Sunday, July 17, 2016

218. தலைவி கூற்று

218. தலைவி கூற்று

பாடியவர்: கொற்றனார். இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில்  உள்ள இரண்டு படல்கள்  (218, 358) மட்டுமே சங்க இலக்கியத்தில் உள்ளன.
திணை:
பாலை.
கூற்று: பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்து.
கூற்று விளக்கம்: தலைவி, பிரிவைப் பொறுத்துக்கொள்ள மாட்டாள் என்று கவலைப்பட்ட  தோழியை நோக்கி, “தலைவர் நம் உயிர்க்கு உயிர் போன்றவர்; அவரைப் பிரிந்து கணப்பொழுதும் வாழும் வலிமை எனக்கு இல்லை. இத்தகைய நிலையில் உள்ள என்னை மறந்து அவர் சென்றை இடத்திலேயே இருப்பாராயின், அவருக்காக கடவுளை வேண்டுதலும், நிமித்தம் பார்த்தலும் என்ன பயனைத் தரும்?” என்று தலைவி கூறுகிறாள்.


விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியு நில்லாம்
உள்ளலு முள்ளா மன்றே தோழி
உயிர்க்குயிர் அன்ன ராகலிற் றம்மின்
றிமைப்புவரை யமையா நம்வயின்
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே. 

கொண்டு கூட்டு: தோழி!  உயிர்க்குயிர் அன்னர் ஆகலின், தம் இன்று  இமைப்பு வரை அமையா நம்வயின் மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டு, விடர்முகை அடுக்கத்து, விறல்கெழு சூலிக்குக் கடனும் பூணாம்; கைந்நூல் யாவாம்புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்; உள்ளலும் உள்ளாம்

அருஞ்சொற்பொருள்: விடர்முகை = பிளவுள்ள குகை; விறல் = வெற்றி; சூலி = கொற்றவை; கடன் = பலி; கைந்நூல் = காப்பு; யாத்தல் = கட்டுதல்; புள் = நிமித்தம் (சகுனம்); ஓர்தல் = ஆராய்தல்; விரிச்சி = வாய்ச்சொல் ( அசரீரி); உள்ளல் = நினைத்தல்; அன்றுஅசைச்சொல்;  இமைப்பு = இமைப்பொழுது.


உரை: தோழி! நம் தலைவர் நமக்கு உயிருக்கு உயிரைப் போன்றவர். அவரை இமைப்பொழுதும் பிரிந்திருக்க முடியாத நம்மை மறந்துவிட்டு, அவர் தாம் தாம் சென்ற  இடத்திலேயே தங்குவதில் மனவலிமை மிக்கவராக உள்ளார். இனி, அவருக்காக, பிளவுற்ற குகைகளையுடைய மலைப்பக்கத்தில் உள்ள, வெற்றி பொருந்திய கொற்றவைக்குப் பலி கொடுக்க மாட்டோம்; கையில் காப்பு நூலைக் கட்டிக்கொள்ள மாட்டோம்; நற்சொற்களைக் கேட்பதாற்காகச் சென்று நிற்க மாட்டோம். இனி, அவரை மனத்தாலும் நினைக்க மாட்டோம்

No comments:

Post a Comment