Sunday, June 26, 2016

213. தோழி கூற்று

213. தோழி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்.  கச்சிப்பேடு என்பது காஞ்சிபுரத்துக்கு அருகே இருந்த ஓரூர். இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில் இரண்டு பாடல்கள் ( 213, 216)  உள்ளன.
திணை: பாலை.
கூற்று: நம்பெருமான், நம்பொருட்டு இடைநின்று மீள்வர்எனக்கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. (இடைநின்று மீள்வர்பணியை முடிக்காமல் தலைவியை நினைத்து இடைவழியில் திரும்பி வருதல்)
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியின் மீது மிகுந்த விருப்பம் உடையவன். ஆனால், அவன்  பொருள் தேடுவதற்காக அவளைப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவைப் பொறுக்க முடியாமல், தலைவைன் பொருள் தேடும் பணியை இடையிலே நிறுத்திவிட்டு  திரும்பி வந்துவிடுவானோ என்று தலைவி நினைக்கிறாள். “தலைவன் தன் கடமையை நன்கு அறிந்தவன். ஆகவே, தலைவன் தன் பணியை முடித்து, விரும்பிய பொருளைப் பெற்ற பிறகுதான் திரும்புவான்என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல்
ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற்
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
இன்றுயில் முனிநர் சென்ற வாறே. 

கொண்டு கூட்டு: தோழி! நசை நன்கு உடையர். நம் இன்துயில் முனிநர் சென்ற ஆறு ஞெரேரெனக் கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிபசிப்பிணிக்கு இறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல் ஒழியின் உண்டு, வழுஇல் நெஞ்சின்தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழலாகி நின்று வெயில் கழிக்கும் என்ப!

அருஞ்சொற்பொருள்: நசை = விருப்பம்; ஞெரல் = விரைவு; ஞெரேரென = ஞெரேர் +என = விரைவாக; கவை = கிளை; கலை = ஆண்மான்; ஒற்றுதல் = தள்ளுதல் (உதைத்து வீழ்த்துதல்); இறைஞ்சுதல் = வளைதல்; ததரல் = சிதைந்த பட்டை; ஒழியின் = மிஞ்சினால்; வழு = குற்றம்; தெறித்தல் = துள்ளுதல்; மறி = ஆடு, குதிரை, மான் ஆகியவற்றின் குட்டி; முனிநர் = வெறுத்தவர்; ஆறு = வழி.

உரை: தோழி, தலைவர் உன்னிடம் மிகுந்த  விருப்பம்  உடையவர்; ஆயினும், உன்னோடு உறங்கும் இனிய உறக்கத்தை வெறுத்து அவர் பிரிந்து சென்றார். அவர் போன வழியில், கிளை போன்ற கொம்பை உடைய தலையைப் பெற்ற முதிய ஆண்மான், விரைவாகக் காலால் உதைத்துப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வளைத்த, பருத்த பெரிய மரப் பட்டையை தனது குட்டி உண்டபின், எஞ்சினால் தான் அதை உண்டு, குற்றம் இல்லாத நெஞ்சோடு, துள்ளி நடத்தலாகிய இயல்பினையுடைய,  தனது குட்டிக்கு நிழலாகி, நின்று வெயிலை நீக்கும், என்று கூறுவர்.

சிறப்புக் குறிப்பு:   வழு என்பது  அறத்தின் நீங்கிய செயலைக் குறிக்கிறதுதன் குட்டி பசித்திருக்கத்  தான் உண்பதும், அது வெயிலால் வாடத் தான் ஓடுவதும் அறத்தின் நீங்கிய செயலாதலால் அவை வழுவாகும்.  தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுதலில் நாட்டம் இன்றித் தன் குட்டியின் பசியை முதலில் நீக்கியும், தன்மேல் படும் வெயிலின் வெம்மையைக் கருதாமல் தன் குட்டிக்கு நிழலாக இருந்து தன் கடமையைப் புரிந்ததால் ஆண்மான் வழுவில்லாத நெஞ்சுடையது என்ற கூறப்பட்டது.
தலைவர் சென்ற வழியில், தன்னலம் கருதாது தன் குட்டியின் நலத்தைப் பேணுவதைத் தன் கடமையாகக் கொண்ட ஆண்மானைக் காண்பார். அந்த ஆண்மானைப் போலத் தம் விருப்பத்தை மட்டும் கருதாது தமக்கு இல்லறத்தில் உள்ள கடமையை நினைத்து அதற்கு உரிய பொருளைத் தேடிய பிறகுதான் திரும்பி வருவார் என்பது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்.

இப்பாடல், தொல்காப்பியத்தில் உள்ள பாடல் ஒன்றுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தலைவி இறைச்சிப் பொருள் வைத்துக் கூறுமிடங்கள் என்ற தலைப்பில் தொல்காப்பியத்தில் கீழ்வரும் அடிகள் காணப்படுகின்றன.
புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து
இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி
அன்புறு தக்க கிளத்தல் தானே
கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும். (தொல்காப்பியம் – 1094)

பொருள்: முன்பு களவொழுக்கத்தில் இருந்த பொழுது, தலைவி உடன்போக்கில் சுரவழியில் நடைபெறும் காட்சிகளைக் கண்டாள். பாலை நிலத்தில் உள்ள கருப்பொருளாகிய பறவைகளைப் பற்றியும் விலங்குகளைப் (புறா, மான், யானை, குருவி முதலியவற்றைப்) பற்றியும் அவள் பேசுவாள். அவற்றின் அன்பான வாழ்க்கையைச் சுட்டிப் பேசும் அவள், அவற்றைப் பார்க்கும் தலைவன், தான் பொருள்தேடச் சென்ற பணியை முற்றிலும் முடிக்காமல் திரும்பி வந்துவிடுவானோ என்று அஞ்சுவாள்.

No comments:

Post a Comment