Sunday, June 26, 2016

206. தலைவன் கூற்று

206.  தலைவன் கூற்று

பாடியவர்: ஐயூர் முடவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 123 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: கழறிய (இடித்துரைத்த) பாங்கற்குக் கிழவன் உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண் மீது காதல் கொண்டு காமநோயால் வருந்துகிறான். அதைக் கண்ட தோழன் தலைவனை இடித்துரைக்கிறான். அதைக் கேட்ட தலைவன், “நான் அறியாமையால் காம நோயுற்றேன். அறிவுடையவர்களே! நீங்கள் என்னுடைய நிலைக்கு ஆளாகாமல் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்என்று கூறுகிறான்.

அமிழ்தத் தன்ன அந்தீங் கிளவி
அன்ன இனியோள் குணனும் இன்ன
இன்னா அரும்படர் செய்யு மாயின்
உடனுறை வரிதே காமம்
குறுக லோம்புமின் அறிவுடை யீரே. 

கொண்டு கூட்டு:
அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி  அன்ன இனியோள் குணனும், இன்ன இன்னா அரும்படர் செய்யுமாயின்காமம் உடன்உறைவு அரிதே! அறிவுடையீரே! குறுகல் ஓம்புமின்!

அருஞ்சொற்பொருள்: அம் = அழகிய ; அன்ன = போன்ற, அத்தகைய; தீம் = இனிய ; கிளவி = சொல்; இன்ன = இத்தகைய; இன்னா = துன்பம்; படர் = துன்பம்; ஓம்புமின் = தவிருங்கள்.

உரை:, என் காதலி அமிழ்தத்தைப்போன்ற, அழகிய இனிமை நிறைந்த  சொற்களைப் பேசுபவள்.  அதுபோல், அவள் இனிய குணமும் உடையவள். இத்தகையவள் மீது நான் கொண்ட காமம் மிகுந்த துன்பங்களை உண்டாக்குமாயின், காமத்தோடு ஒத்து வாழ்வது அரிது. ஆகவே,  அறிவையுடையவர்களே! காமத்தை அணுகுவதைத் தவிருங்கள்.
அரும்படர் என்றது மருந்துகளால் தீர்க்க முடியாத துன்பத்தை குறிக்கிறது.இங்கு,
 பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.                               (குறள் – 1102)


என்ற குறள் ஒப்பு நோக்கத் தக்கது.

No comments:

Post a Comment