Sunday, July 17, 2016

214. தோழி கூற்று

214. தோழி கூற்று

பாடியவர்: கூடலூர்கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 166 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தோழி வெறியாட்டு எடுத்துக் கொண்ட விடத்து அறத்தொடுநின்றது.
கூற்று விளக்கம்: தலைவி உடல் மெலிந்து வருத்தத்தோடு இருப்பதைக் கண்ட  தலைவியின் தாய் முதலியோர் வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்கின்றனர். அதைக் கண்ட தோழி,  “இவளுக்குத் தழையுடை கொடுத்து அன்பு செய்தவன் ஒருவன் இருப்ப, அதனை அறியாது இது முருகனால் வந்தது என மயங்கி வெறியாட்டு நடத்துவதால் பயனில்லை” என்று கூறித் தலைவியின் காதலை வெளிப்படுத்துகிறாள்.

மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய
பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ்
அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி
திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய அயல
தரலை மாலை சூட்டி
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே. 

கொண்டு கூட்டு:
மரங்கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய பிறங்கு குரல் இறடி காக்கும், புறந்தாழ் அம் சில் ஓதி அசையியல் கொடிச்சி திருந்து இழை அல்குற்குப் பெருந்தழை உதவிச் செயலை முழுமுதல் ஒழிய அயலது அரலை மாலை சூட்டி
இவ் அழுங்கல் ஊர் ஏம் உற்றன்று.

அருஞ்சொற்பொருள்: மரம் கொல்லுதல் = மரத்தை வேரோடு அழித்தல்; கானவன் = குறிஞ்சி நிலத்து மகன் (குறவன்); புனம் = கொல்லை; துளர்ந்து = உழுது; பிறங்குதல் = விளங்குதல்; குரல் = கதிர்; இறடி = தினை; புறம் = முதுகு; அம் = அழகிய; சில் = சிலவாகிய; ஓதி = பெண்ணின் கூந்தல்; அசைதல் = மெலிதல், இளைத்தல்; கொடிச்சி = குறிஞ்சி நிலத்துப் பெண்; இழை = அணி (இங்கு மேகலையைக் குறிக்கிறது); அல்குல் = இடை; செயலை = அசோக மரம்; முழுமுதல் = மரத்தின் அடிப்பக்கம்; அரலை = அரளி; ஏமம் = மயக்கம் (ஏம் என்பது ஏமம் என்பதின் திரிபு); அழுங்கல் = ஆரவாரம்.

உரை: மரங்களை வெட்டிய குறவன், கொல்லையை உழுது விளைத்த, விளங்குகின்ற கதிர்களையுடைய தினையைக் காவல் செய்யும், முதுகில் தாழ்ந்த, அழகிய சிலவாகிய கூந்தலையும், அசைந்து நடக்கும் இயல்பையும் உடைய தலைவியின் சிறந்த ஆபரணங்களை அணிந்த இடைக்குத் தகுந்த, பெரிய தழையாலாகிய ஆடையைத் தலைவன் அளித்ததால், அசோக மரத்தின் பெருத்த அடி மரம் தழைகள் இல்லாமல் இருந்தது. அதன் பக்கத்திலே இருந்த அரளி மலர்களைப் பறித்து, அவற்றை மாலையாகத் தொடுத்து, (முருகன் வாழ்வதாகக் கருதப்படும்) கடம்ப மரத்திற்குச் சூட்டி, வெறியாட்டு நடத்தும் ஆரவாரத்தை உடைய இந்த ஊர் மயக்கமுற்றது.


சிறப்புக் குறிப்பு: தலைவன் தலைவிக்குத் தழையாடை தருவது வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது. தலைவன் தழையாடை செய்வதற்காக, அசோகமரத்தின் அடிப்பக்கத்தில் இருந்த இலைகளைப் பறித்ததால், “செயலை முழுமுதல் ஒழியஎன்று கூறப்பட்டது.

No comments:

Post a Comment