் = முதுகு; அம் = அழகிய; சில் = சிலவாகிய; ஓதி = பெண்ணின் கூந்தல்; அசைதல் = மெலிதல், இளைத்தல்; கொடிச்சி = குறிஞ்சி நிலத்துப் பெண்; இழை = அணி (இங்கு மேகலையைக் குறிக்கிறது); அல்குல் = இடை; செயலை = அசோக மரம்; முழுமுதல் = மரத்தின் அடிப்பக்கம்; அரலை = அரளி; ஏமம் = மயக்கம் (ஏம் என்பது ஏமம் என்பதின் திரிபு); அழுங்கல் = ஆரவாரம்.

உரை: மரங்களை வெட்டிய குறவன், கொல்லையை உழுது விளைத்த, விளங்குகின்ற கதிர்களையுடைய தினையைக் காவல் செய்யும், முதுகில் தாழ்ந்த, அழகிய சிலவாகிய கூந்தலையும், அசைந்து நடக்கும் இயல்பையும் உடைய தலைவியின் சிறந்த ஆபரணங்களை அணிந்த இடைக்குத் தகுந்த, பெரிய தழையாலாகிய ஆடையைத் தலைவன் அளித்ததால், அசோக மரத்தின் பெருத்த அடி மரம் தழைகள் இல்லாமல் இருந்தது. அதன் பக்கத்திலே இருந்த அரளி மலர்களைப் பறித்து, அவற்றை மாலையாகத் தொடுத்து, (முருகன் வாழ்வதாகக் கருதப்படும்) கடம்ப மரத்திற்குச் சூட்டி, வெறியாட்டு நடத்தும் ஆரவாரத்தை உடைய இந்த ஊர் மயக்கமுற்றது.


சிறப்புக் குறிப்பு: தலைவன் தலைவிக்குத் தழையாடை தருவது வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது. தலைவன் தழையாடை செய்வதற்காக, அசோகமரத்தின் அடிப்பக்கத்தில் இருந்த இலைகளைப் பறித்ததால், “செயலை முழுமுதல் ஒழியஎன்று கூறப்பட்டது.